திமிர்





ஆபீஸர் கோபாலுக்கு, தனது செக்ஷனிலேயே கார்த்திக்கை மட்டும் பிடிக்காது. ‘திமிர் பிடித்தவன்... வயசுக்கு மரியாதை தர மாட்டான்’ என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருப்பார். இன்றைக்கு அவனைப் பழிவாங்க சரியான சந்தர்ப்பம் அவருக்கு வாய்த்தது. 

புதியதாக வந்த ஜி.எம். ரவுண்ட்ஸ் போய் எல்லோரையும் அறிமுகம் செய்துகொண்டு, அறைக்குள் வந்து உட்கார்ந்ததுமே அவரிடம் போட்டுக் கொடுக்கும் தன் பணியைத் துவக்கி விட்டார் கோபால்.

‘‘நீங்க ஃப்ளோர் விசிட் போனப்ப, மற்ற ஊழியர்கள் எல்லாரும் உங்க பின்னாடியே பவ்யமா வந்து வெல்கம் பண்ணி பேசிட்டிருந்தாங்க. கை கொடுத்தாங்க. ஆனா, இந்த கார்த்திக் மட்டும் சீட்டை விட்டு எழுந்திருக்கவே இல்ல. ஜஸ்ட் வணக்கம் சொன்னதோட முடிச்சிக்கிட்டான் பார்த்தீங்களா? ஒரு மரியாதைக்காகக் கூட உங்ககிட்ட நாலு வார்த்தை பேசலை... அவ்ளோ திமிர் பிடிச்சவன் சார் அவன்!’’
‘‘ரொம்ப கரெக்ட்.. எனக்குப் பின்னால வந்தவங்கள்ல நாலு பேரை இன்டர்காம்ல கூப்பிடுங்க... ஸ்பெஷலா நன்றி சொல்வோம்!’’ என்றார் ஜி.எம்.

கோபால் இன்டர்காமில் அழைத்தபோது, மறுமுனையிலிருந்து பதில் வந்தது. ‘‘நீங்க கேட்கிற அந்த நாலு பேரும் கேன்டீன்ல இருக்காங்க சார்... கார்த்திக் மட்டும்தான் சீட்ல இருக்கார். அவரை அனுப்பவா?’’
ஜி.எம். பலமாகச் சிரிக்கத் தொடங்குவதற்குள், வெளியே நழுவினார் கோபால்.