துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் ராகுவும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 69

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

காவிய நாயகனான சுக்கிரனோடு, திடீர் யோக கிரகமான ராகு இணையும் இந்த சேர்க்கை சிறப்பானது. இப்படி அமைந்தவர்கள், அதலபாதாளத்தில் இருந்தாலும், திடீரென சிகரம் தொடுவார்கள். யோக காலம் வந்து எங்கேயோ சென்று விடுவார்கள். ஆனால், ‘அல்ப ஸ்நேகிதம் பிராண சங்கடம்’ என்கிற பழமொழியை இவர்கள் தம் வாழ்வில் முக்கிய அறிவுரையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

லக்னாதிபதியோடு மாயாஜால கிரகமான ராகு சேரும்போது பிஞ்சிலே பழுத்தவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். நட்பு வட்டத்தை கவனமாக வைத்துக் கொள்ளவில்லையெனில் மிகுந்த அவதிப்படுவார்கள். வீண் ஆடம்பரச் செலவைச் செய்து கஷ்டப்படுவார்கள்.

இவர்கள் எதையுமே மிகைப்படுத்திப் பேசுவதால், சொல்வதில் ‘எது சரி? எது தவறு?’ என்கிற குழப்பம் வந்தபடியே இருக்கும். பிறர் சொல்லி புரிந்து கொள்வதைவிட பட்டுத் தெரிந்து தெளிபவர்களே இதில் அதிகம். சுக்கிரன் சிற்றின்பப் பிரியர் எனில், ராகு இன்னும் ஆழமாக அதில் ஈடுபடுத்துவார்.

எனவே, முதல் கோப்பை, முதல் அனுபவம், ஒருமுறைதான் என்றெல்லாம் சென்று மாட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. ராகு சக்தியற்ற கிரகத்தைக் கூட உசுப்பேற்றி ரணகளப்படுத்தும். நல்லதைவிட கெட்ட விஷயங்களிலேயே மனதை ஈடுபடச் செய்வார். துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் ராகுவும் ஒரே இடத்தில் இணைந்திருந்தால் கிடைக்கும் பொதுவான பலன்கள் இவை. இப்போது நாம் துலாம் லக்னத்தை ஒன்றாம் இடமாகக் கொண்டு, ஒவ்வொரு ராசிக்குள்ளும் இவ்விரு கிரகங்கள் நின்றால் என்ன பலன் என்று பார்ப்போமா?

லக்னாதிபதியான சுக்கிரன், துலாம் ராசியில் - அதாவது லக்னத்திலேயே நிழல் கிரகமான ராகுவோடு அமர்ந்திருந்தால் மெலிந்த தேகத்தோடு இருப்பார்கள். ஆனால், கூர்மையான கண்களைப் பெற்றிருப்பார்கள். இந்த அமைப்பில் பிறந்தோருக்கு முதுகுப் பக்கமாகவோ, வயிற்றிலோ ஒரு மச்சம் காணப்படும். முகத்தில் ஏதேனும் வடுக்கள் காணப்படும். கற்பனை வளம் மிகுதியாக இருக்கும். படுக்கை அறையையும், குளியல் அறையையும் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். எல்லோருடனும் சகஜமாகப் பழகுவார்கள்.

விருச்சிகமான இரண்டாம் இடத்தில் ராகுவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதும் சிறப்பே ஆகும். உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை சுமாராகப் படித்து விட்டு, பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். இந்த தன்னம்பிக்கையில் பன்னிரெண்டாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெறுவார்கள். நிறைய மொழிகளைக் கற்றுக் கொள்வார்கள். மர்ம உறுப்புகளில் ஏதேனும் நோய் வந்தால் உடனே கவனிக்க வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் பார்வைக் கோளாறு இருக்கும்.

நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுடைய நட்பெல்லாம் கிடைக்கும். பிறருக்கு உதவிகள் செய்வதில் மிகுந்த விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். மூன்றாம் இடமான தனுசு ராசியில் லக்னாதிபதியான சுக்கிரன், ராகுவோடு இணைகிறார். எனவே இவர்கள் சுகவாசியாக இருப்பார்கள். சுற்றிலுமுள்ளவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள். இவர்களின் இளைய சகோதரர் நன்கு செழிப்போடு இருப்பார். தற்போதைய ஸ்டைல் என்ன என்று பார்த்து அதற்குத் தகுந்தாற்போன்று தங்களை மாற்றிக் கொள்வார்கள். 

இவர்கள் அம்பாள் உபாசகர், குறி சொல்பவர்களாகவும் இருப்பார்கள். நல்ல ஆசிரியர்களை வழிகாட்டிகளாக வைத்துக் கொண்டு முன்னேறுவார்கள். சில சமயம் வைராக்கியம் குறைவதால் சிற்றின்ப விஷயங்களில் எல்லை கடந்து போவார்கள். எச்சரிக்கை தேவை. நான்காம் இடமான மகர ராசியில் இந்த இரு கிரகங்களும் அமர்ந்தால் தாயாருக்கு அவ்வப்போது ஏதேனும் உடல்நிலையில் பிரச்னை இருந்து கொண்டேயிருக்கும்.

எது நடக்குமோ அதைப் பற்றி மட்டுமே கனவு காணுவார்கள். வீணாகக் கற்பனையை வளர்த்துக்கொள்ள மாட்டார்கள். அடிக்கடி ‘பிராக்டிகலா யோசிங்க’ என்று சொல்லியபடி இருப்பார்கள். புதுப்புது வண்டிகளாக வாங்கி வைத்துக்கொள்வார்கள். இவர்கள் மத்திம வயது வரையிலும் அன்னிய தேசத்தில் இருப்பார்கள். சிறிய வயதில் சூழ்ச்சிக்கார உறவினர்களால் பாதிக்கப்பட்டு, பின்னர் மீள்வார்கள். ‘உங்களைப் புரிஞ்சிக்கவே முடியலை’ என்று இவர்களைப் பற்றிக் கூறுவார்கள்.

‘களவும் கற்று மற’ என்கிற பழமொழிக்கேற்ப எல்லாவற்றையும் தெரிந்து கொள்வார்கள். சிறியதாக ஒரு கள்ளத்தனம் இருந்து கொண்டே இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை மறைத்துப் பேசி, திரைமறைவு வேலையில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள். ஐந்தாமிடமான கும்ப ராசியில் சுக்கிரனும் ராகுவும் அமர்ந்திருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்தில் பத்து பேர் இருந்தால் அதில் இவர் மட்டும் தனித்துத் தெரிவார். இதனால், எல்லோரின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். ‘நான் பொல்லாதவன்தான்’ என்கிற மறைமுக அறிவிப்பு இவர்களிடம் இருக்கும். நிச்சயமாக பூர்வீகச் சொத்தை அனுபவிப்பார்கள். அதி நுட்பமான நினைவாற்றல் இருக்கும். யோகாப்பியாசம் செய்து உடம்பை வலுவாக வைத்துக் கொள்வார்கள். மூதாதையர்களைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டுமென ஆசைப்படுவார்கள்.

நிறைய கோயில்களுக்குச் சென்று கல்வெட்டுக் குறிப்புகளை சேகரிப்பார்கள். புராணங்களை மீள் ஆய்வு செய்து ஆராய்ச்சி செய்வார்கள். இவர்கள் வீடு, மனை, நிலம் வாங்கும்போது மிகவும் கவனமாக தாய்ப்பத்திரம் சரியாக உள்ளதா என்று பார்த்துத்தான் வாங்க வேண்டும். மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். ராகு ஆறாம் இடமாகச் சென்று சுக்கிரனோடு சேரும்போது யோக வாழ்வை அளிக்கிறார். ஏனெனில், ராகு ஆறில் இருப்பது மிகவும் நல்லதேயாகும். எதிரிகளை எதிர்கொண்டு ஜெயிப்பார்கள்.

இங்கு சுக்கிரன் இருப்பதால் மன நிம்மதியோடு இருக்கவே முயற்சிப்பார்கள். மத்திம வயதில் கொஞ்சம் மாறுபட்ட நட்பு கிடைக்கும். இதனால் நிழல் வாழ்க்கையையும் வாழ்வார்கள். இவர்கள் கடன் மேல் கடன் வாங்கி கடனை அடைக்கக் கூடாது. பெரியளவில் சிக்கிக் கொள்வார்கள். மேஷ ராசியான ஏழாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால், திருமணத்திக்குப் பார்க்கும்போது வாழ்க்கைத்துணையின் குடும்பம் எப்படி இருக்கிறது என்று துருவித் துருவி ஆராயாமல், வாழ்க்கைத்துணை நன்றாக இருந்தால் போதுமென்று இருந்துவிட வேண்டும்.

பெரும்பாலும் காதல் திருமணத்திற்கே வாய்ப்பு உண்டு. இவர்களைவிட அதிகம் படித்த வாழ்க்கைத்துணை அமைவார். களத்திரகாரகனாகிய சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் நிற்பதால் நன்கு பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். மனைவி வழிச் சொத்துக்களுக்கு வாய்ப்பிருக்கிறது. ரிஷப ராசியான எட்டாம் இடத்தில் சுக்கிரனும், ராகுவும் அமர்கிறார்கள். லக்னாதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று எட்டில் மறைகிறார்.

கூடவே ராகுவும் போய் இணைகிறார். இவர்கள் பிறக்கும்போது ஆறு விரலோடு இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகனத்தில் செல்லும்போது மிக நிச்சயமாக எச்சரிக்கை தேவை. சொந்த ஊரில் இவர்கள் இருந்தால் வளர்ச்சி தடைபடும். எப்போதும் பிரயாணப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் காசு தங்கவே தங்காது. அதனால் ‘சரியான ஓட்டைக் கை’ என்பார்கள். சிறிய வயதிலேயே பெரிய அடியாக வாங்குவதால் அதுபோல இனி நிகழக் கூடாது என்று ஜாக்கிரதை கொள்வார்கள்.

பிறந்த ஊரிலிருந்து தென்மேற்குப் பக்கமாக பார்த்து குடியேற வேண்டும். மிதுன ராசியான ஒன்பதாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் கூடியிருந்தால் பணப் புழக்கம் இருந்தபடி இருக்கும். பணத்தை அடுக்கி அடுக்கி வைத்துப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். எப்போதும் சேமித்தபடி இருப்பார்கள். ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் ஈடுபட்டு சம்பாதிப்பார்கள். இவர்கள் தவறான வழியில் சென்று பணம் சம்பாதிப்பதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் அருமையை வயதாக வயதாகத்தான் உணருவார்கள்.

இவர்களில் பலர் யோகா மாஸ்டர், டயட்டீஷியன் என வருவார்கள். அரசாங்கத்தால் ஏதேனும் தொந்தரவு இருந்தபடி இருக்கும். எனவே, அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி விடுதல் மிகவும் நல்லது. கடக ராசியான பத்தாம் இடத்தில் சுக்கிரனும், ராகுவும் இணைந்திருந்தால் சொந்தத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால், வெகுகாலமாக வேலையையும் விட முடியாமல் வேறு வேலைக்கும் முயற்சி செய்யாமல் ஒரு விசித்திரமான மனோநிலையில் இருப்பார்கள்.

கவிதை, இலக்கியம், நடனம், இசை, காஸ்மெடிக்ஸ், பீடா கடை, வாகனங்கள் டீலர்ஷிப், ஆர்ட் கேலரி என்று பலவித தொழில்களை மேற்கொள்வார்கள். கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்து வியாபாரத்தை நன்கு விரிவாக்கம் செய்வார்கள். அரசாங்கத் துறையான சி.பி.சி.ஐ.டி, காவல் துறையில் முக்கிய பொறுப்பில் அமர்வார்கள். அஸ்ட்ரோ பிஸிக்ஸ் மற்றும் ராக்கெட் சம்பந்தப்பட்ட துறையில் படிப்பது மட்டுமில்லாமல் உயர் பதவியிலும் அமர்வார்கள்.  

சிம்ம ராசியான பதினோராம் இடத்தில் சுக்கிரனும் ராகுவும் அமர்வதென்பது நல்லதேயாகும். இவர்களில் பெரும்பாலோர் ‘நமக்கு எதுக்கு இந்த வம்பு’ என்று எல்லாவற்றிலும் ஒதுங்கியபடிதான் இருப்பார்கள். ஒரே தொழிலை நம்பி இறங்காது, பல்வேறு துறையில் தடம் பதித்து சம்பாதிப்பார்கள். ஆனால், திடீரென்று பணவரவு வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஏஜென்சி, புரோக்கரேஜ் போன்ற தொழில்களில் கொடி கட்டிப் பறப்பார்கள். மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள்.

கன்னி ராசியான பன்னிரெண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்திருந்தால் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். ஆனால், சம்பாதிக்கத் தெரியாது. சுக்கிரன் இங்கு நீசமாகி மறைகிறான். எதிலுமே பதற்றப்படாமல் இருக்க மிக நிச்சயமாக கற்க வேண்டும். காது, மூக்கு, தொண்டைப் பகுதிகளில் அவ்வப்போது ஏதேனும் பிரச்னைகள் வந்து சரியாகும்.

அன்னிய தேசத்தில் உத்யோகத்தின் பொருட்டு இருந்துவிட்டு பின்னர் மத்திம வயதில் சொந்த ஊருக்கு வருவார்கள். ‘லௌகீகமா, ஆன்மிகமா’ என்று மனப் போராட்டத்தில் சிக்கிக் கொள்வார்கள். இவர் நல்லவரா? கெட்டவரா? என்று எதிராளிக்குப் புரியவே புரியாது. பொதுவாக ராகு, எந்த கிரகத்தோடு சேருகிறதோ அதனுடைய தன்மையை கிரகித்து பலன்களைக் கொடுக்கும்.

நட்பாக இருந்தால் நேர்மறைப் பலன்களையும், பகையாக இருந்தால் எதிர்மறைப் பலன்களையும் அளிக்கும். ராகுவும் சுக்கிரனும் கொஞ்சம் வித்தியாசமான பலன்களையே தரும் என்பதில் ஆச்சரியமில்லை. ராகு - சுக்கிரன் சேர்ந்த அமைப்பானது நன்மையையே தரும் என்றும் சொல்ல முடியும். ஆனால், ராகு என்ன இருந்தாலும் நாகம்தான். எனவே, கொடுத்தும் கெடுப்பார் ராகு. எதை எப்போது செய்வார் என்று சொல்லவே முடியாது.

எனவே நற்பலன்களைப் பெற, ராகு அம்சம் கொண்ட அல்லது நாகத்தை அணிந்த அம்மனை வழிபட வேண்டும். அப்படிப்பட்ட தலங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல... நிறைய உள்ளன. ஏனெனில், நாகமும் சக்தி வழிபாடான அம்மன் வழிபாடும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகும். எனவே, சென்னை, திருவேற்காடு தலத்தில் அருளும் தேவி கருமாரியம்மன், விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி மாரியம்மன், திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன், நெல்லை மாவட்டம் குரங்கணி அம்மன், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி என்று பல்வேறு தலங்களுக்குச் சென்று வாருங்கள். 

மாரி என்றாலே மழை என்று பொருளுண்டு. மழைக்குரிய கிரகமே சுக்கிரன்தான். எனவே, சுக்கிரன் விஷயமாக எந்த பிரச்னை வந்தாலும் மாரி என்கிற அம்மனை வழிபடலாம். இங்கு ராகுவும் சேர்ந்துள்ளதால் புற்றுள்ள, நாகத்தோடு தொடர்புடைய மாரியம்மனை வணங்கும்போது முற்றிலுமாக எதிர்மறைப் பலன்கள் தவிர்க்கப்பட்டு, அந்த எதிர்மறை கதிர்வீச்சின் வேகம் குறைகிறது. மாரியம்மனை வணங்குங்கள். மகத்தான திருப்பம் வரும், பாருங்கள்.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்