முகங்களின் தேசம்



தீண்டாத ஆழம்

2009  மார்ச் பதினொன்றாம் தேதி நானும், என் நண்பரும் எழுத்தாளருமான யுவன் சந்திரசேகரும், மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனும், சில  நண்பர்களுடன் நெல்லை அருகே உள்ள நவதிருப்பதிகளுக்குச் சென்றபின் திரும்பும் வழியில் கிருஷ்ணாபுரம் பார்த்துவிட்டு ஆதிச்சநல்லூர் செல்வது  என முடிவு செய்தோம்.

ஆதிச்சநல்லூரைப் பற்றி பொதுவாக நண்பர்களிடையே பெரிய புரிதல் இல்லை. சுருக்கமாக அதன் முக்கியத்துவத்தை  விளக்கினேன்.ஆதிச்சநல்லூர், திருநெல்வேலியிலிருந்து 24 கி.மீ. தூரத்தில் உள்ள சிறிய கிராமம்.

தாமிரவருணி இந்த ஊர் வழியாக ஓடுகிறது. ஆனால் நிலம் வளமானதல்ல. இங்கே தாமிரவருணியின் கரையில் ஒரு மேடு இருந்திருக்கிறது. இந்த மேடு  ஒரு இடுகாடு. கி.மு. பத்தாம் நூற்றாண்டுக்கும் முந்தையது.  இரும்புக் காலகட்டத்தின் தொடக்கத்தில் அமைந்த நாகரிகம் இது.

ஆதிச்சநல்லூர் கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு ஆர்வமூட்டும் கதை.  பதினேழாம் நூற்றாண்டு இஸ்லாமியப் படையெடுப்புகளின்போது நகைகளையும் காசுகளையும் புதைத்து வைக்கும் வழக்கம் உருவானது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் புதையல் எடுப்பது ஒரு  மனநோய் அளவுக்கு தமிழ்ச் சமூகத்தை பீடித்தது. இவ்வாறு கண்ட இடங்களில் தோண்டிக்கொண்டிருந்த காலத்தில்,  மேய்ச்சல் மக்கள் இந்தக்  குன்றிலிருந்து சில  தங்க நகைத் துண்டுகளைத் தோண்டி எடுத்தனர்.

பின்னர் இங்கே தேடுதல் வேட்டை  ஆவேசமாக நடந்தது.புதையல்களைப் பறிமுதல் செய்வதில் ஜரூராக இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின்  கவனத்துக்கு இது சென்றது. அவர்களிடமிருந்து புதைபொருள் ஆய்வாளர்கள் களத்துக்கு வந்தார்கள். 1876ல் பிரிட்டிஷ் ஆய்வாளரான   அலெக்ஸாண்டர் ரெயா இங்கே விரிவான தொல்லியல் ஆய்வுகளை நடத்தினார். தென்னிந்தியாவில் இத்தனை பிரமாண்டமான தொல்பொருள்  குவியல் எங்குமே கிடைத்தது இல்லை. 

ஆதிச்சநல்லூர்  காட்டிய பண்பாடு மிக வளர்ச்சி கொண்டிருந்தது. அங்கே கிடைத்த மண்பாண்டங்களில் எழுத்துருக்கள் இருந்தன. ஐராவதம்  மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள் அவற்றுக்கு ஹரப்பா நாகரிக எழுத்துக்களுடன் உள்ள ஒற்றுமையைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அங்கே கிடைத்த  உலோகப் பொருட்கள் மிக நுண்மையாகச் செய்யப்பட்டிருந்தன.

பல்வேறு கால கட்டங்களாக இங்கே தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள்  தாழிகள் கிடைத்துள்ளன. நாலாயிரம் வருடப் பழமை அவற்றுக்கு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஏறத்தாழ 114 ஏக்கர் சுற்றளவில்  தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாழிகள் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக மூன்று மண் அடுக்குகளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.  குறைந்தது ஆயிரம் வருட காலம் இந்த இடுகாடு பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதற்கான ஆதாரம் இது.

 டாக்டர் சத்யார்த்தி அவர்கள் ஆதிச்சநல்லூரில் மேலும் விரிவான ஆய்வுகளைத் தொடங்கி இன்றைய கவனம் அதன் மீது உருவாக வழிவகுத்தவர்.  2004 முதல் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தமிழ் வரலாற்றின் காலக் கணிப்புகளையும் தமிழ்ப் பண்பாட்டின் ஆழத்தையும் பிரமிக்கத்தக்க  முறையில் மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை.

மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீப காலமாக கண்டறிந்துள்ளார்கள். அன்றாடப் புழக்கத்துக்கான மண்பாண்டங்களில்  உள்ள எழுத்துக்களைக் காணும்போது, அக்காலத்தில் கல்வியறிவு மிகப் பரவலாக இருந்தது என்றும் அது ஒரு நாகரிக சமூகம் என்றும் ஊகிக்கிறார்கள்.
ஆதிச்சநல்லூருக்கு நாங்கள் நல்ல மதிய வெயிலில் சென்று சேர்ந்தோம். அந்த பெரிய செம்மண் பாறைக் குன்றைச் சென்றடைந்ததும் அங்குமிங்கும்  பார்த்தோம். தொல்பொருள்துறையின் அறிவிப்போ, வேறு அடையாளங்களோ ஏதும் இல்லை.

தடுமாறிக்கொண்டிருந்தபோது ஒரு சிறிய கல்மண்டபத்தில் இருவர் அமர்ந்திருப்பதைக் கண்டோம். வண்டியை நிறுத்தி அவர்களிடம், ‘‘ஐயா,  ஆதிச்சநல்லூர் இதுதானா?’’ என்று கேட்டோம்அதில் ஒரு கிழவர் எழுந்து வந்தார். ஆடு மேய்ப்பவர் என்பதை அவர் வைத்திருந்த வளைந்த அரிவாள்  நுனி கொண்ட துரட்டியாலேயே சொல்ல முடிந்தது. தலையில் ஒரு துண்டு. தொடைக்கு மேல் கட்டிய அழுக்கு வேட்டி. டயர் செருப்பு. சட்டை  இல்லாத கரிய உறுதியான உடல், வெயில்பட்டு காய்ந்து கரிந்து ஒரு காட்டுச்சுள்ளி போல இருந்தது. 

கிழவர் அருகே வந்து, ‘‘இதுதான் எடம்... இதுதான் ஆதிச்சநல்லூர்... ஆனா இங்க ஒண்ணுமே கெடையாது. எல்லாத்தையும் மெட்ராஸுக்குக் கொண்டு  போயிட்டாங்க. எங்கயோ வச்சிருக்காங்க. ஒண்ணுமே இங்க கெடையாது’’ என்றார். ஏமாற்றமாக, ‘‘சரி! எடத்தையாவது
காட்டுங்க’’ என்றேன்.

 சலிப்புடன், ‘‘எதுக்கு இந்த வெயிலிலே?’’ என்றான் யுவன். நான், ‘‘சரி! வந்தாச்சுல்ல?’’ என்றேன். கிருஷ்ணன்,  ‘‘போய்த்தான் பாப்பமே’’ என்றார்.  இறங்கிச் சென்றோம். அங்கே குழிதோண்டி எடுத்த பொருட்களைக் கொண்டு சென்றபின் குழிகளையும் சுத்தமாக மூடிவிட்டார்கள்.  மூடிய  குழிகள்  மேலே நடந்தோம்.

‘‘இங்கதான்  தென்னிந்திய நாகரிகமே உருவாகியிருக்கு... மறைக்கிறானுங்க’’ என்றார் கிழவர். ‘சரிதான்... அரைகுறையாக ஏதோ தெரிந்துகொண்டு  கதையளக்கப் போகிறார்’ என நினைத்தேன். கிருஷ்ணன் சற்றே கடுப்பாகி, ‘‘ஆமாமா, உலக நாகரிகமே இங்கதான்’’ என்றார்.  நான் கிருஷ்ணனின்  கையைப் பிடித்து அழுத்தி சும்மா இருக்கச் சொன்னேன். ஏனென்றால், ‘நாகரிகம் என்ற சொல்லை அத்தனை சாதாரணமாக ஒரு கிராமவாசி சொல்ல  மாட்டார்’ என்று தோன்றியது.

கிழவர் என்னிடம், ‘‘இதிலே தமிழ் ஆசிரியர் யாராவது உண்டா?’’ என்றார். ‘‘இல்லை’’ என்றேன். ‘‘மத்தபடி சரித்திரம் வாசிக்கிறவங்க உண்டா?’’  என்றார். ‘‘நாங்க வாசிக்கிறதுண்டு’’ என்றேன். அவர் பெருமூச்சு விட்டு, ‘‘பாத்திஹல்ல? எப்டி போட்டு வச்சிருக்கானுக? ஒரு குறிப்பு உண்டா? ஒரு  அடையாளம் உண்டா? எடுத்த பொருட்களை அங்கங்க தொல்பொருள்துறை ஆபீஸ்களிலே  பிரிச்சு பதுக்கி வச்சிருக்காங்க. என்ன செஞ்சிருக்கணும்,  இங்க ஒரு மியூசியம் கட்டியிருக்க வேண்டாமா?

இங்க எல்லாத்தையும் வச்சு, வேணுங்கிறவன இங்க வந்து ஆராய்ச்சி செய்யச் சொல்லணும். அப்பதான் இந்த எடத்தோட முக்கியத்துவம் தெரியும். ‘இது  எப்பேர்ப்பட்ட எடம்? இதோட வரலாறு என்ன?’ எல்லாம் வெளியே தெரியும். இப்ப ஆதிச்சநல்லூர்னா யாருக்குத் தெரியும்? நான் ஜனாதிபதிக்கு  எழுதினேன். கவர்னருக்கு எழுதினேன். எத்தனையோ மனு கொடுத்திருக்கேன். யாருக்கு அக்கறை? ஒண்ணுமே நடக்கலை’’ என்றார்.

கிருஷ்ணன் பிரமித்துப் போய்விட்டார். கிழவர் சரசரவென பேசிக்கொண்டே போனார்... ‘‘இதுதான் இந்தியாவிலேயே பழமையான தொல்பொருள்  எடம். இங்கதான் இந்தியாவிலேயே வளர்ச்சி அடைஞ்ச நாகரிக இனம் இருந்ததுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. இன்னும் முழுசா கண்டுபிடிக்கலை...  கண்டுபிடிச்சிட்டே இருக்காங்க. எழுத்துக்களை இப்பதான் கண்டுபிடிக்கிறாங்க. ஏய், தாழிகளிலே நெல்லும் உமியும் இருந்ததே... அது என்ன இன  நெல்லுன்னு கண்டுபிடிச்சியா நீ? அந்த நகையில எப்படி செம்பையும் தங்கத்தையும் கலந்தான்னு கண்டுபிடிச்சியா நீ? இல்ல. இதுவரைக்கும் ஒரு நல்ல  ஆராய்ச்சி நடக்கலை...

ஏன் தெரியுமா? ஏன்னா, ‘நாகரிகம்னா அது வடக்கே’ன்னு வெள்ளைக்காரன் சொல்லிட்டான். அவனுக்கு மூக்கு நீளமான ஈரானிலே இருந்து பண்பாடு  வந்ததுன்னு சொல்ல ஆசை. அதுக்கு சிந்து சமவெளி நாகரிகத்தை உசத்திப் பிடிக்கணும். அப்பவே ஆதிச்சநல்லூரைக் கண்டுபிடிச்சாச்சு. எத்தனை  அறிஞர்கள் பேசியிருக்காங்க? ஆனா தொடர்ச்சியா பேசலை. அப்படியே விட்டுட்டாங்க. நம்மாளுகளும்  அதுக்கு மேலே பேசலை. அம்பது வருடம்  ஆதிச்சநல்லூரைப் பத்தி பேச்சே கெடையாது ஐயா... வெளங்குமா? நாடா இது?  வெள்ளைக்காரனுக்கு கறுப்பன்னா எளக்காரம்.

இங்க வந்து பனங்கொட்டை மூஞ்சுற நம்ம பயகளை போட்டோ பிடிச்சு பேப்பரிலே போட்டு ‘எல்லாரும் ஆதிவாசிகள்... இங்க நாகரிகமே  கெடையாது’ன்னுட்டான். உண்மையா ஒருத்தன் ஆராய்ச்சி செஞ்சா அவனுக்குத் தெரியும் ஆதிச்சநல்லூரோட எடம் என்னன்னு. இப்ப வருது... இப்ப  ஒண்ணொண்ணா சில ஆய்வுகள்லாம் வருது. அப்படி உண்மையை ரொம்ப நாளுக்கு புதைச்சு வச்சிட முடியாது...’’

எனக்கும் அது மிக ஆச்சரியமாக இருந்தது. ஏன் ஆதிச்சநல்லூரில் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் வைக்கக்கூடாது? ஒரு நிரந்தர தொல்பொருள்  மையம் இங்கே உண்டு என்றே எண்ணியிருந்தேன். அந்த மகத்தான தொல்பொருள் புதைபூமி இப்படி கைவிடப்பட்டு திறந்து கிடப்பதை எண்ணவே  ஆச்சரியமாக இருந்தது.

ஆதிச்சநல்லூர் தொல்பொருட்களை ஏன் பல்வேறு இடங்களில் பிரித்து வைக்கவேண்டும்? அவை ஆய்வாளர்களுக்கு உரியவை, சரி. ஆனால் அவை  மக்கள் பார்வைக்கும் உரியவை அல்லவா? அவை மாபெரும் குறியீடுகள் அல்லவா? ஒரு சமூகம் தன் வேர்களை உணரும் ஆன்மிகமான பேரனுபவத்தை  அளிக்க வல்லவை அல்லவா? குறைந்தபட்சம் ஆதிச்சநல்லூரில் அந்த அரும்பொருட்கள் எங்கே உள்ளன என்றாவது ஒரு குறிப்பு இருக்கலாமே?

கிழவர் பேசிக்கொண்டே போனார். ‘‘ஆரியன் - திராவிடன் ஒண்ணும் கெடையாது. எல்லாம் இங்கேருந்து போனவங்கதான். இதுதான் பூர்வீக நெலம்.  இந்த தாமிரவருணி மண்ணு... எத்தனை ஆயிரம் வருஷம் முன்னாடி... மொகஞ்சதாரோ, ஹரப்பா எல்லாம் இங்கேருந்து போனவங்க உண்டு பண்ணின  விஷயங்கள்.  இந்தியாவிலே உள்ள எல்லா சிந்தனைகளும் இங்கேருந்து மேலே போனதுதான்.

இதைச் சொல்ல இன்னைக்கு ஆளில்லை...’’ நான் அவரைச் சீண்டுவதற்காக, ‘‘ஆனா ஆதிச்சநல்லூர்னுதானே பேரு? ஆதித்தன்னா வடமொழியாச்சே’’  என்றேன். ‘‘ஆதித்தநல்லூர்னு எவன் சொன்னான்?’’ என்று கிழவர் நின்று விட்டார். ‘‘இந்த ஊருக்குப் பேரு ‘ஆதி எச்ச நல்லூர்’... இது எத்தனையோ  காலமா சுடுகாடா இருந்திருக்கு. இந்த எடம் சுடுகாடா ஆனதுக்கு அந்தக் காலத்திலே ஏதோ காரணம் இருந்திருக்கு. தேடிக் கொண்டுவந்து  புதைச்சிருக்காங்க. ஏன்னு தெரியலை!’’ என்ற கிழவர் இன்னும் கோபமானார்.

‘‘ஆதித்தன்னு பேரு வச்சுக்கிட்டவன் சோழன். பாண்டியனுக்கு அந்தப் பேரு கெடையாது. ஏன்னா, சோழர்கள் சுத்த தமிழர்களே கெடையாது. வேங்கி  நாட்டுலேருந்து வந்தவனுங்க. ஆதித்தன்னு எங்க சொல்லியிருக்கு தமிழிலே? ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’னுதானே இளங்கோ சொல்றார்?’’
நான், ‘‘ஆதின்னாலும் வடமொழிதானே?’’ என்றேன். ‘‘என்னய்யா? ‘ஆதி’ங்கிற வடமொழிச் சொல்லுக்கு எங்க வேர் இருக்கு? சொல்லுங்கய்யா...  ‘ஆதி’ங்கிறது சுத்தமான தமிழ்ச்சொல்லு. ‘அது’ங்கிற வேர்தான் ஆதியாகியிருக்கு.

அதை வடமொழிக்காரன் எடுத்துக்கிட்டான். அவன் மொழியே முக்கால்வாசி சொற்களை அங்க இங்க இருந்து பொறுக்கி எடுத்துக்கிடுறதுதான்...’’
அதற்கு மேல் நான் அவரிடம் பேச ஒன்றுமில்லை. ‘‘நம்ம வரலாறுக்கு எத்தனையோ ஆழம் இருக்கு தம்பி! நீங்கல்லாம் படிச்சுப் பாக்கணும்.  சிலப்பதிகாரத்திலே சொல்லியிருக்கு ‘பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ அப்டீன்னு... நம்ம வேரு எங்கியோ  கெடக்கு!’’

கிழவர் ஒரு உடைந்த ஓட்டுக் குவியலைக் காட்டினார். ‘‘இதெல்லாம் மண்பாண்டக் குவியல், உடைஞ்சது. சும்மா வந்துக்கிட்டே இருக்கு... கறுப்பு  ஓடுகள், சிவப்பு ஓடுகள், கறுப்பும் சிவப்பும் கலந்த ஓடுகள். மிக மெல்லியவை, ஆனால் மிக உறுதியானவை. அந்தக் காலத்திலே இலுப்பை  எண்ணெயைப் போட்டு களிமண்ணை பெசைஞ்சு பானை வனைஞ்சாங்க. அந்த இலுப்பை எண்ணெய்தான் கறுப்பா ஆகி
யிருக்கு...’’ என்றார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணில் நின்று அந்த கலத்துண்டுகளை எடுத்துப் பார்ப்பது மனக்கிளர்ச்சி ஊட்டும் அனுபவமாக இருந்தது. என்றோ ஒருநாள்  ஆதிச்சநல்லூரின் பாடங்கள் மேலும் துல்லியமாகப் படிக்கப்படலாம். அப்போது நம் வரலாறு முழுமையுடன் மேலெழுந்து வரலாம்.
‘‘அப்ப நான் கெளம்புறேன்...’’ என்றார் கிழவர்.

‘‘அய்யா பேரு என்னங்க?’’ என்றேன். ‘‘சிதம்பரம்’’ என்றார். ‘‘என்ன பண்றீங்க?’’ என்றான் யுவன். ‘‘பாத்தா தெரியலை, மாடு மேய்க்கிறது. நமக்கு அந்தப்  பக்கமா கொஞ்சம் நெலம் உண்டு. வெவசாயம். ஸ்கூலுக்குப் போகலை. அண்ணாவைத்தான் படிக்க வச்சாங்க. எல்லாம் நானே வாசிச்சுப்  படிச்சுக்கிட்டதுதான்’’ என்றார்.

‘‘இப்பவும் படிக்கிறீங்களா?’’ என்றார் கிருஷ்ணன். ‘‘நாளைக்கும் படிப்பேன்’’ என்றார் சிதம்பரம் ஆணித்தரமாக. ‘‘அப்ப நான் வாரேன்’’ - கும்பிட்டுக்  கிளம்பினார்.‘‘சார்! தலையிலே கடப்பாரையாலே அடிச்சது மாதிரி இருந்தது’’ என்றார் கிருஷ்ணன். ‘‘ஆனா எனக்கு ரொம்ப தேவையான அடிதான்’’  என்றார்.

யுவன் சந்திரசேகர், ‘‘என்னய்யா இது, ஆச்சரியமா இருக்கு! கதையிலே இருந்து எந்திரிச்சு வாரது மாதிரி வந்திட்டார்.  சொன்னா நம்பவே  மாட்டாங்க...’’ என்றான். ‘‘அவரு நம்மளை ஒரு பொருட்டாகவே நெனைக்கலை பாத்தியா? அவருக்கு நம்ம கிட்ட பேசுறதிலே ஆர்வமே கெடையாது.  நாம வழி கேட்டப்ப பேசாமத்தான் இருந்தார். கட்டாயப்படுத்தி  கூப்பிட்டப்பதான் வந்தார்...’’

அங்கிருந்து திரும்பும்போது எண்ணிக்கொண்டேன்.ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் இன்னும் எத்தனையோ தொல்மூதாதையர்  உறங்கிக்கொண்டிருக்கலாம். நம் ஞானம் இன்னும் சென்று தீண்டாத ஆழத்தில். சிதம்பரம் வாயிலிருந்துகொண்டு அவர்கள்தான் பேசியிருக்கிறார்கள்.

இஸ்லாமியப் படையெடுப்புகளின்போது நகைகளையும் காசுகளையும் புதைத்து வைக்கும்  வழக்கம் உருவானது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்
காலத்தில் புதையல் எடுப்பது  ஒரு மனநோய் அளவுக்கு தமிழ்ச் சமூகத்தை பீடித்தது.

‘‘தாழிகளிலே
நெல்லும் உமியும் இருந்ததே...
அது என்ன இன
நெல்லுன்னு கண்டு
பிடிச்சியா நீ? அந்த நகையில எப்படி
செம்பையும்
தங்கத்தையும் 
கலந்தான்னு
கண்டுபிடிச்சியா
நீ? இல்ல.’’

‘‘இது எத்தனையோ காலமா சுடுகாடா இருந்திருக்கு.
 இந்த எடம் சுடுகாடா
ஆனதுக்கு  அந்தக் காலத்திலே ஏதோ
காரணம்
இருந்திருக்கு.
தேடிக் கொண்டுவந்து 
புதைச்சிருக்காங்க. ஏன்னு தெரியலை!’’

(தரிசிக்கலாம்...)

ஜெயமோகன்

ஓவியம்: ராஜா