உங்களுக்கு ஆன்டிபயாடிக் அவசியமா?



தெரிந்துகொள்ள சிம்பிள் டெஸ்ட்

ஆன்டிபயாடிக்.

இந்த வார்த்தை மெத்தப் படித்தவர்களிடம் பிரபலம். சளி, இருமல் என்றால் உடனே ‘ஒரு ஆன்டிபயாடிக் போட்டுக்கோ’ என்று சாதார ணமாகச் சொல்வார்கள். கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மருத்துவ சாதனை என்று போற்றப்படுவது, ஆன்டி பயாடிக்குகளைக் கண்டு பிடித்ததுதான். உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்தான பென்சிலின் மருத்துவத் துறையில் பெரும் புரட்சியைச் செய்தது.

உலக அளவில் 1930க்கு முன்பு சிறிய வெட்டுக்காயம், சாதாரண சளிகூட பலரது மரணத்துக்குக் காரணமாக அமைந்தன. பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் அசுர வேகத்தில் பரவி, பல்லாயிரம் உயிர்களைப் பலி வாங்கிய வரலாறு உண்டு. ஆன்டிபயாடிக்கின் வரவு மனித குலத்தை மிகப் பெரிய அழிவிலி ருந்து காப்பாற்றி இருக்கிறது.

அதே நேரத்தில் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் எது மனிதனின் அற்புதக் கண்டு பிடிப்பாகக் கருதப்பட்டதோ, அதே ஆன்டிபயாடிக் இப்போது முனை மழுங்கிய வாளாக தன் சக்தியை இழந்துகொண்டி ருக்கிறது. ‘கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகள் இப்போது ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டு பலத்த ஆதிக்கம் செலுத்துகின்றன.

இதனால் சாதாரண நோய் களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஆன்டிபயாட்டிக்குகள்கூட தங்கள் செயல்திறனை இழந்து நிற்கின்றன. அற்புதங்கள் புரியும் ஆன்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ‘கிருமிகளின் எதிர்ப்பு சக்தி’ (Antibiotic Resistance)   நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு என்ன காரணம்?

ஆன்டிபயாடிக் என்பது இரட்டை முனை கத்தி போன்றது. இதன் அளவு குறைந்தாலும் ஆபத்து; கூடினாலும் ஆபத்து. இதில் இரண்டாவது கருத்துக்குச் சரியான உதாரணம் இது. இந்தியாவில் சாதாரண சளிக்கு வழக்கமாக பயன்படுத்தக்கூடிய அமாக்ஸிசிலின் மருந்து அதீதமாக பயன்படுத்தப்பட்ட காரணத்தால், அது பலன் தரும் திறனை இழந்துவிட்டது.

அதற்கு பதிலாக இப்போது அதைவிட வீரியம் நிறைந்த ஆன்டிபயாடிக்குகளையே அலோபதி மருத்துவம் பயன் படுத்துகிறது. இவற்றின் விலையோ அதிகம். பக்கவிளைவு களும் கூடுதல்.

சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றைக் கூட 18 சதவீத மருத்துவர்கள் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக் மாத்திரை, ஊசி மருந்து மூலம் குணப்படுத்த முற்படுகிறார்கள். நோயாளிகளும் உடனடியாக குணமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் இம் மாதிரியான சிகிச்சையை விரும்புகிறார்கள்.

நகரங்களில் தனியார் மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதும், கிராமங்களில் போலி மருத்துவர்கள் ஆதிக்கம் செலுத்துவதும், மக்கள் சுய மருத்துவம் செய்துகொள்வதும் இந்தியாவில் அதிகமான ஆன்டி பயாடிக் பயன்பாட்டிற்குக் காரணமாக அமைகின்றன.

இதனால் ‘‘50 சதவீதம் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்களும் சரி, நோயாளி களும் சரி, அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ பயன் படுத்துகிறார்கள்’’ என்கிறது இந்திய பொது சுகாதாரத்துறை. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் விற்பனையைக் கூட்டு வதற்காக போட்டி போட்டுக் கொண்டு  இதை ஊக்குவிக்கின்றன.

இதன் விளைவால் ‘‘இந்தியாவில் 53 சதவீதம் பேர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆன்டிபயாடிக்கு களைப் பயன் படுத்துபவர்களாக இருக்கி றார்கள்’’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்த நிலைமை நீடித்தால், எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது சாதாரண சளி, இருமல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம். நோய் என்று வந்துவிட்டால் அதற்கான காரணத்தைத் தெரிந்து சிகிச்சை பெற வேண்டும். முக்கியமாக ஆன்டிபயாடிக் மருந்து தேவையா என்று தெரிந்த பிறகே அதைச் சாப்பிட வேண்டும். தேவை யில்லாமல் இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அது எச்சரித்துள்ளது.

சரி, ஒருவருக்கு ஆன்டிபயாடிக் மருந்து தேவையா, இல்லையா என்று எப்படித் தெரிந்து கொள்வது? இதுவரை இதைக் கண்டுபிடிக்க ‘கல்ச்சர் மற்றும் சென்சிட்டிவிட்டி’ என்று ஒரு பரிசோதனை உதவியது. நோயாளியின் ரத்தம், சிறுநீர் போன்ற வற்றில் உள்ள கிருமிகளை வளர்த்து, அவை எந்த மருந்துக்குக் கட்டுப் படுகிறது என்று கண்டு பிடிக்கும் பரிசோதனை இது. ஆனால் இதன் முடிவு தெரிய ஒரு வாரம் வரை ஆகலாம்.

அதுவரை நோயாளிக்கு ஏதாவது ஒரு ஆன்டிபயாடிக் மருந்தைக் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், இப்போது நிலைமை மாறியுள்ளது.இஸ்ரேலில் உள்ள மீமெட் நிறுவனம் நோயாளிக்கு ஆன்டிபயாடிக் தேவையா, இல்லையா என்பதை இரண்டு மணி நேரத்துக்குள் தெரிவிக்கும் பரிசோதனை ஒன்றை இப்போது கண்டுபிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் இரான் ஈடன் (Eran Eden) இதன் தொழில்நுட்பம் பற்றிச் சொல்கிறார்.

‘‘இதுவரை நடைமுறையில் இருக்கும் பரிசோதனைகள் எல்லாமே நோயாளியிடம் காணப்படும் நோய்க் கிருமியைக் கண்டறிந்து அது பாக்டீரியாவா, வைரஸா என்று தெரிவிக்கும். ஆனால் எங்கள் பரிசோதனை, நோய் எதிர்ப்பு சக்தியை ஆராய்ந்து அதன் வழியாக நோய்க்கிருமி எது என தெரிவிக்கும்.

வழக்கத்தில் ஒரு பாக்டீரியாவோ, வைரஸ் கிருமியோ உடலுக்குள் புகுந்ததும் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தின் புரதக்கூறுகளைத் தூண்டு கின்றன. இவற்றில் பாக்டீரியா வால் தூண்டப்படும் மூன்றுவித புரதங்களையும் வைரஸால் தூண்டப்படுகிற மூன்று வேறுபட்ட புரதங்களையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

எளிய ரத்தப்பரிசோதனையில் இந்தப் புரதங்களைக் கண்டறியும் வழிமுறைதான் நாங்கள் கண்டுபிடித்துள்ள பரிசோத னைக்கு அடிப்படை. ‘இம்யூனோ எக்ஸ்பர்ட் இம்யூன் சிக்னேச்சர்’ (Immuno Xpert  immune Signature)   என்பது இதன் பெயர். நோயாளியைப் பாதித்துள்ளது பாக்டீரியாவா, வைரஸா என்று இது துரிதமாகவும் மிகத் துல்லியமாகவும் கண்டுபிடித்துச் சொல்லி விடும். இந்தக் கண்டு பிடிப்பின் பயனாக நோயாளி களுக்கு இனி தேவையில்லாமல் ஆன்டிபயாடிக் மருந்தைத் தருவது தடுக்கப்படும்’’ என்கிறார் ஈடன்.

(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்