தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்





தனுசு ராசியின் சின்னமே போர்க் கருவியான வில்லைக் குறிப்பதால், எதையுமே போராடிப் பெறுவதில் தனி சுகம் காண்பீர்கள். சவாலான விஷயங்களை நோக்கித்தான் உங்கள் இலக்குகளே இருக்கும். ‘‘போனா அந்த மாதிரி வேலைக்குத்தான் போவேன். இல்லைன்னா வீட்லயே இருக்கேன்’’ என்றெல்லாம் வெகுநாட்கள் வேலையில்லாமல் காத்திருந்து பிறகு ஜெயிப்போரும் உண்டு. அதனாலேயே தனுசுக்கு அதிபதியான குருவை ‘போராட்ட குரு’ என்று தனித்துச் சொல்வார்கள். சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்ட ஏகலைவனைப் போல பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் புத்திசாலிகளாகவும் விளங்குவீர்கள்.

தொழிலாளிகளை நண்பரைப் போல நடத்துவீர்கள். சட்ட திட்டங்கள், மிரட்டல், ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்சாமல், அன்புக்குக் கட்டுப்பட்டு ஒரே நிறுவனத்தில் பல வருடங்கள் வேலை பார்க்கும் ஊழியர்கள் உங்கள் ராசியில்தான் அதிகம். உங்களின் ராசிச் சின்னமான வில் அவ்வளவு சீக்கிரம் வளையாது. அதுபோல வேலை பார்க்கும் இடத்திலும் வளைந்து கொடுத்துச் செல்ல மாட்டீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக காக்கா பிடிக்கும் வேலையெல்லாம் உங்களுக்குப் பிடிக்காது. நேர்மையோடு இருப்பீர்கள்; மற்றவர்களிடமும் அந்த நேர்மையை எதிர்பார்ப்பீர்கள்.

உங்கள் ராசிநாதனான குரு ஒரு தன்மான கிரகமாக இருப்பதால், அலுவலகத்தில் நிகழும் சின்னச் சின்ன அவமானங்களைக்கூட தாங்கிக் கொள்ள மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு பாதகாதிபதியாக வரும் புதனே உத்யோக ஸ்தானத்திற்கும் வருவதால், வேலையில் எப்போதுமே திரிசங்கு சொர்க்க நிலை நீடிக்கும். வீடோ, அலுவலகமோ... இரண்டில் ஒன்று நன்றாக இருந்தால் மற்றதில் பிரச்னை இருக்கும். பிரமோஷன் வந்த மகிழ்ச்சியைக்கூட வீட்டில் கொண்டாட முடியாமல் தர்மசங்கடத்தில் இருப்பீர்கள். அதேபோல குரு முன்னெச்சரிக்கை கிரகமாக வருவதால், நாளைக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை இன்றே தீர்மானித்து விடுவீர்கள். சில சமயம் நாளைக்குண்டான வேலையை வீட்டிற்கே எடுத்துச் சென்றும் செய்வீர்கள். உங்கள் ராசிநாதனான குருவும், பத்துக்குரியவனான புதனும் பகையாளிகளாக இருப்பதால் உத்யோகத்தில் விருப்பம் இல்லாமலேயே இருப்பீர்கள். படிப்பது ஒன்றாகவும், பார்க்கும் வேலை வேறொன்றாகவும் இருக்கும். அந்த அளவுக்கு ஆரம்பகால உத்யோகங்களில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். ‘‘எங்கயோ இருக்க வேண்டிய நான், கடைசியில இங்க இருக்க வேண்டியதாப் போச்சு’’ என்றும் புலம்ப வேண்டியிருக்கும்.

அலுவலகத்தில் வெகுநாட்கள் உங்களை டார்ச்சர் செய்பவர்களை ஓரங்கட்டுவீர்கள். அதேபோல ஒரு பதவியைக் குறிவைத்து விட்டால், அது கிடைக்கும்வரை ஓயாமல் போராடுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் போராட்டத்தையும், வைராக்கியத்தையும் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். தனகாரகனான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், பணத்தின் பின்னால் ஓடமாட்டீர்கள். உங்களுக்குப் பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும். பொதுவாகவே, பத்தாமிடத்திற்கு அதிபதியாக புதன் வருவதால், எந்த அலுவலகத்திலும் குழுவின் தலைமைப் பொறுப்பில் அமர்வீர்கள். அதேபோல கல்வி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் அமர்வீர்கள். வெளிநாட்டு நிதியை வைத்துக் கொண்டு முதியோர் இல்லம் அமைப்பீர்கள்; நிதி நிறுவனங்களை ஏற்று நடத்துவீர்கள். பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பது போன்றவற்றில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். இதெல்லாம் பொதுவான சில பலன்களாகும். இப்போது நட்சத்திர ரீதியாக காண்போமா?

மூலம் நட்சத்திரம்தான் தனுசு ராசியிலேயே மிகவும் சென்ஸிடிவ்வானது. பொறுப்பாக இருக்கும் நீங்கள், சுய கௌரவமும் அதிகம் பார்ப்பீர்கள். அநாவசியமாக விடுமுறை எடுக்க மாட்டீர்கள். அலுவலக வேலை பாதிக்காத அளவுக்கு சொந்த வேலையை அமைத்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் தவறு என்றால் பொங்கி எழுவது, ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் வெளியேற்றுவது என்று உடனடியாக நடவடிக்கையில் இறங்கி விடுவீர்கள். எத்தனை கெஞ்சினாலும் விடவே மாட்டீர்கள். ‘‘ரூல்ஸ்னா ரூல்ஸ்தான்’’ என்று ஒரே வார்த்தையில் அடக்கி விடுவீர்கள்.

மூலம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் ராணுவம், காவல்துறையில் குற்றத் தடயவியல் நிபுணர், யுனானி, சித்த வைத்தியம், நியூரோ சர்ஜன், விவசாயத்துறை அதிகாரி, எலக்ட்ரீஷியன் என்று பணிபுரியும்போது முன்னேற்றம் எளிதாக இருக்கும். வியாபாரமெனில் உரக்கடை, பூச்சி மருந்து, பெட்ரோல், டீசல், அரிசி மண்டி, பருப்பு மண்டி, மெடிக்கல் ஷாப், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஈடுபடுவது சிறந்தது. இரண்டாம் பாதத்தினர் கலைத் துறையில் சினிமா டைரக்டர், பொதுப்பணித் துறையில் எஞ்சினியர், வருவாய்த்துறை அதிகாரி, கதர் கைத்தறித் துறை, வன விலங்குகள் சரணாலயம், அரசு விதைநெல் ஆராய்ச்சி என்று அரசு சார்ந்த துறையில் வேலைக்கு முயற்சித்தால் நல்லது. வியாபாரமெனில் கட்டுமானத்துறை, டெய்லரிங், அட்வர்டைசிங் ஏஜென்சி, போட்டோ ஸ்டுடியோ, இரு சக்கர வாகனம் விற்பனை மற்றும் சர்வீஸ், கேளிக்கை கூடங்கள் லாபம் தரும். மூன்றாம் பாதத்தினர் அரசு அச்சகம், அரசு நூலகம், தொல்லியல் துறை, வணிகவியல், பொருளாதாரவியல், புள்ளியியல் துறையில் ஆசிரியர் மற்றும் பேராசிரியர், பத்திரிகை நிருபர், ஷேர் மார்க்கெட் அலுவலகத்தில் பணி, மொழிபெயர்ப்பாளர், சினிமாவில் மேக்கப் மேன் என்று சில வேலைகளில் அமர்வீர்கள். வியாபாரமெனில் கமிஷன், புரோக்கரேஜ், பேன்சி ஸ்டோர், வாஸ்து மீன் - வளர்ப்பு மீன் விற்பனைக் கூடம், கூரியர், புரோகிதம், ஜோதிடம், பூஜை சாமான்கள், மத சம்பந்தப்பட்ட நூல்கள் விற்பனை என்று ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். நான்காம் பாதத்தினர் முகச் சீரமைப்பு மருத்துவர், நீர்ப்பாசனத்துறை அதிகாரி, அணை பராமரிப்புத்துறை, தமிழ் ஆசிரியர், மனநல ஆலோசகர், குழந்தை நல சிறப்பு மருத்துவர் போன்ற சில பணிகளில் ஈடுபட்டு சம்பாதிப்பீர்கள். பால் பண்ணை, ஹோட்டல், குழந்தைகளுக்கான ரெடிமேட் துணிக்கடை, போட்டோ லேமினேஷன், ஆப்டிகல்ஸ், ஷிப்பிங் கிளியரன்ஸ் ஏஜென்ட் என்ற தொழில்கள் வெற்றி தரும்.

பூராடத்தில் பிறந்த நீங்கள் எப்போதுமே அலுவலகத்தை ஜாலியாக வைத்திருக்க விரும்புவீர்கள். ‘‘வாழ்க்கையில பாதி நாட்கள் அங்கதான் இருக்கோம். அதனால வேலையோட மகிழ்ச்சியும் முக்கியம்’’ என்பீர்கள். இனிப்பு முலாம் பூசிய கசப்பு மருந்தைத் தருவதிலும் வல்லவர்கள். இதனாலேயே அலுவலகத்தில் எதிரிகள் உங்களுக்குக் குறைவு. அதேசமயம் பூராடம் போராடும் என்பதையும் மறக்கக் கூடாது. சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறப்பதால், அலுவலகத்தில் உங்களுடைய மேஜை, நாற்காலி முதல் எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பீர்கள். நீங்கள் என்ன உடை அணிந்து வருகிறீர்கள் என்று பார்ப்பதற்கே நாலு பேர் இருப்பார்கள். எல்லாமே எளிதாக கிடைத்து விடும் என்ற சிந்தனை எப்போதுமே மேலோங்கியிருக்கும். ‘கிணத்துத் தண்ணிய வெள்ளம் கொண்டு போயிடாது’ என்று அலட்சியமாகவும் இருப்பீர்கள். இதுபோன்ற சில பலவீனங்களைத் தவிர்த்தால், எளிதாக முன்னேறுவீர்கள்.

பூராடத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் வங்கியில் உயர் பதவி, கல்வித் துறை அதிகாரி, சட்டமன்றம், தலைமைச் செயலகத்தில் உயர்பணி, இதய அறுவை சிகிச்சை நிபுணர், வியாபாரம் எனில் பெயின்ட், சிமென்ட், மெடிக்கல் ஷாப், சாலை மேம்பாலக் கட்டுமானப் பணி, நகைக்கடை அதிபர், சூரியசக்தி மின்சாரம் தயாரித்தல் என்று சிலவற்றில் இறங்கி சாதிப்பார்கள். இரண்டாம் பாதத்தினர் தொலைக்காட்சி; பத்திரிகை நிருபர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், உடற்கல்வி ஆசிரியர், கால்நடை மருத்துவர் என்று சில வேலைகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் எனில், புத்தக வெளியீட்டாளர், விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கூடம், ஜிம் வைத்து நடத்துதல், ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் கடை, காய்கனி அங்காடி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை என்று லாபம் காண்பீர்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை, டெர்மடாலஜிஸ்ட், காஸ்மெடாலஜிஸ்ட் என்று அழகுபடுத்தும் பணிகளில் அமர்வீர்கள். மதுபானத் தொழிற்சாலை, பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர், இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன ஷோரூம், ஹோட்டல், மாடுலர் கிச்சன், இன்டீரியர் டெகரேட்டர், சினிமாவில் கலை இயக்குனர், திருமண ஏற்பாட்டாளர், பட்டுப் புடவை விற்பனை என்று முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு ஏற்றதாகவும் அமையும். நான்காம் பாதத்தினரில் விமானப் படை, அணுமின் நிலையம், கோள் ஆராய்ச்சி மையம், எலக்ட்ரிகல் எஞ்சினியர், பைலட், புற்றுநோய், கர்ப்பப்பை மருத்துவர் என்று சில வேலைகளில் அமருவீர்கள். வியாபாரம் எனில் செங்கல், கிரானைட் வியாபாரம், பைனான்ஸ், டிபார்ட்மென்டல் ஸ்டோர், அசைவ உணவு ஹோட்டல், இறால் பண்ணை, ஆட்டிறைச்சிக் கூடம், கோழிப் பண்ணை, மசாலா சாமான்கள், தோல் வியாபாரம், காலணி கடை என்று லாபத்தை அடையலாம். இல்லையெனில் உத்யோகத்தில் திடத் தன்மை இல்லாமல் வேலையை விட்டுவிட்டு அடிக்கடி அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.



உத்திராடம் முதல் பாதத்தினர், அலுவலகத்தில் எதற்குமே எடுத்த உடனே தங்களின் கோபத்தையோ அல்லது சந்தோஷத்தையோ வெளிப்படுத்த மாட்டீர்கள். பொறுமையாக இருப்பது வரை இருப்பீர்கள். பிறகு அமைதியாக சம்பந்தப்பட்டவரின் தொடர்பைத் துண்டித்து விடுவீர்கள். அலுவலகத்தில் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பதிலிருந்து தொடங்கி, அலுவலகரீதியான அனைத்திலுமே நேர்த்தியை எதிர்பார்ப்பீர்கள். எப்பொழுது பேசினாலும் ‘‘நான் அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கும்போது...’’ என்றுதான் தொடங்கிப் பேசுவீர்கள். சூரியனும் குருவும் சேர்க்கையில் இருக்கும்போது, நேர்மைக்கும், எதையும் அனுசரிச்சுப் போயிடலாம் என்கிற குணத்துக்கும் மனப்போராட்டம்

இருந்தபடி இருக்கும். முடிவெடுப்பவராகவும். ஆலோசனை சொல்பவராகவும் நீங்களே இருக்க வேண்டுமென நினைப்பீர்கள். 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணி, ஆடிட்டர், வேதியியல் ஆசிரியர், வங்கி, தங்க நகைகள் தயாரிக்குமிடம், ரெசிடென்ஷியல் ஸ்கூல், அரசாங்க ஆவணக் காப்பகம், கருவூலம், உளவியல் பேராசிரியர், ட்ரில் மாஸ்டர், மயக்க மருந்து கொடுப்பவர், சர்க்கஸ், வனத்துறை, இதய நோய் மருத்துவர் என்று குறிப்பிட்ட சில துறைகளில் பணிபுரிவீர்கள். வியாபாரம் எனில், வறுகடலை நிலையம், நெய், அடகு வியாபாரம், பப்ளிகேஷன்ஸ், சர்க்கஸ் கம்பெனி, மரம் இழைப்பகம் மற்றும் தேக்கு மரங்களை விற்பனை செய்வது என்று வியாபாரங்களை விஸ்தரித்து பெரியளவில் முன்னேறுவீர்கள்.    

தனுசு ராசியில் பிறந்த உங்களின் வேலை ஸ்தானத்தை பத்தாம் வீட்டிற்கு அதிபதியான கன்னி புதன்தான் நிர்ணயிக்கிறார். எனவே, பொதுவாகவே பெருமாளை வணங்குவது மிகவும் நல்லது. திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாளையும், தாயார் மகாலட்சுமியையும் வணங்குங்கள். மூலவர் பக்தவத்சலன் நெடிதுயர்ந்து நிற்கிறார். இத்தல தாயாரை எல்லோரும் ‘என்னைப் பெற்ற தாயே’ எனும் பாவனையில் வணங்குவார்கள். இந்த பக்தவத்சலன் பத்தராவி பெருமாள் (பக்தர்களின் ஆவிக்குரியவன்) என்றும் போற்றப்படுகிறார். இத்தலம் சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)