தயாரிப்பாளரை ஆண்டியாக்கும் தமன்னா



எவ்வளவுதான் போராடிப் பார்த்தாலும், தமிழில் ஒரு படம் கூட கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் தமன்னா. காரணம், அவரது சம்பளம். நடிக்க வந்த புதிதில், கொடுத்ததை வாங்கிக்கொள்வார். இப்போது தெலுங்கிலும், இந்தியிலும் நடிப்பதால், தமிழுக்கும் அதே அளவு சம்பளம் எதிர்பார்க்கிறார். லட்சங்களில் அல்ல, கோடிகளில். அதாவது, ஒரு படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்வதாக இருந்தால், அவரது சம்பளத்துக்கே ஒன்றே முக்கால் கோடி செலவாகிறது.

பிறகு அவர் மும்பையில் இருந்து விமானத்தில் வந்து போகும் செலவு, உதவியாளர்கள் செலவு, அவர்கள் தங்குவதற்கான ஹோட்டல் செலவு, தமன்னா தங்குவதற்கான பிரபல நட்சத்திர ஹோட்டல் செலவு என தயாரிப்பாளரின் அனைத்து சொத்துகளையும் அடமானம் வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதால், அம்மணியைப் பற்றி எந்த இயக்குனர் பேச்சை ஆரம்பித்தாலும், உடனே அதை ஆஃப் செய்துவிடுகிறார்களாம் பல தயாரிப்பாளர்கள். இதுதான் தமன்னா மீண்டும் தமிழில் திறமை காட்டாததற்கான காரணம் என்கிறார்கள்.

ஒரே படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடித்த பிறகும் சண்டை, சச்சரவு ஏற்படாமல் இருந்தால் எப்படி இருக்கும்? சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை’ படத்தில் ராய் லட்சுமி, ஹன்சிகா, ஆண்ட்ரியா சேர்ந்து நடித்தனர். ஷூட்டிங் முடிந்த சில நாட்களில், மூவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். அடிக்கடி எஸ்.எம்.எஸ் செய்து, வாட்ஸ்-அப்பில் போட்டோக்கள் அனுப்பி, ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘ஒரே படத்தில் மூன்று பேரையும் இயக்கி, எந்த அவஸ்தையும் இல்லாமல் ஷூட்டிங்கை முடித்து விட்டேன். யாருக்கும், எந்த கருத்து வேறுபாடும் வரவில்லை. உண்மையிலேயே இது உலக மகா சாதனைதான்’ என்று, தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறார் சுந்தர்.சி.

டி. ராஜ்