சுமந்த கைகளைப் பற்றிக்கொள்வோம்



மழைக்காலம்

மழைக்காலம் வந்தாலே முதியோருக்கு திண்டாட்டம்தான். பருவநிலை மாற்றம் முதியவர்களுக்கு அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது. உடல்ரீதியாக பல பிரச்னைகளை ஏற்படுத்தி அவர்களை நிலை தடுமாறச் செய்துவிடும். நம் வீட்டு முதியவர்களும் நம் குழந்தைகளைப் போன்றே கவனத்துடன் பாதுகாக்கப்பட  வேண்டியவர்கள். எனவே மழைக்காலத்தில் முதியோரை எப்படிப் பாதுகாப்பது என்ற கேள்வியோடு முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜன் அவர்களை அணுகியபோது, பல பயனுள்ள தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்:

‘‘மழை நேரத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆஸ்துமா நோயால் பாதிப்புக்குள்ளான முதியவர்களே. இவர்கள் ஸ்வெட்டர் போன்ற சூட்டைத் தரக்கூடிய உடைகளை மழை நேரத்தில் அதிகம் அணிய வேண்டும். கால்களில் எப்போதும் காலுறை அணிந்து காலணி போட வேண்டும். மேலும் காதுகளுக்குள் குளிர்ந்த காற்று உட்புகா வண்ணம் பஞ்சைக் கொண்டு காதுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும்.

இன்ஹேலர் போன்ற மருந்து உபகரணங்களை எப்போதும் வீடுகளில் முன்கூட்டியே வாங்கி வைத்திருத்தல் வேண்டும். இதயநோய் உடைய முதியவர்கள் எப்போதும் வெளியில் சென்றாலும் அவர்களுடன் சிறிய வடிவிலான நைட் ரேட் மாத்திரைகளை உடன் எடுத்துச் செல்லுதல் வேண்டும். வலி வந்ததும் அவற்றை எடுத்து நாக்கிற்கு அடியில் வைத்துக்கொண்டால் திடீர் என வரும் வலியிலிருந்து தப்பலாம்.

மனிதர்களுக்கு வயது ஆக ஆக, நோய்களை எதிர்த்துச் செயல்படும் ரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் பல செல்களின் செயல்திறனும் குறைகிறது. பல்வேறு நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளும், நோய் எதிர்ப்புச் சக்தி குறையக் காரணமாக உள்ளன. இதனால், முதியோர், தொற்று நோய்களுக்கு எளிதில் ஆளாகின்றனர்.

எனவே இவர்கள் சத்தான உணவுப் பொருட்களுடன், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களையும் பாதாம் போன்ற பருப்பு வகைகளையும் மற்றும் பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை பெறலாம். மழை நேரத்தில் தண்ணீரைக் குறைவாகக் குடிப்பதால் இவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை அதிகம் வரும்.

எனவே மழை நேரங்களில் அதிகமாக பழங்களையே உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். கொய்யாப் பழம், வாழைப்பழம் மற்றும் உலர் பழங்களை அதிகம் சாப்பிடலாம். ஃபிரிட்ஜில் வைத்து பழங்களைச் சாப்பிடுதல் கூடாது. எப்போதும் தண்ணீரை நன்றாகக் காய்ச்சி ஆறவைத்து வெதுவெதுப்பான நீரையே பருகவேண்டும். குளிர்ச்சியான பானங்களைத் தவிர்த்து சூப் போன்ற சூடான பானங்களைப் பருகுதல் நன்று. எப்போதும் சூடான உணவுகளையே உண்ணுதல் வேண்டும்.

சில தடுப்பூசிகளின் மூலமும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, முதுமையில் தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம். ப்ளூ காய்ச்சல் வராமல் இருக்க செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான மழை மற்றும் குளிர்காலத்தில் ஆண்டிற்கு ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நிமோனியா நோய்த் தாக்குதல் என்பது சளி மற்றும் இருமலோடு உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் ஒருவகைத் தொற்று. இதைத் தடுக்க முதிய வயதினர் 50 வயதிற்கு பின் ஒரு முறை இதற்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டால் போதும்.

சிலருக்குத் தேவையைப் பொறுத்து 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒருமுறை இந்த ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டி வரும். மென்மைதன்மை கொண்ட சோப்புகளை உபயோகப்படுத்துதல் வேண்டும். தோலில் வெடிப்பு, சுருக்கம் வராமல் இருக்க தேங்காய் எண்ணை மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி போன்றவைகளைத் தடவலாம். பயத்த மாவை அரைத்து உடலில் தடவிக் குளித்தாலும் தோல் வறட்சியடையாமல் தடுக்க உதவும்.

முதியவர்களுக்கு கால் எலும்பு மூட்டுக்கள் தேய்மானம் ஏற்பட்டு வலி அதிகம் ஏற்படும். கட்டாயம் சிறிய நடைப்பயிற்சி, கை கால்களை அசைத்தல் போன்ற சின்னச் சின்னப் பயிற்சிகளை சிறிது நேரம் காலை மற்றும் மாலை வேளைகளில் இடைவெளிவிட்டு மேற்கொள்ளுதல் வேண்டும். தளர்வான நடை கொண்ட இவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஊன்று கோலாய் கைதடிகளை பயன்படுத்துவது இவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பே.

தைராய்டு நோய் பிரச்னை உள்ள முதியவர்கள் குளிர் தாங்க மாட்டார்கள். இவர்கள் வெயில் வந்த பிறகே வெளியில் செல்ல வேண்டும். அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கும், மலைப் பிரதேசங்களுக்கும் செல்வதைக் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். எப்போதும் குடிப்பதற்காக வெதுவெதுப்பான தண்ணீரைக் கையில் கொண்டு செல்லுதல் வேண்டும். கண்டிப்பாக இவர்கள் கம்பளிப் போர்வை மற்றும் கனமான சால்வைகளை கைவசம் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

காதுக்குள் குளிர்ந்த காற்று உட்புகா வண்ணம் கண்டிப்பாக இவர்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டும். இவர்களின் காதுக்குள் செல்லும் குளிர்ந்த காற்று சிலநேரம் முகவாதம் போன்ற நோயினை இவர்களுக்கு ஏற்படுத்திவிடும்” என்கிறார் டாக்டர் வி.எஸ்.நடராஜன். நமது வீடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக, நம் குழந்தையாக மாறிக்கொண்டிருக்கும் நமது முதியவர்களை, அவர்களின் முதுமையை ரசித்து, நமது பொக்கிஷமான அவர்களை, இந்த மழை மற்றும் குளிர்க் காலத்தில் நோயின்றி பாதுகாப்போம்.

-  மகேஸ்வரி
படங்கள்: ஆர்.வின்சென்ட் பால், ஆர்.கோபால்