நியூஸ் வே



தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். நடனம், சண்டை என ஸ்பெஷல் பயிற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. தமிழின் மிகச்சிறந்த படங்களின் டிவிடிக்களை எடுத்துக்கொடுத்து, அதையெல்லாம் பார்க்கும்படி சொல்கிறார் தங்கர். லயோலாவில் படிப்பை முடித்த பிறகும் தொடர்கிறது படிப்பு!

இடையழகி இலியானா மும்பையில் முகாமிட்டிருக்கிறார். ‘மெயின் தேரா ஹீரோ’ இந்திப் படத்தில் வருண் தவான் ஜோடியாக நடித்து வருகிறார். உதட்டு முத்தக் காட்சியில் நடிக்க ஹீரோ முகம் வியர்த்துத் தயங்கியபோது, அவரை இழுத்து அணைத்து உம்மா கொடுத்து டேக்கை முடித்து வைத்திருக்கிறார்.

ஹன்சிகா, நயன்தாரா இரண்டு பேரும் போன வாரம் ஒரே ஃப்ளைட்டில் ஐதராபாத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு ஹலோ, புன்சிரிப்பு, டாட்டா கூட இல்லையாம். இருக்காதா பின்னே!

தைரியசாலியாகத்தான் இருக்கிறார் அமலாபால். சமுத்திரகனியின் அடுத்த படத்திலும் அவர்தான் நாயகி. இதில் அவருக்கு இரட்டை வேடம் என்பது கூடுதல் ஸ்பெஷல். 45 வயதைத் தாண்டிய நரைத்த தலை கதாபாத்திரத்திற்கும் மேக்கப் போட சம்மதித்துவிட்டாராம். அமலாபாலின் அப்பா வேடத்தில் சமுத்திரகனியே நடிக்கிறாராம்.

கொஞ்ச நாளைக்கு இயக்குவதைத் தள்ளி வைத்து
விட்டு, நடிப்பதில் இறங்கப் போகிறார் அமீர். பெப்ஸி தலைவராக அடுத்த தேர்தலில் போட்டியிட எண்ணம் இல்லையாம். தொழிலாளர் நலனில் அக்கறைப்பட்டு கிரியேட்டிவ் சைடு குறைந்து விட்டது என அவரது நண்பர்கள் கருதுகிறார்கள்.

‘என்னமோ ஏதோ’ பட நாயகி நிகிஷா படேலுக்கு கத்ரினா கைஃப் போல கலக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். கத்ரினாவைப்போலவே இவரும் லண்டனிலிருந்து வந்தவர்தான். தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பிடிக்க சென்னையிலேயே சொந்த வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்கி விட்டார்.

காலம் கடந்த முடிவுதான் என்றாலும், இப்போதாவது இந்த முடிவை எடுத்தாரே என்று இசைஞானியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். கார்த்திக் ராஜா தலைமையில் இளையராஜாவுக்கு அதிகாரபூர்வமான ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நற்பணிகளை ஆற்ற ராஜா நேசர்கள் ப்ரியப்படு
கிறார்களாம்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குநர் வெற்றிமாறனின் புதுப்படத்தில் இன்ஸ்பெக்டராக ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பெரிதாக பேசப்படுகிற வேடமாம். அந்தச் செய்தியை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இனிமேலும் அது ரகசியமா!

டைரக்டர் விஜய் ‘சைவம்’ பட ரிலீஸுக்குப் பிறகு மணப்பெண்ணின் பெயரை அறிவிப்பேன் என சொல்லிவிட்டதால் அவர் வீட்டிலும், ‘அந்தப் பெண்’ வீட்டிலும் பர
பரப்பில் இருக்கிறார்கள். ‘‘சஸ்பென்ஸை உடைங்க’’ எனச் சொன்னால் சிரிக்கிறார் விஜய். சாஃப்ட்டா, அமைதியா இருக்கிறவங்களை நம்பவே கூடாதுங்க சாமி!

தனுஷ், சிம்பு நட்பு நாளாக நாளாக இறுகிக்கொண்டு இருக்கிறது. எல்லா முக்கிய ஸ்பாட்களிலும் இருவரும் சேர்ந்து காணப்படுகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் விதமாக, தனுஷ் தயாரிக்கும் ‘காக்கா முட்டை’ படத்தில் சிறு வேடத்தில் வந்து போகிறார் சிம்பு. அவர் நடிக்கும் பாண்டிராஜ் படத்தில் தனுஷ் வந்து போனாலும் ஆச்சரியப்பட வேண்டாம்!

‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தில் கமல் - ஆண்ட்ரியா இடையே லேசாகத் தென்படும் ரொமான்ஸ் ஏரியா, இரண்டாம் பாகத்தில் ஸ்ட்ராங்காக இருக்கிறதாம். கமலின் மறைமுக மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் ஆண்ட்ரியா.

‘உத்தம வில்லன்’ படம் முடிந்ததும், கமல்ஹாசன் தன் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறார். அனேகமாக அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகிறவர்கள் அனைவரும் இலக்கிய ஆளுமைகளே. கேரள, கன்னட இலக்கிய ஆளுமைகளும் கலந்துகொள்கிறார்கள். ஏறத்தாழ 100 கவிதைகள் அடங்கிய
தொகுப்பு அது.

பாரதிராஜா திருவனந்தபுரத்திற்கு போய் வரிசையாக மலையாளப் படங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவரையே தலைவராகப் போட்டு, சிறந்த படத்துக்கான தேர்வுக்குழு செயல்படுகிறது. கேரள அரசு அவரை மதித்துக் கூப்பிட்டாலும், இங்கே நடந்த சினிமா விழாவிற்கு அவருக்கு முறையான அழைப்புக் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டைரக்டர் சசிகுமாரின் கைகளில் நாதஸ்வரம் கொடுத்து விட்டார் டைரக்டர் பாலா. அதேமாதிரி வரலட்சுமியின் தலையில் கரகத்தை வைத்துவிட்டார். இருவரும் ஊதவும், ஆடவும் பழகி வருகிறார்கள். கொஞ்சம் ‘செட்’ ஆனதும் உடனே ஷூட்டிங் ஆரம்பம். சசிகுமார் நீளமாக முடி வளர்த்துவிட்டார். சல்ஸா ஆடிய கால்கள், கரகத்திற்கு ரெடியாகி வருகின்றன.

‘கோச்சடையான்’ படத்தை கமலுக்கு போட்டுக் காட்டச் சொல்லியிருக்கிறார் ரஜினி. முதல் காப்பி தயாரானதும், அதை கமலுக்கு காட்ட ரெடியாகி வருகிறார் சௌந்தர்யா. அதோடு ‘‘படத்தை ‘அவதார்’ அளவுக்கு என்றெல்லாம் ஃபீல் பண்ணிச் சொல்ல வேண்டாம், அளவாக விளம்பரம் செய்யுங்கள்’’ எனவும் சொல்கிறார் ரஜினி.