பனியும் பிணியும்



மழைக்காலம்

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளப் போகிறோம். குளிர்காலம் வரவிருக்கிறது. தேங்கியிருக்கும் மழைநீர் மூலமாக கொசுக்கள் உற்பத்தி, மழைநீரால் கலப்புகளுக்கு ஆளான குடிநீர் போன்ற நேரடியான/மறைமுகமான காரணங்களால் நாம் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். மழைக்கால நோய்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் நாம் எப்படியாகப்பட்ட நோய்களையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும்? அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது எப்படி என்று மருத்துவ ரீதியில் அலசினோம்...

பொதுவாக நாம் எதிர்கொள்ள நேரிடும் நோய்கள் குறித்தும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் பொது நல மருத்துவர் அருணாச்சலத்திடம் கேட்டேன்... ‘‘வெயில் காலத்துக்கும் மழைக்காலத்துக்கும் உள்ள வேறுபாடு தட்பவெப்பநிலைதான். தட்பவெப்பநிலை 24 டிகிரிக்கும் குறையும்போது உடலை சூடாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் குளிர்ச்சியின் காரணமாக பல பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். மழைக்காலத்தில் சுற்றுப்புறத்துடன் தொடர்புடைய சுவாசப் பிரச்னைகளுக்கு ஆளாவோம். குளிர்காற்றை சுவாசிக்கும்போது மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள கிருமிகள் உயிர்பெற்று விடும். இதன் காரணமாக மூக்கடைப்பு, தொண்டைச்சளி ஆகியவை ஏற்படும். காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் வைரஸ் போன்ற கிருமிகள் எளிதில் பரவும். சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, தொண்டைவலி, கண் வியாதிகள் என பலவற்றுக்குமான கிருமிகள் காற்றின் வழியே பரவும்.

மூக்கடைப்பு, சளி ஆகியவை இரண்டு நாட்கள் நீடித்தாலே மருத்துவரை அணுக வேண்டும். சளிப்பிரச்னையை ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது தொண்டை, நெஞ்சுப்பகுதி என பல உறுப்புகளுக்குச் சென்று நிமோனியா காய்ச்சல் வரை கொண்டு சென்று விடும். நிமோனியா காய்ச்சலுக்கு சுற்றுப்புறம் மட்டும் காரணமல்ல. நம் உடலில் இருக்கும் கிருமிகள் வலுப்பெறுவதாலும் ஏற்படுகிறது. நிமோனியா போன்ற அபாயகரமான காய்ச்சலுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்துவது நல்லது.

ஏனென்றால் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாதபடி தடுக்க முடியும். வாகனங்களில் பயணிக்கும்போது தூசி, நெடி, புகை ஆகியவை சுவாசக்குழாய்க்குச் செல்லாத அளவுக்கு முகத்தை மூடிக்கொள்வது நல்லது. ஏனென்றால் அதன் காரணமாக ஆஸ்துமா ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. குளிரை உணர்ந்தவுடனேயே வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்து விட வேண்டும். மழை மற்றும் குளிர் காலங்களில் ஏ.சி. பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளை சூடுபடுத்தாமல் சாப்பிடக் கூடாது. மழைக்காலத்தில் தண்ணீர் குறைந்த அளவே குடிப்பர்.

தினமும் இரண்டு லிட்டர் தண்ணீராவது அவசியம் குடிக்க வேண்டும். உணவில் ஒரு காயையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும். உடல் குளிரை உணர்ந்தால் வெப்பநிலையை சமப்படுத்த சூடாக தேநீர் அருந்தலாம்’’ என்கிறார் அருணாச்சலம். மழைக்காலத்தில் ஏற்படும் கிருமித்தொற்று மற்றும் தொற்றுநோய்களிலேயே அதிதீவிர விளைவுகளை ஏற்படுத்தும் நோய் குறித்து தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியம் சாமிநாதனிடம் கேட்டோம்...

மழையால் கலப்புகளுக்கு ஆளான தண்ணீரை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் நேரடியானவை. நன்கு சுத்திகரிக்கப்படாத தண்ணீரைக் குடிப்பதால் வாந்திபேதி, சீதபேதி, காலரா, டைபாய்டு, ஹெப்படைடிஸ் ஏ, ஈ ஆகியவை பரவுகின்றன. எலியின் சிறுநீர் கலந்த நீரில் கால் வைத்தாலே எலிக்காய்ச்சல் ஏற்படும். மேலும் மழைநீரில் நடப்பதால் பூஞ்சைத்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. சுற்றுப்புறத்தில் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் ஏற்படும் பிரச்னைகள் மறைமுகமானவை.

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல் என பல விதமான வியாதிகள் கொசுவால் பரவுகின்றன. ஆப்பிரிக்காவில் பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய எபோலா வைரஸ் போல் கொடூர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஹண்டா வைரஸ் மழைக்காலத்தில் பரவுகிறது. ரத்தக்கசிவை ஏற்படுத்தி, உறுப்புகளைச் செயலிழக்க வைக்கும் தன்மை இந்நோய்க்கு உள்ளது. இந்தியாவில் இது அதிகமாகப் பரவி வருகிறது. ஆந்திராவின் கடற்கரையோர கிராமங்களில் ஹண்டா வைரஸ் தாக்குதலுக்கு பலரும் ஆளாகியிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு பெய்த மழையின்போதே தமிழகத்தில் பலரும் meliod என்னும் காய்ச்சல் கிருமியின் தாக்குதலுக்கு ஆளாகினர். மண்ணுக்குள் இருக்கும் அக்கிருமி மழைக்காலத்தில் மேலெழும்பிப் பரவுகிறது. இக்காய்ச்சலுக்கு ஆளாகிறவர்களில் 3ல் ஒருவர் உயிர்பிழைப்பது கடினம். இவை எதனால் ஏற்படுகின்றன என்கிற காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது மட்டுமே தீர்வாக அமையும்’’ என்கிறார் சுப்ரமணியன் சாமிநாதன்.   

- கி.ச.திலீபன்

செல்லப்பிராணிகளுக்கு...

செல்லப்பிராணிகள் வளர்க்கிறவர்கள் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகளைப் பற்றிக் கூறுகிறார் கால்நடை மருத்துவர் செல்வநாதன்... உடல் நலப் பிரச்னைகள் காற்றில் ஈரப்பதம் அதிகமாகும் போது நாய் மற்றும் பூனைகளின் காது, தோல் பகுதிகளில் பூஞ்சைகள் உருவாகின்றன. எந்த ஒரு உயிரினமும் மழைக்காலத்தில்தான் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும். ஆகவே செல்லப்பிராணிகளின் ஒட்டுண்ணிகளான உண்ணி, தெள்ளுப்பூச்சியின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வைரஸ் காய்ச்சல், பாக்டீரியா காய்ச்சலின் தாக்குதலால் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் Canine Demodicosis எனப்படும் தோல்நோய் வருகிறது. pug, spitz, boxer, Shihtsu போன்ற Brachycephalic வகை நாய்களுக்கு மூக்கு சிறியதாக இருக்கும். இதனால் மூக்கின் வழியே கிருமித்தொற்று ஏற்பட பெருமளவு வாய்ப்புகள் உண்டு. மழைக்காலத்தில் கொசுக்களும், ஈக்களும் அதிகளவில் இருக்கும். கொசு கடிப்பதன் மூலம் பிராணிகளுக்கு Heart worm என்று சொல்லப்படும் இதயப்புழு நோய் ஏற்படுகிறது.

மழைக்காலத்தில் உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் அடிபட்டு புண் இருந்தால் அதில் ஈக்கள் மொய்க்கும். இனப்பெருக்கம் செய்யும் ஈக்கள் இது போன்ற புண்களில்தான் முட்டையிடும். நாளடைவில் அந்த முட்டைகள் புண்ணில் புழுக்களாக மாறி உடலெங்கும் பரவும் அபாயம் உள்ளது. பிராணிகளுக்கான உணவுப்பொருட்களை முறையாக பாதுகாத்து வைக்கவில்லையென்றால் Aspergillosis என்கிற பூஞ்சை உற்பத்தியாகிறது.

அந்த பூஞ்சைகள் பிராணிகளின் ரத்தத்தில் கலந்து உடலில் பல்வேறு விதமான பிரச்னைகளை ஏற்படுத்தும். தேங்கியிருக்கும் தண்ணீரில் எலியின் சிறுநீர் கழித்திருந்தால் அதில் கால் வைக்கும்போது பிராணிகளிடம் சிறு கீறல் இருந்தால் கூட Leptospirosis எனப்படும் எலிக்காய்ச்சல் உண்டாகும்.

பாதுகாப்பான பராமரிப்பு முறைகள்

மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஆகவே ஈரமான தரையில் படுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும். பிராணிகளின் ரோமங்களை சீப்பு கொண்டு சீவுவதால் பூஞ்சைகள் தங்காது. உண்ணி, தெள்ளுப்பூச்சிகளுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றது. அதனைக் கொண்டு நாயை மட்டுமின்றி அது வசிக்கும் இடத்தையும் முற்றிலுமாக சுத்தம் செய்ய வேண்டும். Brachycephalic வகை நாய்களிடம் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிறிய பிரச்னைகள் வந்தால் கூட மருத்துவரை அணுகுவது நல்லது.

ஈ, கொசுக்கள் இல்லாதபடி கிருமிநாசினிகளை பயன்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நிறைய ரோமங்கள் உள்ள பிராணிகளுக்கு அடிபட்டிருந்தால் அந்தப் புண் வெளியே தெரியாது. எனவே ரோமங்களை விலக்கி புண் ஏதேனும் இருக்கிறதா என்று அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும். எங்கும் தண்ணீர் தேங்க விடாமலும், குப்பைக்கூளங்கள் இல்லாமலும் வீட்டை பராமரிக்க வேண்டும். பிராணிகள் சாப்பிடாமலிருத்தல், சிறுநீரில் ரத்தம் வருதல், மஞ்சள் காமாலை ஆகியவை எலிக்காய்ச்சலின் அறிகுறிகள்.

எலிக்காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் இருக்கிறது. இந்த அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுக வேண்டும். பிராணிகளை இரண்டு வாரத்திற்கு ஒருமுறைதான் குளிப்பாட்ட வேண்டும். மனிதர்களுக்கு இருப்பது போல் வியர்வை சுரப்பிகள் பிராணிகளுக்கு இல்லை. அதற்கு பதிலாக அதன் உடலின் வெளிப்புறம் sebum என்ற சுரப்பி மூலம் சூழப்பட்டிருக்கும். அடிக்கடி குளிப்பாட்டும்போது சூழ்ந்திருக்கும் சுரப்பி நீர்த்துப் போய்விடும். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களால் தோல் நோய் உள்ள பிராணிகளை டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் குளிப்பாட்ட வேண்டும்.

உணவு முறைகள்

வழக்கத்தை விட அதிகமாக உணவில் சத்தான பொருட்களை சேர்த்துக் கொடுக்க வேண்டும். சேமிக்கப்பட்ட உணவாக இருந்தால் அவற்றினுள் பூஞ்சைகள் இருக்கிறதா என்பதை நன்கு பரிசோதித்து, பூஞ்சைகளை அகற்றிய பின்னரே கொடுக்க வேண்டும். குளிரான தட்பவெப்பநிலையில் வெதுவெதுப்பான உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும். நன்கு வேகவைத்த மாமிசங்களை மட்டுமே கொடுக்க வேண்டும். அரை குறையாக வெந்த மாமிசத்தைக் கொடுத்தால் குடற்புழுக்கள் உண்டாகும். பிராணிகளுக்கு அலர்ஜியான உணவு எது என்பதனைக் கண்டறிந்து அதனை தவிர்க்க வேண்டும்.