பரவுகிறதா நிபா வைரஸ்..?



இதுதான் இப்போது டாக் ஆஃப் த டவுன். காரணம், சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நிபா வைரஸ் தாக்கி இறந்துள்ளதுதான்.ஸோ, நிபா வைரஸ் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.கொரோனா அளவிற்கு நிபா வைரஸ் பரவக் கூடியது அல்ல என்றாலும், 10 சதவீதத்திற்கும் குறைவாக ஒரு நோயாளியிடமிருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்பு உள்ளதாம்.

கடந்த 20 ஆண்டுகளில் உலகெங்கும் 700 பேர் மட்டுமே நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் இதற்கு முன்பு கடந்த 2001 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மேற்கு வங்காளத்திலும், 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் கேரளாவிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.  வவ்வால்கள்தான் இவ்வகை வைரசின் பிறப்பிடம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில்1990ம் ஆண்டுகளில் நிபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் காற்று மூலம் பரவ வாய்ப்பு இல்லை. ஆனால் இவை வவ்வால் மூலமும், மிருகங்கள் வாயிலாகவும் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பறவைகள் கடித்துப்போட்ட பழங்களை உண்ண வேண்டாம் எனவும் சுகாதாரத் துறையினர் எச்சரித்து உள்ளனர்.

நோய் அறிகுறிகள்:

1. நிபா வைரஸ் முதலில் லேசான தலைவலியுடன் ஆரம்பமாகும்.

2. தலைவலி தொடர்ந்து நீடிக்கும்.

3. தொடர்ந்து வாந்தி வருவது போல இருக்கும்.

4. வாந்தியுடன் லேசான மயக்கமும் ஏற்படும்.

5. மயக்கத்தில் இருந்து மீள முடியாத நிலை ஏற்படும்.

6. நாள் முழுக்க உடல் சோர்வுடன் மயக்கமாகவே காணப்படும்.

7.தலைவலி தீவிரமாகி காய்ச்சலும் அதிகரிக்கும். 10 நாட்களுக்குப் பிறகு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

8. நோயின் தீவிரம் குறையாமல் தொடர்ந்தால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.

தவிர்க்க வேண்டியவை:

1. பறவைகள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக் கூடாது.

2. பறவைகள் கடித்துப் போட்ட பழங்களை ஒருபோதும் உண்ணக்கூடாது.

3. முகக் கவசம் அணிவது போல் கைகளுக்கும் கையுறை அணிய வேண்டும்.

4. நோய் பாதிப்பு உள்ள மிருகங்களுடன் பழகக் கூடாது.

5. மிருகங்களையோ அல்லது பறவைகளையோ தொட்டால் உடனே கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

6. மிருகங்கள், பறவைகளின் எச்சத்தை மிதித்தால் உடனே உடலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

7. வவ்வால் மூலமே இந்நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அவை இருக்கும் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

8. பன்றிகள் மூலமும் இந்நோய் பரவ வாய்ப்பு உள்ளதால் அவற்றிடமும் கவனமாக இருக்க வேண்டும்.

என்.ஆனந்தி