லியானார்டோ டிகாப்ரியோ
பசுமை பேச்சாளர்கள் 31
அமெரிக்காவைச் சேர்ந்த டிகாப்ரியோ, தன் தொழிலான நடிப்பைக் கடந்து பவுண்டேஷன் மூலம் சூழலைக் காப்பதற்கான முயற்சிகளை உத்வேகமாக செய்துவருகிறார்.1974 ஆம் ஆண்டு பிறந்த டிகாப்ரியோ, தனது பதினான்கு வயதிலேயே டிவி விளம்பரங்களில் தலைகாட்டத்தொடங்கினார். லியானார்டோ டாவின்சியின் நினைவாக பெயர் சூட்டப்பட்ட டிகாப்ரியோ, சீட்ஸ் தொடக்கப்பள்ளி, ஜான் மார்ஷல் மேல்நிலைப்பள்ளியில் சிறிது காலம் படித்தார், பின்னாளில் அங்கிருந்து டிப்ளமோ சர்டிபிகேட்டுடன் படிப்பை கைவிட்டார்.
டைட்டானிக் படம் முடிந்தபின் 1998 ஆம் ஆண்டே தன் பெயரில் என்ஜிஓவை சூழல் விழிப்புணர்வுக்காக தொடங்கிய நன்மனிதர். வெப்பமயமாதல், பல்லுயிரியச்சூழல், புதுப்பிக்கும் ஆற்றல் என நாற்பது நாடு களில் இதற்கான திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வரு கிறது. இரண்டு ஆவணப்படங்களையும் சூழல் விழிப்புணர்வுக்காக உருவாக்கியுள்ளார். தனது தீவிரமான சூழல் பணிகளுக்காக மார்ட்டின் லிட்டன் சூழல் பரிசு (2001), சூழல் தலைவர் விருது (2003) ஆகிய விருது களையும் பெற்றுள்ளார்.
2007 ஆம் ஆண்டு “11th Hour” என்ற வெப்பமயமாதல் பற்றிய டாகுமெண்டரியை லியானார்டோ டிகாப்ரியோ எழுதி தயாரித்தார். மனிதர்களுக்கும் வெப்பமயமாதலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேசும் படம் இது.
இதற்காக ஓவியக்கண்காட்சி மூலம் 40 மில்லியன் டாலர்களை திரட்டியது இவரின் தன்னிகரற்ற சாதனை. கடந்த ஆண்டு ஜூலையில் இவரின் தன்னார்வ அமைப்புக்கு பழங்குடி அமெரிக்கர்களின் வாழ்வையும், கானுயிர்களையும் காக்க 15.6 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டது.
ஜனநாயகக் கட்சி ஆதரவாளரான டிகாப்ரியோ, உலக கானுயிர் நிதியகம் (WWF), குளோபல் க்ரீன் யுஎஸ்ஏ உள்ளிட்ட அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆர்வம் கொண்டவர். 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா சபையில் சூழல் குறித்து தீர்க்கமாக உரையாட டிகாப்ரியோவுக்கு வாய்ப்பு கிடைத்தது உலகின் நலன் காக்கும் பணிகளால்தான். “வெப்பமயமாதலுக்கு விரைவில் நாம் தீர்வு காணவேண்டும்.
மாசு படுதல் பற்றி பேசாமல், மனிதநேயம் பற்றிப் பேசும் தலைவர்களால் உருவான பேராசையின் விளைவுகளை நாமும் நம் பிற்கால சந்ததியும் சந்திப்பது சரியானதல்ல” என்கிறார் டிகாப்ரியோ. தனது வீடு, வாகனங்கள் அனைத்தையும் க்ரீன் முறையில் சூழலுக்கு கேடின்றி உருவாக்கியுள்ளார் டிகாப்ரியோ.
விடு முறைக்கு இவர் பயன்படுத்தும் ஜெட் விமானங்கள் விமர்சிக்கப்பட்டாலும், பல்வேறு சூழல் திட்டங்களுக்காக தொடர்ந்து நன்கொடை அளித்து சமூகத்திற்கே முன்னுதாரணமாக உள்ள மனிதர் லியானார்டோ டிகாப்ரியோ.
|