சிறுகதை - சாய்ஸ்...
“பொண்ணு வந்த பிறகு டிஸ்கஸ் பண்ணிட்டு மற்ற விஷயங்கள் பேசிக்கலாம்...” மாப்பிள்ளை வீட்டார் கூறியதை அரவிந்த் மறுக்கவில்லை.‘‘டிராவல்ல இருப்பா. இல்லேன்னா மொபைல்லயே பேசிருக்கலாம். எனிவே ஃபார் யுவர் சேட்டிஸ்பேஃக்ஷன் அவ வந்த உடனே பேசிட்டு கெட்பேக் பண்றேன்...”அவர்கள் சம்மதித்தனர்.
 லண்டனில் இரண்டு வருட டிரெய்னிங் முடித்துவரும் மகள் பிரியங்காவுக்கு, இதை விடவும் ஓர் உயரிய சம்பந்தம் பார்த்துவிட முடியாது. ஒரே பையன்.
சிட்டியில் பிஸினஸ் ஏரியாவில் விரல் விட்டு எண்ணினால் வந்து விழுந்து விடுகிற ஒரு பெயர் ஹரீஸ்.நண்பன் மூலம் விசயங்கள் அறிந்து, பிரியங்காவின் புகைப்படங்கள் பார்த்ததும் பிடித்துப்போய், யோசனைக்கு இடம் கொடுக்காமல் நேரடியாக வந்துவிட்டார்கள். மகளின் திருமணமும் முடிந்து விட்டால் தந்தையாய் பணி ஓய்வு பெறலாம்.
கிளம்பத் தயாராகிய அவர்களை முகம் நிறைந்த புன்னகையுடன் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் வந்தவர் நேரே மனைவியின் புகைப்படம் முன் வந்து நின்றார்.
மனைவி ஆர்த்தியுடன் வாழ்ந்த அந்த ஒன்றரை வருட வாழ்க்கை, இந்த வினாடி வரை நெஞ்சை விட்டு அகலவில்லை. பிரியங்காவை பெற்றெடுத்து கையில் கொடுத்து அடுத்த மாதமே கணிக்கவே முடியாத ஒரு வியாதியில், அதிகம் தொல்லை கொடுக்காமல் இரவு உறங்கிப்போனவள்தான்... அதன்பின் எழுந்திருக்கவே இல்லை.
‘‘எல்லா மனைவிகளும் கேட்கிற மாதிரியே நானும் உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமா?” திடீரென ஒருநாள் இரவின் நடுநிசியில் உறக்கத்தில் இருந்த அரவிந்தை எழுப்பிக் கேட்டாள். ‘‘டேய்... என்னடா..?” “இல்லே அரவீ... மனசுக்குள்ள இந்த மாதிரி தோணுனதே இல்லை. ஆனா, இப்போ திடீர்னு கேக்கணும் போல இருக்கு. நான் கேட்கறதும் சரி, அதுக்கு உன்னோட பதிலும் சரி எதுக்குமே பதிவுகள் இருக்காது. ஸோ, பீ ஓப்பன்...”“பரவாயில்லை... பரவாயில்லை... கேளு...”“இல்லே... .சப்போஸ் நான் செத்துப் போயிட்டா... அதுக்குப் பின்னான உன் லைஃப் எப்படி இருக்கும்? ஏதாவது ஐடியாஸ் இருக்கா?”
அரவிந்துக்கு தூக்கம் முழுவதுமாய் கலைந்தது. எப்பொழுதும் இந்த மாதிரியெல்லாம் பேசி அறியாதவள். அறிவுபூர்வமாகப் பேசுபவள். அவளை காதலிப்பதற்கு அவள் அழகு ஒரு காரணமெனில், அவளது பேச்சும் முக்கிய காரணமாகும்.முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. ‘‘பார்த்தோம், பழகினோம், சுற்றினோம்... என்று காதலை அடையாளப்படுத்துவதில் எனக்கு ஒரு துளி விருப்பமுமில்லை.
அன்பாய், அந்நியோன்யமாய், ஆறுதலாய் வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கொருவர் இருந்துவிடுவோம் என்கிற பெரு நம்பிக்கையை விதைப்பதுதான் காதல்...’’ அவள் முகத்தையே ஆர்வமாய் பார்த்தபடி இருந்த அரவிந்தின் இருகைகளையும் பிடித்தாள். “ எஸ் அரவிந்த். தெட் ஈஸ் கால்டு ஏஸ் ட்ரூ லவ்...”பழகத் துவங்கிய ஒரு சில நாட்களிலேயே காதலுக்கான விளக்கத்தைக் கொடுத்து மனதை முழுமையாய் ஆக்ரமித்தவள். இப்பொழுது இப்படி ஒரு கேள்வியை கேட்கிறாளென்றால் என்னவென்று நினைப்பது..?
“இவ்வளவு யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? பெரிய திட்டமெல்லாம் வேண்டாம்ப்பா. பட்டுன்னு பதில் சொல்லு...” சிரித்தாள்.‘‘ஆர்த்தி... உனக்கு இந்தமாதிரி பேச்சு சரின்னு படுதா? ஆஃப் ஆகி உட்கார்ந்திருக்கேன். பேசாமப்படு...” என்றவன் எழுந்து அவளருகே வந்து சமாதானப்படுத்தும் விதமாக, அவள் தலையை வருடித் தூங்கவைத்தது இன்னமும் நினைவிலிருக்கிறது.
அப்பொழுதே அவளுக்குள் மரணம் பற்றிய சிந்தனை தோன்றியிருக்கவேண்டும். இல்லையெனில் அவள் அப்படி பேசியிருக்க மாட்டாள். ஆயுளுக்கும் தொடர்கிற நம்பிக்கை பற்றிப் பேசி... ஒருமாதக் குழந்தையை கையில் ஒப்படைத்து, தனிமரமாக்கிச்சென்ற அவள் அன்று கேட்ட கேள்விக்கான பதிலை வாழ்ந்து காட்டி நிரூபித்துவிட்ட திருப்தியில் மனைவியை புதியதாகப் பார்த்தான்.சத்தியம் செய்து தரவில்லை. ஆனால், சாதித்துக் காட்டிய திருப்தி அவனுள் இருந்தது.
இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இருந்து வெளிப்பட்டார்கள் கைலாஸும், பிரியங்காவும். சென்னையின் வெய்யில் உடனே சுடத் துவங்கியிருந்தது. கல்லூரிக் காலத்தில் இருந்தே பிரியங்காவுக்கு கைலாஷ் நல்ல நண்பனாக இருந்தான். அயல்நாட்டு மண்ணில் அது காதலாய் உருமாறிப் போயிருந்தது.ஏர்போர்ட் பிக்கப்புக்கு கண்டிப்பாக வருவேன் என்று அடம்பிடித்த அப்பாவை, வரவேண்டாம் என்று தடுத்ததன் காரணமே கைலாஷ் உடனிருந்ததால்தான்.
இருவரும் அமைதி காத்தார்கள். வேறு உலகிற்கு வந்தது போல் உணர்வு. இரண்டு வருடங்களாக உறங்கிய நேரம் போக, அனைத்து நிமிடங்களிலும், பார்த்துப் பேசிப் பழகிய தருணங்கள் இருவர் நினைவிலும் அலை மோதியது.‘‘தென்... வாட்ஸ் நெக்ஸ்ட்?” கைலாஷ் அமைதியைக் கலைத்தான். சென்னை காபி ஹவுஸில் இரண்டு காபி வாங்கி ஒன்றை அவளிடம் கொடுத்தான்.
ஊருக்கு வருகிற நாள் முடிவானதிலிருந்து திட்டமிடத் துவங்கியிருந்தார்கள். வீடு வந்து சேர்ந்ததும் காதல் பற்றி டிக்ளேர் செய்துவிட வேண்டும். இன்னமும் இரண்டு மாதத்தில் ஒர்க் ப்ளேஸ்மென்ட் வந்து சேர்வதற்குள் கல்யாணம் முடித்துவிட வேண்டும். நிறைய முறை பேசிவிட்டார்கள்.
இவ்வளவு பேசி வந்தபின்னும் அவன் “அடுத்தது...” எனக்கேட்டது, அவளுக்கு கோபம் வரவழைத்தது.‘‘எல்லாமே ஏஸ் பெர் பிளான்தான். அப்புறம் என்ன?” கடிந்துகொண்டாள்.‘‘நான் அதைக் கேட்கல. ரெண்டு பேரும் ரெண்டு ஏரியாவாச்சே... வண்டி எப்படின்னு கேட்டேன்..?’’சிரித்தான். அவளும் சிரித்தாள்.வேளச்சேரி, சின்மயாநகர் ப்ரீபெய்டு டாக்ஸி புக் செய்தார்கள். லக்கேஜ்களை ஏற்றினர். ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டவர்கள், சுற்றுப்புறத்தைக் கருத்தில் கொள்ளாமல் இறுக அணைத்துப் பிரிந்தனர். கார்கள் கிளம்பின.
போனை ஆன் செய்தாள். அரவிந்த் லைனில் வந்தார்.‘‘அப்பா...’’“ஃப்ளைட் டிலேயாடா?” ஒவ்வொரு நிமிடமும் கணக்குப் போட்டு நகர்த்திக் கொண்டிருந்ததால் அவருக்கு அப்படி ஒரு உணர்வு மேலோங்கியிருந்தது.
‘‘இல்லேப்பா... ஆன் தி வே. இன்னும் ஃபார்ட்டிஃபைவ் மினிட்ஸ்ல ரீச் ஆயிருவேன்...”திருப்தியானார்.லண்டன் போனதிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை போனில் பேசுவதோடு சரி. பின்னர் பணி இடத்திலும் வெளியிலும் கைலாஷுடன் நேரம் கழித்ததில் அப்பா பற்றி அதிகம் நினைத்துக்கொண்டே இருக்க முடியவில்லை.
நியாயமாய் நினைத்தபடியே இருந்திருக்க வேண்டும். மனித இயல்பு அதுதானே. சூழ்நிலைகளைப் பொறுத்தே அனைத்தும் அமைந்துபோகும். ஆனால், இப்பொழுது அது தவறோ என்று அவள் மனதிற்குப் பட்டது.கார் வீட்டை நெருங்க நெருங்க அப்பாவைப் பார்க்கப் போகிற ஆர்வம் தொற்றிக்கொண்டது. லண்டன் மறந்தது. கைலாஷ் கூட நினைவில் ஓரமானான்.
வாசலின் கதவைப் பிடித்தபடி நின்றிருந்ததோடு, வழியில் வந்து போகிற வண்டிக்கெல்லாம் அட்டென்ஷன் ஆகி அரவிந்த் பரபரத்தார். ஒரு வழியாக பிரியங்கா வந்த கார் வாசலை அடைய... கதவைத் திறந்து ஓடினார். கண்களில் நீர் சுரந்திருந்தது. மகளைப் பார்த்ததும் மற்றனைத்தும் மறந்துபோய் அவளை அணைத்து உச்சிமுகர்ந்தார்.
பிரியங்காவும் அப்படியே உருகினாள். ‘‘அப்பா...’’ இதயத்திலிருந்து குரல் கொடுத்தாள்.லக்கேஜ்களை அவரே எடுத்து நடந்தார்.வீடு நுழைந்ததும் மகளை ஷோபாவில் உட்கார வைத்து முழுமையாய் ஒரு முறை பாசமாய் பார்த்தார்.
‘‘நல்லா இருக்கியாப்பா?” முகம் பார்த்து, தலை வருடி கேட்டார். இரண்டு வருடங்களாக நேரடியாக பார்த்திராத ஏக்கம் அந்தக் கேள்வியிலிருந்தது.‘‘நல்லா இருக்கேம்ப்பா...”அந்த சூழ்நிலைக்குள் தன்னை ஆட்படுத்திக்கொண்டாள். “நீ வேலைக்கு போய்த்தான் ஆகணும்ன்னு யாருடா கேட்டா?”
படித்து முடித்தால் போதும், வேலைக்குப் போகவேண்டிய அவசியம் இல்லவே இல்லை என்று அரவிந்த் வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால், படித்ததை பயனுள்ளதாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற அவளது கொள்கையை மறுக்கவில்லை.ஆசை அவருடையதாக இருக்கலாம். ஆனால், எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளப்படுகிற சாய்ஸ் பிரியங்காவுடையதாகத்தான் இருக்கும்.
ஆனால், வேலைக்கான பயிற்சி படிப்புக்கு லண்டன் சென்றிருந்த இந்த இரண்டு வருடமும் அரவிந்திற்கு மிகமிக மோசமான யுகங்களாய் கழிந்தது.தனது அறைக்குள் சென்றாள். அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. தினசரி பராமரிப்பு இருந்தால் மட்டுமே இவ்வளவு சுத்தமாக வைத்திருக்க முடியும். வீட்டிற்கு வேலையாள் நியமிக்கப்பட்டிருந்தாலும் எந்த தனிப்பட்ட அறைகளுக்குள்ளும் அவர்களுக்கு அனுமதி இல்லை. அனைத்தும் அப்பாதான்.
அரைமணி நேரத்தில் தயாராகி ஹாலுக்கு வந்தாள். டைனிங்கில் உணவு தயாராக இருந்தது. டைனிங்கை நோக்கி நடக்கையில், மொபைல் ரிங் ஆனது. கைலாஷ். காதில் வைத்தாள். ‘‘சக்ஸஸ். என் வீட்டுல டபுள் ஓகே...” படபடத்தான். உண்மையிலேயே கடந்த ஒன்றரை மணி நேரம் அவளுக்கு அவன் பற்றிய நினைவே வரவில்லை. ‘‘இவ்வளவு குயிக்காவா..?’’
“ஆல்ரெடி அக்காகிட்ட லீடு கொடுத்திருந்தேன். அவ நீட்டா பேசி ஓகே ஆக்கிட்டா. வாட் அபவுட் யூ..?”
தயங்கினாள். ‘‘இனித்தான்... ஓகே... கால் யூ...”போனை வைத்து சாப்பாடு முன் அமர்ந்தாள். இரண்டு வருடங்களாய் கண்ணிலும் பார்க்காத சாப்பாடு. அசத்தியிருந்தார் அப்பா. பரிமாறிவிட்டு எதிராக அமர்ந்தார். கைலாஷைப்பற்றிப் பேசிவிட இதுதான் சரியான சமயம் என்று எண்ணி, வார்த்தைகளை வரிசைப்படுத்தி கோர்வையாக்கி தொண்டை வரை கொண்டு வந்து சேர்த்தவள் அப்பாவின் முகத்தைப் பார்த்தாள்.“நீ அங்கிருந்து கிளம்பறதுக்கு முன்னாடியே ஒரு விஷயம் ஷேர் பண்ணிருக்கணும்... பட் மறந்துட்டேன்...” அரவிந்த் பேசத் துவங்க, தன் வார்த்தைகளை விழுங்கினாள்.
‘‘ஒரு நல்ல ஃபேமிலில இருந்து சம்மந்தம் பேச வந்தாங்க. ஆல்மோஸ்ட் பேசிட்டோம். இருந்தாலும் உன்னோட சம்மதமும் தெரிஞ்சுகிட்டு மீதி விஷயங்கள் பேசிடலாம்னு முடிவு பண்ணிருக்கோம். பையன் பெரிய இண்டஸ்டிரியலிஸ்ட். ஹேண்ட்சம். பாரு...”
கையிலிருந்த போட்டோவை டேபிள் மீது வைத்தார்.அதிர்ச்சியைக் காட்டியிருக்க வேண்டிய பிரியங்கா, அமைதியாக சாப்பிட்டு முடித்தாள். போட்டோவை மேலோட்டமாகப் பார்த்து அங்கேயே வைத்தாள். எதுவும் சொல்லவில்லை. எதுவும் வித்யாசமாக உணர்ந்து விடாதவண்ணம் அமைதியாய் எழுந்து ஹாலின் டிவியை ஆன் செய்து அமர்ந்தாள். ஏதோ பாடல் பாடிக்கொண்டிருந்தது. கவனம் அதில் இல்லை.
‘‘காலையில அவுங்களோட பேசிடறேன்...’’ என்றபடி அவர் அறைக்குள் சென்றார். டிவியை ஆஃப் செய்து அவளும் அறைக்குள் சென்றாள். படுக்கவில்லை. படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
கைலாஷ் நினைவில் வந்தான். காலையில் போன் அடிப்பான். பதிலாக என்ன சொல்வது? குழம்பினாள். அப்பா சொன்னதும் மறுத்திருக்கலாம். தொண்டைவரை வந்து நின்ற வார்த்தைகளைக் கொட்டியிருக்கலாம். மறுத்திருக்கமாட்டார். பின்வாங்கியது எதனால்?
ஆசை ஆசையாய் அவர் பேசிய விதம். ‘‘உன்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு கன்ஃபார்ம் பண்ணணும்...” பெருந்தன்மை. ‘‘கன்ஃபார்ம் பண்ணியாச்சு. டேட் இதுதான்’’ என்று சொல்லவில்லை. அப்படி தனக்குள்ள முழு உரிமையையும் பயன்படுத்த விரும்பாத அந்த மனிதனிடம் என் விருப்பம் இதுதான் என்று எப்படி சொல்வது? போனை எடுத்து கைலாஷுக்கு டயல் செய்தாள். ஒற்றை வினாடியில் எடுத்தான்.
“ஓகேவா? அப்பாகிட்ட சொல்லியாச்சா..?’’
‘‘அவர் சொல்லிட்டாரு என்னோட கல்யாணம் பற்றி...”“புரியல...” டோன் மாறியது.“நம்ம மேட்டர் பிரசன்ட் பண்றதுக்கு தயாராகறதுக்குள்ள எனக்கு அவர் அரேன்ஜ் பண்ணிருக்கிற கல்யாணம் பற்றி சொல்லிட்டாரு...”“அதுக்கு நீ எந்த ரியாக்ட்டும் காட்டாம ஓகேன்னு தலைய ஆட்டிட்டியா?” சூடானான். “ப்ளீஸ்... போ... நம்ம விஷயத்தை டிக்ளேர் பண்ணு. இல்லைன்னா போனை அப்பாகிட்ட கொடு. நான் பேசறேன்...” இடைவெளியின்றிப் பேசினான்.
“நான் சொன்னாலே கேட்பாரு...” “தென்? வாட் ஈஸ் தி ப்ராப்ளம்..?”“என்னவோ அவர் பேச்சை மறுக்கற மனசு வரல...”“புல்ஷிட். ஏம் ஐ மேட்? என்னை வெறுக்கற மனசு வந்துருச்சா? ராமாயண காலத்துலயா இருக்கே அப்பா பேச்சை மீறாம இருக்க?” கொதித்தான்.“நம்ம விஷயத்துல நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்.
ரெண்டு வருஷம் அவரை விட்டு விலகி நின்னதும் எனக்குன்னு ஒரு உறவு தேடுனது தப்பு. நான் பிறந்த ஒரு மாசத்துல அப்பாகிட்ட ஒப்படைச்சுட்டு இறந்துபோனாங்க அம்மா. இந்த இருபத்திரண்டு வருஷமும் அவருக்குன்னு எந்த துணையும் தேடிக்காம எனக்காக மட்டுமே வாழ்ந்திருக்காரு. நீ சொன்ன ராமாயண காலம் மாதிரியே. ஹி ஈஸ் ஒன்லி ஃபார்ட்டி செவன். படிப்பை என்னோட சாய்ஸ்ல விட்டார். வேலை விஷயம் என்னோட சாய்ஸ்ல விட்டாரு. கல்யாண விஷயம் ஒண்ணாவது அவர் சாய்ஸ்ல விடறனே... ப்ளீஸ்... இதுக்கப்புறம் எந்த விஷயத்திலயும் சாய்ஸ் கிடைக்காதுடா. உன்னோட பாய்ண்ட் ஆஃப் வியூல நான் உன்னை ஏமாத்திட்டேன். ரொம்ப சாரி...” போனை துண்டித்தாள்.
மகளுக்காக பால் எடுத்து வந்த அரவிந்த், அனைத்தையும் கேட்டு முடித்திருந்தார். எந்த அதிர்ச்சியும் கொள்ளவில்லை. மகளின் அருகே சென்று அமர்ந்தார். ‘‘உனக்கொண்ணு தெரியுமா? இப்போ நான் உனக்கு அப்பாவா இருக்கிறது தேர்டு ஸ்டேஜ். அம்மாவுக்கு ஹஸ்பண்ட் செகண்ட் ஸ்டேஜ். அதுக்கு முன்னாடி அம்மாவோட லவர்னு ஒரு ஸ்டேஜ் இருந்தது... அது சந்தோஷமா இருந்ததாலதான் இந்த நிமிஷம் வரைக்கும் நிம்மதியா இருக்கேன்.
பழகறது, பேசறது, ஊர்சுத்தறது இதையெல்லாம் தாண்டி காதல்ங்கறது ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சிருக்கிற பெரிய நம்பிக்கை. எதுக்காகவும் அதைக் கெடுத்துக்கக் கூடாது. .என்னோட சாய்ஸ் எப்பவுமே உன்னோட சந்தோஷம் மட்டும் தாண்டா...” அவளின் அனுமதியின்றி போனை எடுத்து ரீடயல் செய்தார்.
மறுமுனையில் போனை எடுத்ததும் “பிரீ... அப்பாகிட்டே பேசிட்டியா? சம்மதிச்சுட்டாரா? நீ இல்லாம ஐ கான்ட்... டெல் மீ ப்ளீஸ்...” துடித்தான்.‘‘சம்மதிச்சுட்டேன். வீட்டாரோட கிளம்பி வாங்க. மற்ற விஷயங்கள் பேசணும்...” என்றார் அரவிந்த்.கைலாஷ் குதித்தான். ‘‘தேங்க்ஸ் அங்கிள். உங்களை மாதிரியே அவளை நானும் பார்த்துக்குவேன்...” உண்மையாய் பேசினான்.அரவிந்த் கண்கள் கலங்கின. பிரியங்கா அப்பாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
- பொள்ளாச்சி கே.சுகுமாரன்
|