சித்தார்த் அடம்பிடித்து வாங்கிய கேரக்டர்!



ஒரு சினிமா வெற்றி அடையும் போது அந்தப் படத்தின் இயக்குனர் தவறாமல் உச்சரிக்கும் வார்த்தை ‘கூட்டு முயற்சி’. அதுபோல் அறுபது தயாரிப்பாளர்களின் கூட்டு முயற்சியால் கன்னடத்தில் வெளிவந்த படம் ‘லூசியா’. சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த அந்தப் படத்தை தமிழில் தயாரிக்கிறார் சி.வி.குமார்.

 படத்தின் பெயர் ‘எனக்குள் ஒருவன்’. திரையரங்கில் வேலை செய்யும் ஏழை இளைஞன் திரையில் வரும் ஹீரோவைப் போல மாடர்னாக வாழ ஆசைப்படுகிறான். அந்த இளைஞனின் கனவு பலித்ததா என்பதுதான் கதை.

சித்தார்த் இதன் நாயகன். நாயகி தீபா சன்னதி. இவர்களோடு ‘ஆடுகளம்’ நரேன், அஜய் ரத்னம் ஆகியோரும் இருக்கிறார்கள். ஒளிப்பதிவு கோபி அமர்நாத். இசை சந்தோஷ் நாராயணன். இயக்கம் பிரசாத் ராமர்.“‘லூசியா’ படத்தை பார்த்த பிறகு எப்படியாவது அந்தப் படத்தை தமிழில் தயாரிக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளரை அணுகினேன். மறுமுனையில் ‘ஸாரி சார்.

நீங்க ரொம்ப லேட். அந்தப் படத்தின் தமிழ் உரிமையை ஏற்கெனவே சேல்ஸ் பண்ணிவிட்டோம்’ என்றார்கள். விசாரித்ததில் என்னுடைய நண்பர் சி.வி.குமாரிடம்தான் அந்தப் படத்தின் உரிமை இருந்தது. அவரிடம் ‘நான்தான் நடிப்பேன்’ என்று அடம்பிடித்து நடித்தேன். அந்தளவுக்கு இந்தப் படத்துல நாயகனின் கேரக்டரும், கதையும் அழுத்தமாக இருக்கும். நான் ரசிச்ச மாதிரி நீங்களும் ரசிப்பீர்கள்” என்கிறார் சித்தார்த்.

-எஸ்