மாயவரம் பொண்ணு! மயக்குகிற கண்ணு!



இந்த ட்விட்டர் வந்தாலும் வந்தது, நட்சத்திரங்களின் பாடு திண்டாட்டமாகி விட்டது. ஏதாவது ஒரு கருத்து பதிவு செய்தால், அதற்கு கண்ணு, காது, மூக்கு வைத்து  பரபரப்பாக்கி விடுகிறார்கள். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார், ஸ்ருதிஹாசன்.

இன்னொரு ஹீரோயின் ஹன்சிகா, ‘வேலாயுதம்’ படத்துக்குப் பிறகு விஜய் ஜோடியாக நடிப்பதை தீபாவளி மாதிரி கொண்டாடிக் கொண்டிருக்க, திடீரென்று ஸ்ருதிஹாசன் ட்விட்டரில், ‘முன்னணி நடிகரின் படத்தில் இருந்து நான் விலகி விடுவேன் என்று நினைக்கிறேன்’ என்று பதிவு செய்தார்.

அவ்வளவுதான், ‘விஜய் படத்துக்கு ஸ்ருதிஹாசன் கால்ஷீட் கொடுக்க மறுப்பு’ என்று கோலிவுட்டில் வதந்‘தீ’ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. ‘ஏன்டா இது வம்பில் முடியப்போகிறது’ என்று பயந்த ஸ்ருதிஹாசன், அவசர அவசரமாக அடுத்த ட்வீட் செய்தார், ‘இல்லையில்லை, நான் விஜய் படத்தில் நடிப்பது உறுதி’ என்று. அதற்குப் பிறகுதான், ‘அப்பாடா’ என்று அகம் மகிழ்ந்திருக்கிறார்கள், அவரது ரசிகர்கள்.

‘நான் மாயவரம் பொண்ணு, மயக்குகிற கண்ணு’ என்று, தன்னைப் பாராட்டி தானே கவிதை எழுதிக்கொள்கிறார், பிரியா ஆனந்த். நடிக்கும் படங்களில் சொந்தக் குரலில் பேசி அசத்தும் அவருக்கு ஒரு தீராத ஆசை. அதாவது, மலையாள தேசத்திலிருந்து தமிழுக்கு வந்து ‘கல்லா’ கட்டும் ரம்யா நம்பீசன், மம்தா மோகன்தாஸ், லட்சுமி மேனன் போன்றோரை சொந்தக் குரலில் பாட வைத்து அழகு பார்க்கும் கோலிவுட், தன்னை மட்டும் ஏன் மட்டம் தட்டி ஒதுக்குகிறது என்று மனம் குமுறுகிறார்.

‘நான் முறைப்படி வாய்ப்பாட்டு கத்துக்கிட்டேன். இனிமையான குரல் வளம் இருக்கு. என்னையும் சொந்தக் குரலில் ஒரு பாட்டு பாட வையுங்க’ என்று, இமானின் கன்னம் பிடித்துக் கிள்ளி வாய்ப்பு கேட்டுள்ளார். அவரும், ‘ஆகட்டும்... பார்க்கலாம்’ என்று கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். விரைவில் பிரியா ஆனந்தை பாடகியாகவும் பார்க்கப் போகிறோம்.

-தேவா