மல்லிகை





ரோட்டுக்கு எதிர்ப்புறம் பூக்கடையில் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டிருந்த சரவணனைக் கண்கொட்டாமல் பார்த்தாள் விசாலம். அவன் தலைதிரும்பியதும் கவனிக்காதவள் போல தலையைத் திருப்பிக்கொண்டாள். ‘பொண்டாட்டி படுத்த படுக்கை! இவன் யாருக்காகத் தினம் பூ வாங்குகிறான்?’ & இந்தக் கேள்விக்கு விடை தெரியாவிட்டால் அவளுக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவளாக, கொஞ்சம் இடைவெளி விட்டு அவனைப் பின்தொடர்ந்தாள்.

தெருமுனை பிள்ளையார் கோயிலுக்குள் சரவணன் நுழைந்தான். அர்ச்சகரிடம் பூவைக் கொடுத்துப் பிள்ளையாருக்குச் சாற்றச் சொல்லிவிட்டு, வினிதா பெயரில் அர்ச்சனையும் செய்யச் சொன்னான். இதற்குள் விரைந்து வந்து தூணுக்குப் பின்னால் நின்றுவிட்டிருந்த விசாலம் காதில் வாங்கிக்கொண்டாள். இன்ப அதிர்ச்சிக்கு ஆளானாள்.‘‘தினம் அர்ச்சனை பண்றேளே, என்ன விஷயம் சார்?’’ என்ற அர்ச்சகரின் வியப்பான வினாவுக்கு, ‘‘அவங்க என் சம்சாரம். உடம்பு சரியில்லை. சீக்கிரம் குணமாகணும்னுதான்...’’ என்ற சரவணனின் பதிலையும் விசாலம் காதில் வாங்கிக்கொண்டாள். நிம்மதிப் பெருமூச்சுடன் விரைவாக அங்கிருந்து நீங்கினாள். உடனே வினிதாவைப் பார்த்து அதைச் சொல்லிப் பாராட்டாவிட்டாலும் அவளுக்குத் தலை வெடிக்கும் போலாயிற்று!

- ஜோதிர்லதா கிரிஜா