இயற்கை பற்றிய குறிப்புகள்
* மரம் இருந்த வாசல்
வெறிச்சோடிக் கிடந்தது
காற்றேயில்லை
கயிற்றுக் கட்டிலை
நம் தாத்தாவோடு நாம் எரித்திருந்தோம்!
* மின்னல் விழுந்து
பனை மரம் எரிந்துபோன கதையெல்லாம்
இப்போது நடப்பதில்லை;
பனை மரம் வெட்டப்பட்டபோதே
மின்னலையும்
நிறைய வெட்டிவிட்டோம் நாம்!
* ஒரு மரம் வெட்டினேன்
காக்கைகளும் குருவிகளும் வீடிழந்து அலைந்தன,
இன்னும் பல மரங்கள் தேவைப்பட்டன
எனக்கான ஒரு வீடு கட்ட
* மழைக்குத் தெரியாது
வந்து வந்து போகும்போது
எத்தனை பேர் இருக்கிறோம்;
எத்தனை பேர் இல்லையென்று...
* புயல் வீசி
மரங்கள் சாய்ந்து
பல உயிர்கள் அழிந்து
மனிதர் இறந்தது மட்டுமே
செய்தியில் சொல்லப்பட்டது;
மற்ற உயிர்களுக்கும்
கையிருந்தும் காலிருந்தும்
பசியிருந்தும் வலியிருந்தும்
வாழ்க்கையிருந்தும்
பெரிய பொருட்டாக அது தெரியவில்லை
மனிதன் தனக்கான கொலையைத் துவங்கிய இடம்
இப்படி தன்னை மட்டும்
பெரிதாகக் காத்த இடமாக இருக்கலாம்
* இடி இடிக்கும்போது
படுக்கையை சுருட்டிக்கொண்டு
வீட்டினுள் ஓடுவோம்.
இப்போதும் இடி இடிக்கிறது,
படத்தில் பார்க்கும்போதே
காதைமூடிக் கொள்கிறோம்...
வித்யாசாகர்