நியூஸ் வே



ஜனாதிபதி மாளிகையில் பத்மபூஷண் விருது வாங்கப் போன கமல்ஹாசனோடு சேர்ந்து நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள ஆசையாகக் கூப்பிட்டார்கள் பத்திரிகை புகைப்படக்காரர்கள். அங்கு இப்படியெல்லாம் படம் எடுப்பதே அபூர்வமான விஷயம். பிரமாண்ட தூண்களின் பின்னணியில் கமலோடு அவர்கள் ஆசையாக எடுத்துக் கொண்ட படம் இதுதான். ‘விஸ்வரூபம் 3?!

அடுத்த வருடம் நிச்சயமாக விஷாலுக்கு திருமணம். அந்த உறுதியை இந்த பிறந்த நாளின்போதுதான் அவரிடமிருந்து அப்பா, அம்மா பெற்றுக்கொண்டார்களாம். அதனால் இரண்டு படங்களை அதற்குள் தயாரித்து முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் விஷால். ‘கிஸ்ஸிங்’ சீனையும் இப்பவே நடிச்சு முடிச்சுடுங்க பாஸ்!

இந்தி ‘கோச்சடையான்’ அறிமுக விழாவுக்கு ரஜினி கூப்பிட்டதும் குடும்பத்தோடு வந்துவிட்டார் அமிதாப். மருமகள் ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி, அவரது அம்மாவும் வந்திருந்தது ஸ்பெஷல் தருணம். அமிதாப்பின் அன்பில் ரொம்பவே நெகிழ்ந்த ரஜினி, படத்தைப் பற்றி அதிகம் பேசவில்லை. ‘‘முன்பு ‘எந்திரன்’, இப்போது ‘கோச்சடையான்’ என டெக்னாலஜி தொடர்பான படங்களில் நடித்திருந்தாலும், எனக்கு லேட்டஸ்ட் டெக்னாலஜி அவ்வளவாகத் தெரியாது. டைரக்டர்கள் சொல்கிறார்கள்; நான் நடிக்கிறேன். அவ்வளவுதான்!’’ என இயல்பாகச் சொன்னார் அவர். மனசிலிருந்து பேசறார்!

கத்திச் சண்டை, குதிரை ஏற்றம் என ஏகத்துக்கும் வீர விளையாட்டுகளைக் கற்று வைத்திருக்கிறார் அனுஷ்கா. ஆரம்பத்தில் யோகா டீச்சராக பணிபுரிந்திருப்பவர், ‘பாகுபலி’ படத்தை முடித்ததும் ஏழை குழந்தைகளுக்கு யோகா கற்றுத் தரும் திட்டம் வைத்திருக்கிறாராம்.

ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. கனடாவை சேர்ந்த தமிழ் அமைப்பு நடத்திய சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட த்ரிஷா, அதற்காக கணிசமான தொகை வாங்கியிருக்கிறார். டக்ளஸ் தேவானந்தம் நிதி உதவியில்தான் அந்த நிகழ்ச்சி நடந்ததாக தகவல் பரவ, தனக்கு எதிராக போராட்டம் கிளம்புமோ என்று அஞ்சுகிறாராம்.

தான் இயக்கிவரும் ‘உன் சமையல் அறையில்’ பாடல் பதிவு தொடர்பாக கடந்த வாரம் இளையராஜாவை சந்திக்கச் சென்றிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அங்கு யதேச்சையாக பாலாவும் இருக்க, பாலாவின் கரகாட்டம் தொடர்பான படத்துக்கு ரெடியான பாடல்களை போட்டுக் காட்டியிருக்கிறார் இசைஞானி. கேட்டு நெகிழ்ந்த பிரகாஷ்ராஜ், இளையராஜாவின் காலைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டிருக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத ராஜா, ‘‘உங்களையெல்லாம் சந்தோஷப்படுத்தத்தானே பாட்டு போடுறேன், நீங்க அழறீங்களே’’ என்று பிரகாஷ்ராஜை சமாதானப்படுத்தியிருக்கிறார்.

அதர்வா எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்வதற்கு முன் டைரக்டர் பாலாவிடம் ஒன்லைன் சொல்லி, ‘‘ஓகே சொல்லிடவா’’ எனக் கேட்கிறார். அப்பா இறந்த பிறகு பாலாவை அண்ணன் மாதிரியே நினைத்து ஆலோசனை கேட்கிறார் அதர்வா. பாசக் கிளியே..!

‘நெடுஞ்சாலை’ ஹீரோயின் ஷிவதாவை ‘மினி நயன்தாரா’ என்று எல்லோரும் புகழ்கிறார்களாம். பாசில் இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமானவர், ‘‘கதைக்குத் தேவைப்பட்டால்கூட நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்’’ என்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் எந்த சினிமா நட்சத்திரமும் தேர்தலில் போட்டியிடவில்லை. பிற மாநிலங்களில் நிறைய சினிமா நடிகர்,  நடிகைகள் களத்தில் நிற்கிறார்கள்.

‘தெனாலிராமன்’ படத்தில் வடிவேலு ஜோடியாக நடிக்க அரை டஜன் நாயகிகள் மறுக்க, கடைசியாக ஓகே சொன்னவர்தான் மீனாட்சி தீட்சித். ‘‘இந்தப் படத்தை நான் மறுத்திருந்தால் இந்தியாவிலேயே சிறந்த நகைச்சுவை நடிகருடன் இணைந்து நடிக்கும் பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணியிருப்பேன்’’ என வடிவேலுவைப் புகழ்கிறார் அவர்.

சிம்பு-ஹன்சிகா காதல் முறிவால் சிக்கித் தவிப்பது ‘வாலு’தான். அறுந்த வாலாக சிக்கித் தவிக்கிறது படம். எப்படியாவது இரண்டு பேரையும் கட்டிச் சேர்த்து படத்தை முடிக்க வேண்டிய நிலைக்கு வர படாத பாடுபடுகிறார் டைரக்டர் விஜய்சந்தர்.

‘குக்கூ’ படத்தில் நடித்த மாளவிகா நாயர் இனி சினிமாவில் நடிப்பதில்லை என முடிவு செய்துவிட்டார். நல்ல கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என முடிவோடு இருந்த டைரக்டர்களுக்கு இது பெரிய அதிர்ச்சி. ‘‘எனக்கு பைலட் ஆவதுதான் லட்சியம். சும்மா ஜாலிக்காக இதில் நடித்தேன்’’ என்கிறாராம். மலேசிய விமானத்துல மட்டும்
பைலட் ஆயிடாதீங்க தாயீ..!

ஆர்யா விழித்துக் கொண்டு விட்டார். நயன்தாரா, ஹன்சிகா, டாப்ஸி என கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. ‘‘என் படங்கள் பற்றி மட்டும் கேட்டால்தான் பேட்டி’’ என்கிறார். ‘‘கல்யாண ஏற்பாடுகள் நடப்பதால் இந்தக் கண்டிஷன்’’ என கண்ணடித்து சொல்கிறார்.

பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்திருக்கிறார் அமலாபால். ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்திபனின் நையாண்டிகளை மிகவும் ரசித்த அமலாபால், நட்பு வட்டத்தில் பார்த்திபன் புகழ் பாடி வருகிறாராம்.