ஃபர்ஸ்ட் ஹீரோ... நெக்ஸ்ட் ஆல்பம்!



ஆதி அதிரடி

சார் இப்போ ஹீரோ. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி அடுத்து எடுத்திருக்கும் அவதாரத்தில் படு பிஸி. ‘மீசைய முறுக்கு’ முதல் முயற்சி. சோஷியல் மீடியாவில் ஹிப் ஹாப்பிற்கு அதிரிபுதிரி வெற்றிதான். ஒரு பக்கம் மியூசிக், இன்னொரு பக்கம் நடிப்பு என ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரை சவாரி. ‘‘கனவுகள்தான் வாழ்க்கையை அழகாக்கும்.

கனவுகள் நிறைவேறுகிற வேளை நம்மையே அழகாக்கும். மியூசிக் ஆல்பம் பண்ணும்போதே நிறைய பேர் என்னை ஹீரோவா நடிக்கச் சொல்லிக் கேட்டார்கள். அப்ப இந்த அளவுக்கு பக்குவமில்லை. எல்லாமே கூடி வரணும்னு நினைச்சேன். இப்ப அதுக்கான நேரம் வந்திருக்கு. அதுதான் கம்பீரமா மீசையை முறுக்கியிருக்கேன்...’’ - சந்தோஷமாகப் பேசுகிறார் ஆதி.

‘‘பாரதியாரின் படம், அவரது வரிகள். மெசேஜ் சொல்ல கிளம்பிட்டீங்களா ப்ரோ?’’
‘‘அப்படியெல்லாம் இல்ல. காலேஜ் லவ் ஸ்டோரி இது. தனியா மியூசிக் பண்ண ஆரம்பிச்ச கஷ்டத்தை ஜாலியா சொல்லியிருக்கேன். அது எல்லாருக்கும் போகும். சமூக வலைத்தள இளைஞர்களை நிறைய அறிமுகப்படுத்தியிருக்கேன். நீங்க அவங்களைப் பார்க்கும்போது புதுமுகமா தெரியாது. அவங்ககிட்ட ஒரு சரளம் இருக்கும். வாழ்க்கையில எப்பவும் வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது.

டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவிடம் ஒரு தடவை, ‘உங்க சிறந்த வெற்றி எது’னு கேட்டாங்க. அப்ப அவர், தான் சிறப்பா ஆடித் தோற்ற ஒரு மேட்ச் பத்தி சொன்னார். அதுமாதிரிதான், ‘தோற்றாலும் ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு’னு பாசிட்டிவ்வா சொல்லியிருக்கேன். ஏன்னா நம்ம இளைஞர்களுக்கு அதுதான் தேவை.’’

‘‘டைரக்‌ஷன்ல அனுபவம் இல்லாம இறங்கியிருக்கீங்களே..?’’
‘‘நாங்க நிறைய வீடியோக்கள் செய்த அனுபவம் இருக்கு. எங்க ஆல்பத்தில் ‘வாடி புள்ள வாடி’யெல்லாம் இன்னிக்கு வரை செம ஹிட். அப்பவே, ‘நீங்க திரைப்படக் கல்லூரி மாணவரா’ன்னு கேட்டிருக்காங்க. நான் ஒரு எஞ்சினியரிங் ஸ்டூடன்ட்னு சொல்லிச் சொல்லி களைச்சுப் போயிருக்கேன். இப்ப பரவலா அறியப்பட்ட ‘ஜல்லிக்கட்டு’ வீடியோ கூட நான் டைரக்ட் பண்ணினதுதான்.

குறும்படங்கள் செஞ்சுட்டு பெரிய திரைக்கு வந்த இயக்குநர்கள் இல்லையா? அந்த மாதிரிதான். இதுல கிடைச்ச அனுபவமே நிறைய. என்னால முடியும்னு நம்புனேன். படத்தைப் பார்த்துட்டு சுந்தர்.சி ‘நல்லா இருக்கு’ன்னு பாராட்டினார். அவர் மாதிரியான பெரிய அனுபவம் வாய்ந்த இயக்குநரே இப்படிச் சொன்னபோதுதான் எனக்கு மூச்சு வந்தது. விவேக்கின் சமூக அக்கறை எனக்குப் பிடிக்கும். அதை அவர் காமெடியில சொல்லுவார். படத்தில் அவர் எனக்கு அப்பாவா வர்றார். கிட்டத்தட்ட அவர்தான் படத்தோட ஹீரோ.’’

‘‘என்ன சொல்றார் சுந்தர்.சி?’’
‘‘ ‘ஆம்பள’ படத்துக்காக என்கிட்ட ‘ஒரே ஒரு பாட்டு போட்டுக் கொடு’னு கேட்டார். நான் கொடுத்தது ‘பழகிக்கலாம்...’ பாட்டு. ‘யப்பா ரொம்ப புதுசா இருக்குதுப்பா..’னு சொல்லிட்டு மொத்த படத்தையும் என் கையில கொடுத்துட்டார். நான் அவரோட மியூசிக் டெஸ்ட்லேயும் பாஸ் பண்ணினேன். அடுத்து ஜல்லிக்கட்டு வீடியோவைக் கொண்டு போய் காட்டினேன்.

‘யோவ், என்னய்யா... எல்லா பக்கமும் சிக்ஸர் அடிக்கிறீயே’னு தட்டிக்கொடுத்தார். திடீர்னு ‘ஆம்பள’ பட இசை விழாவில் ‘ஆதியை வைத்து ஹீரோவா படம் தயாரிப்பேன்’னு சொல்லிட்டார். சொன்னதை செஞ்சார். நானே இயக்கும்போது, சொல்ல வந்த கருத்துகளை, மண் சார்ந்த உணர்வுகளைச் சொல்ல முடியும்னு நினைச்சேன். அதுக்கும் சம்மதிச்ச தங்கமான மனசு அவருடையது. இப்ப பாருங்க... 40 நாள்ல மொத்த படத்தையும் முடிச்சு அவர் கையில கொடுத்துட்டேன்.’’

‘‘சேட்ஜி பாடலில் என்ன சர்ச்சை..?’’
‘‘சேட்ஜினா இந்தியில ‘ஐயா’னு அர்த்தம். அப்படி நினைச்சுதான் அதை உருவாக்கினோம். திடீர்னு அந்த சமூக மக்கள் அந்த வரிகளுக்காக கோபப்பட்டாங்க. பிரச்னையை வளர்க்காம மன்னிப்பு கேட்டுட்டு அந்த வரியைத் தூக்கிட்டேன். அவ்வளவுதான். இப்ப எதுவும் பிரச்னை இல்ல.’’

‘‘ஜல்லிக்கட்டு ஆல்பம் மாதிரி அடுத்து என்ன?’’
‘‘அந்த வீடியோ இளைஞர்களுக்கு ரொம்ப பிடிச்சது. அதற்கடுத்து காவிரி நதிநீர் பிரச்னை என் மனசுல இருக்கு. ஆனா, அதனுடைய உள்ளும் புறமான அரசியல் எனக்குத் தெரியல. தகவல்களை முழுக்க சேகரிக்கறேன். அப்புறம்தான் இறங்குவேன். அதுவரைக்கும் சினிமாதான்.’’

‘‘அப்போ மியூசிக் ஆல்பம் எல்லாம் அவ்வளவுதானா?’’
‘‘தமிழ்நாட்டுல மியூசிக் ஆல்பம் என்பது ‘கிணத்துல போட்ட கல்’ மாதிரிதான். அதுலேயே சாதிக்க நினைச்சேன். ஆனா இப்ப சூழல் அதுக்கானதா இல்ல. பிடிவாதமா இருந்ததுல, சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைக்கும் போயிட்டேன். ஒண்ணு புரிஞ்சது. கூட்டத்துல இருந்து எதையும் சொன்னா யாருக்கும் கேட்காது. பத்தோட பதினொண்ணா போகும். நாமளே ஒரு உயரத்துக்குப் போனா நாம விருப்பப்பட்டதை செய்யலாம். கொஞ்சம் பணம் பார்க்க சினிமாவுக்கு வந்தேன். ஆசைப்பட்ட தனி ஆல்பத்தை இன்னும் சிறப்பா பண்ணுவேன். ப்ளீஸ் வெயிட்!’’

- திலீபன் புகழ்