கவிதைக்காரர்கள் வீதி





திரியில் தொடங்கி
கரியில் முடிகிறது
பட்டாசுகளின் வாழ்க்கை!

பணக்காரர்களின் வீட்டு
பட்டாசு சத்தம்
அடக்கிக் கொண்டே இருக்கிறது
ஏழைகள் வீட்டு வாசல்
பட்டாசு ஓசையை!
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

மத்தாப்பின் ஒளியைவிட
பிரகாசம்,
அதைப் பார்த்து
குதூகலிக்கும்
குழந்தையின் முகம்!

நீளப் பட்டாசு
நொடிப் பொழுதில்
சாம்பலாகி
உணர்த்துகிறது
வாழ்க்கைத் தத்துவம்!

தீபாவளி நாளில்
வராமல் இருக்காது,
கைப்பிடித்து மத்தாப்பு சுற்றி
மகிழ்வித்து சிரித்த
அப்பாவின் ஞாபகங்கள்!

சத்தம்
குறைவாக இருக்குமோ,
ரேஷன் கடைகளில்
வெடிகளை விநியோகித்தால்!
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.