பழம் தின்று கொட்டைப் போட்ட கதைதான். அனைத்து பாட்டிமார்களும் நூற்றாண்டுகளாக சொல்லி வரும் நல்லொழுக்க விதி தான். இருந்தாலும் சாகச மன்னன் ஜெட்லி, அதகளம் செய்திருப்பதால் ‘போதிதர்மன்’, போரடிக்கவில்லை.
தீமை விளைவிக்கக் கூடிய இரண்டு நாககன்னிகளின் பார்வையில் ஒரு சீடன் படுகிறான். இவனை வைத்து உலகத்தை அழிக்கலாம் என்று திட்டமிடும் நாககன்னிகளில் ஒருத்தி, வெள்ளை நிறப் பெண்ணாக மாறி, அந்த சீடனை காதலிக்கிறாள்.
இந்த சீடனின் குருதான், ஜெட்லி. தன் சீடனை, நாககன்னிகள் வசப்படுத்தி இருப்பதையும், அதன் மூலம் உலகை அழிக்க முயல்வதையும் அறியும் ஜெட்லி, தன் மந்திர சக்தியாலும் சாகசத்தாலும் எப்படி நாக கன்னிகளை அழித்து தன் சீடனையும், இந்த உலகையும் காப்பாற்றுகிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
மந்திரம் சொல்லும்போது அமைதிப் பூங்காவாகவும், எதிரிகளை பழி வாங்கும் போது எரிமலையாகவும் இருவேறு பரிமாணங்களை காட்டியிருக்கிறார் ஜெட்லி. வெள்ளை நாககன்னி ஈவா யுவாஸ் தன் வசீகரமான அழகால் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கிறார்.
மார்க் லுயின் பின்னணி இசை அபாரம். எண்ணிலடங்கா பாம்புகள், எலிகள், ஜலக்குவியல் என்று கிளைமாக்ஸ் பகுதியில் கிராபிக்ஸ் காட்சிகள் அமர்க்களப்படுகிறது.