ராசி கோயிலகள





கேட்டை நட்சத்திரம் திட்டமிடும் கிரகமான புதனை அதிபதியாகக் கொண்டதாகும். மேலும் செயல்படுத்தும் கிரகமான செவ்வாயின் ஆளுமையில் பிறந்ததால் தந்திரத்தோடு எதையும் செய்வீர்கள். சிரித்த முகமாக எல்லோருக்கும் இனியனாக இருப்பீர்கள். ஆனால் உங்களிடம் பகைத்துக் கொள்பவர்களை பழிவாங்கி விடுவீர்கள். நண்பனின் பகைவர்களைக்கூட நண்பராக்கிக் கொள்வீர்கள். ஏனெனில், நண்பனின் லகான் தன் கையில் இருக்க வேண்டுமென்று நினைப்பதுதான்.  திடீரென்று உச்சத்திற்குச் செல்வீர்கள்; எதிர்பாராமல் சறுக்குவீர்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை அமைவதைப் பொறுத்துத்தான் வாழ்வு இருக்கும். உணர்ச்சிப்பிழம்பாக இருப்பீர்கள். அதே சமயம் மிகச் சிறந்த உளவாளியும் நீங்கள்தான். தன்னைவிட அடுத்தவர்களின் வேலைக்குத்தான் முக்கியத்துவம் தருவீர்கள். ஆரம்பத்தில் வெகுளியாக இருந்து, பின்னர் விவேகியாக மாறுவீர்கள்.

கார்த்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, உத்திரம், விசாகம், அவிட்டம், உத்திராடம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் நீங்கள் உயர்வீர்கள். அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, கேட்டை, மூலம், பூராடம், ரேவதி, போன்ற நட்சத்திரக்காரர்களால் செலவு வரும். வேணுகோபால், சந்தான கிருஷ்ணன், சண்முகம், கார்த்திக், ராமமூர்த்தி போன்ற பெயர்கள் உள்ளவர்கள் ஓடி வந்து உதவுவார்கள். சுரேஷ், பாஸ்கரன், விக்னேஷ், சந்திரமௌலி போன்ற பெயருள்ளவர்கள் யோசிக்க வைப்பார்கள்.

மேலே சொன்னவை கேட்டையில் பிறந்தவர்களுக்கான பொதுவான பலன்கள். ஜாதகத்தில் நீங்கள் எந்த நட்சத்திரம் என்று குறிப்பிடும்போதே, எந்த பாதம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைத் தெரிந்துகொண்டு பலன்களைப் படிக்கலாம்...  

கேட்டை நட்சத்திரத்தின் முதல் பாதத்தை தனுசு குரு ஆட்சி செய்கிறார். ராசியாதிபதியாக செவ்வாயும், நட்சத்திர அதிபதியாக புதனும், முதல் பாதத்தை ஆட்சி செய்பவராக குருவும் வருகிறார். இவர்கள் மூவரும் உங்கள் வாழ்வினை நடத்திச் செல்வார்கள். ஏறக்குறைய 14 வயது வரையிலும் புதன் தசை நடக்கும். புதன் நரம்புகளுக்கு உரியவனாக இருப்பதால் இந்த தசை நடக்கும்போது நரம்புக் கோளாறு வந்து நீங்கும். சிறிய வயதிலேயே எல்லா விஷயங்களையும் தொடர்புபடுத்திப் பேசுவார்கள். கொஞ்சிப் பேசும் மழலைத்தனம் 14 வயதுவரை இருக்கும். ரொம்ப புத்திசாலி என்று பெயரெடுப்பீர்கள். 15 வயதிலிருந்து 21 வயதுவரை கேது தசை நடைபெறும். நட்சத்திர நாயகனான புதனுக்கு பகைக்கோளாக இருப்பதால் இழப்புகள், விடுதி வாழ்க்கை என்று இருந்தாலும் மனோபலம் குறையாது.

22லிருந்து 41 வயது வரை சுக்கிர தசை நடைபெறும்போது நீங்கள் பட்டியலிட்டு உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். சாதாரணமாக இருந்தவரின் வாழ்க்கை சட்டென்று மேலேறும். பிரச்னைகள் இருந்தாலும் பணத்தால் சரிசெய்து விடுவீர்கள். அதுதான் சுக்கிர தசை. சுக்கிர தசையில் பலருக்கு காதல் திருமணம் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த தசையின்போது உணவுக் கட்டுப்பாடு தேவை. 42லிருந்து 47 வயது வரையிலான சூரிய தசையில் பெரிய பதவியில் அமருவீர்கள். சுகபோகங்களிலிருந்து விலகுவீர்கள். எல்லோரையும் தேடிப்பிடித்து உதவுவீர்கள். 48லிருந்து 57 வயது வரை சந்திர தசை நடைபெறும். சந்திரன் உங்கள் ராசியில் நீசமாகிவிடுவதால் சிறுநீரகப் பிரச்னைகள் வந்து நீங்கும். 58லிருந்து 64 வயது வரை செவ்வாய் தசை நடைபெறும். உங்கள் சொந்த ராசியாதிபதியின் தசையாக இருப்பதால் சந்திர தசையின் இன்னல்களிலிருந்து வெளிவருவீர்கள்.

இரண்டாம் பாதத்தின் அதிபதியாக மகரச் சனி வருகிறார். புதனும், சனியும் சேர்ந்து அமர்க்களமாக ஆளப்போகிறார்கள். பத்து வயது வரைதான் புதன் தசை நடைபெறும். ஒவ்வாமை, வீசிங் போன்ற தொந்தரவுகள் இருக்கும். 11லிருந்து 17 வயது வரை நடைபெறும் கேது தசையில் எதிலேயும் ஒரு தடங்கல் இருக்கும். சனிக்கு கேது கொஞ்சம் பகையாக இருப்பதால் படிப்பதில் நாட்டமில்லாது கவனச் சிதறல்கள் அதிகமாக இருக்கும். பலர் தாழ்வு மனப்பான்மையினால் யாருடனும் பேசாது இருப்பீர்கள். ஆனாலும் விஸ்காம், ஆட்டோமொபைல் துறையில் சாதிப்பீர்கள். 18லிருந்து 37 வயது வரை சுக்கிர தசை நடைபெறும்போது சிறிய வயதில் நிறைய பணம் பார்ப்பீர்கள். இந்த இருபது வருடங்களில் பணத்தை ஜாக்கிரதையாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் பின் நாட்களில் சிரமப்பட வேண்டியது இருக்கும். சனி இப்போது சுக்கிரனோடு கைகோர்ப்பதால் எதிலும் ஒரு அழகியல் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
மத்திம வயதில் தொழில் தொடங்கி நல்ல நிலையை எட்டிப் பிடிப்பீர்கள். இதற்குப் பிறகு 38 வயதிலிருந்து 43 வரையிலும் உண்டான சூரிய தசை கொஞ்சம் சவாலாக இருக்கும். எவ்வளவு பணமிருந்தாலும் கௌரவமும், பதவியும் எத்தனை முக்கியம் என்று தெளிவீர்கள்.

 பெற்றோருக்கு கண்டம் வரும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படும். 44 வயதிலிருந்து 53 வரையிலான சந்திர தசையில் தெளிவடைவீர்கள். உங்கள் ஜாதகத்தில் உள்ள சந்திரன், குரு பார்வை பெற்றிருந்தால் விபரீத ராஜயோகம் ஏற்படும். மீண்டும் உங்களின் சுக்கிர தசையை ஞாபகப்படுத்துவதுபோல காரியங்கள் நிகழும். செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் சனி மற்றும் புதன் சேர்க்கையோ, பார்வையோ பெறாமல் இருந்தால் நன்று. இல்லையெனில் ரத்த அழுத்தம், ஹிரண்யா, சிறுநீர்ப் பையில் பிரச்னை வரும். 54 வயதிலிருந்து 71 வரை ராகு தசை வரும்போது மனதில் நிம்மதி பெருகும். ஏனெனில், ஒருவிதத்தில் ராகுவிற்கு சனி குருவாக வருகிறார். மூன்றாம் பாதத்தை கும்பச் சனி ஆள்கிறார். கொஞ்சம் சாத்வீகமான அமைப்பு இது. ஏறக்குறைய 7 வயது வரை புதன் தசை நடைபெறும். குழந்தைகளுக்குரிய துறுதுறுப்புடன் கூடிய முதிர்ச்சியும் கலந்திருக்கும். பெற்றோருக்கு இனிமையான காலமாக அமையும். 8 வயதிலிருந்து 14 வயது வரை கேது தசை நடைபெறும்போது யார் பேச்சையும் கேட்க மாட்டீர்கள். எல்லோரிடமும், ‘பையன் இப்படி இருக்கானே’ என்று பெற்றோர் புலம்பும்படியாக இருப்பீர்கள். அடுத்ததாக 15 வயதிலிருந்து 34 வரை சுக்கிர தசை வரும். தோற்றப் பொலிவு கூடும். ‘எட்டாங் கிளாஸ் வரைக்கும் படிப்பு வரலை. இப்போ நானூத்தி அம்பது மார்க் வாங்கியிருக்கான் பார்’ என்பார்கள்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு கிட்டத்தட்ட மத்திம வயதிற்குள்ளேயே சுக்கிர தசை வருவதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நிறைய பணமும், நண்பர்கள் சேர்க்கையும் எப்போதும் இருக்கும். தலை கால் தெரியாது ஆடாமல், கொஞ்சம் நிதானம் அவசியம். மற்றபடிக்கு வாழ்க்கை ஏற்றப் பாதையில்தான் செல்லும். ஆர்க்கிடெக்ட், கன்ஸ்ட்ரக்ஷன், இன்டீரியர் டெகரேஷன் என்று துறைகளைப் பிடித்து பரபரவென மேலேறுவீர்கள். 35 வயதிலிருந்து 41 வரை சூரிய தசை நடைபெறும். தொழிலில் சறுக்கல் ஏற்பட்டு நிமிரும். சனி உங்களின் பாதத்திற்கு அதிபதியாக வருவதாலும், சூரியனுக்கு சனி பகைக்கோளாக இருப்பதாலும் ஏதேனும் தொந்தரவுகள் இருக்கும். 42 வயதிலிருந்து 51 வரை நடக்கும் சந்திர தசையில் பிரச்னைகள் குறையும். சனியும், சந்திரனும் கொஞ்சம் அனுசரித்துப் போவதால் எல்லா பிரச்னைகளும் கட்டுக்குள் இருக்கும். 52 வயதிலிருந்து 57 வரையான செவ்வாய் தசையில், சகோதரர்களை நினைத்து வருத்தப்படும்படியான சம்பவங்கள் நடக்கும். அதற்குப் பிறகு வரும் ராகு தசை மனதில் அமைதியை உண்டாக்கும். 58 வயதிலிருந்து 75 வரை ராகு தசை யோகங்கள் நிறைந்ததாக இருக்கும்.

நான்காம் பாதத்தை மீன குருவோடு, புதனும், செவ்வாயும் சேர்ந்து ஆட்சி செலுத்த உள்ளார்கள். மூன்று வயது வரை நடக்கும் புதன் தசை பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும். ஏதாவது நோய்கள் வந்து நீங்கியபடி இருக்கும். 4 வயதிலிருந்து 10 வரை நடைபெறும் கேது தசையில் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். மீன குரு இந்தப் பாதத்திற்கு அதிபதியாக வருவதால் மதம் சார்ந்த வாழ்க்கை அமையும். மிகச் சிறிய வயதிலேயே அதாவது 11 வயதிலிருந்து சுக்கிர தசை தொடங்கி 30 வயது வரை இருப்பதால் அழகும், ஆரோக்கியமும் கூடும். கலைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ஏதேனும் வித்தையை கைக்கொள்வீர்கள். உடுத்தும் உடையிலிருந்து உள்ளங்கை வரையிலும் எதிலும் தூய்மையை விரும்புவீர்கள். இந்த சுக்கிரன் பெற்றோருக்கு அதிக பணவரவைத் தருவார். 25, 27, 29 வயதில் பணத்தை தண்ணீராகச் செலவழிப்பீர்கள். 31 வயதிலிருந்து 36 வரை சூரிய தசை உங்களை நிமிர்த்திக் கொண்டு செல்லும். மற்ற 2,3 பாதங்களில் பிறந்தவர்களைப்போல சூரிய தசை உங்களுக்கு தொந்தரவு கொடுக்காது. சுக்கிர தசையில் சம்பாதித்தவை, பூர்வீகத்திலிருந்து வந்தவை எல்லாமும் இப்போது பன்மடங்கு பெருகும். 37 வயதிலிருந்து 46 வரை ராசிநாதனுடைய தசையாக இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலத்தை சரி செய்வீர்கள். 47 வயதிலிருந்து 53 வரை செவ்வாய் தசை நடக்கும்போது ராஜ மரியாதையோடு வலம் வருவீர்கள். அதற்குப் பிறகு வரும் ராகு தசையும் ஏற்றம் மிகுந்ததாகவே இருக்கும்.

கேட்டைக்கு எதையும் நியாயமாகப் பெற வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும். கேட்டை கோட்டை கட்டும். அதேசமயம் இடிக்கவும் தெரிந்து வைத்திருக்கும்.  உங்களுக்குள் ஏற்படும் மன அயர்ச்சியும், மன அழுத்தமும் உங்களை தனிமைப்படுத்தும். யாராவது அலட்சியம் காட்டும்போது உடைந்து போவீர்கள். புதனின் அம்சம் அதிகமாக இருப்பதால் அவமானம் தாங்க மாட்டீர்கள். தாழ்வு மனப்பான்மை அதிகமாகும். இதுபோன்ற நேரங்களில் உங்களுக்குள் இருக்கும் ஆலோசகர் குழம்புவதுண்டு. எனவே, ராஜ குருவும், ராஜதந்திரியுமான, தர்மம் தழைக்கச் செய்யும் தர்மதேவனும், மாபெரும் போரைக்கூட தன் கண் பார்வையிலேயே நடத்திய பகவான் கிருஷ்ணரை வழிபடும்போது உங்களுக்குள் மிகப்பெரிய தெளிவும் திடமும் உணர்வீர்கள். பகவான் கிருஷ்ணர் தம்மை அர்ச்சாவதாரமாக ரூபமாக நிலை நிறுத்திக்கொண்ட தலங்களுக்கும், ஆழ்வார்களால் பாடல்பெற்ற திவ்ய தேசங்களுக்கும் சென்று தரிசித்து வரும்போது தலத்தின் மகாத்மியம் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை உண்டு செய்யும். அப்படிப்பட்ட ஓர் அற்புதத் தலமே திருக்கண்ணங்குடியாகும்.
இந்த திவ்ய தேசத்திற்கு கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் என்று பெயர். மூலவர் லோகநாதர், ஸ்ரீதேவி& பூதேவி சமேதராக, நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார், லோகநாயகி. இத்தலம் நாகப்பட்டினம்&திருவாரூர் சாலையில் ஆழியூர் பள்ளிவாசல் என்கிற இடத்திலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

அடுத்த வாரம் தனுசு ராசியில் பிறந்த அன்பர்களுக்காக...