நட்பு to காதல் to கல்யாணம்! ஆதி & நிக்கி லவ் டாக்



‘‘எனக்கு நிக்கி கிட்ட புடிச்ச விஷயம் அவங்க  அழகு, தைரியம்...’’
‘‘ஆதி ரொம்ப நேர்மையான பெர்சன்...’’ இப்படித்தான் இருவருக்குள்ளும் அழகான புரிதல் இருந்தது; இருக்கிறது. நடிகர் ஆதிக்கும் டார்லிங் நிக்கி கல்ராணிக்கும். மே 18ம்  தேதி திருமணம் நடந்துமுடிந்த நிலையில் நம்மிடம் பேசினர்.

‘‘ஒரு ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி உண்டான சந்திப்பு அப்படியே நல்ல ஃபிரெண்ட்ஷிப்பா மாறுச்சு. நட்பு டூ காதல் டூ கல்யாணம்...’’ என்றவர்களிடம் ‘காதலை முதலில் யார் சொன்னது’ என்று கேட்டால் வெட்கப்படுகிறார்கள்! ‘‘உண்மையைச் சொன்னால் எங்களுக்குள்ள இப்ப வரைக்கும் ‘ஐ லவ் யூ’னு பரஸ்பரம் சொல்லி புரபோஸ் செய்துகொண்டதே இல்ல. ரொம்ப அழகா சிம்பிளா பேச ஆரம்பிச்சோம்.
நட்பாச்சு. எங்களுக்குள்ள ஒரு மிகப்பெரிய புரிதல் இருக்குன்னு உணர்ந்தோம். அது அப்படியே காதல் ஆகிடுச்சு. இப்ப வரைக்கும் எப்ப சொல்லிக்கிட்டோம்... எந்த நாள்ல நடந்துச்சு... இப்படி எதுவுமே எங்களுக்குத் தெரியாது. பூ மலர்கிறது இல்லையா... எந்த நொடில அது மலர்ந்ததுனு தெரியாது இல்லையா... அப்படித்தான்...’’ என்ற ஆதியை இடைமறித்து நிக்கி தொடர்ந்தார்.

‘‘எங்களுக்குள்ள எல்லாத்தையும் மீறின ஒரு ரியலிஸ்டிக் இருக்கறத உணர்ந்தோம். அப்படித்தான் எங்க ரெண்டு பேருக்குள்ளும் இந்த பந்தம் உருவாச்சு...’’ சொல்லும்போதே நிக்கியின் கன்னங்கள் சிவக்கின்றன.  ‘‘ஆக்ச்சுவலி என்னவிட நிக்கியதான் எங்க வீட்ல எல்லோரும் ரொம்ப விரும்பறாங்க. ரொம்ப பாசமா நடத்துறாங்க. அவங்க மேல என் ஃபேமிலி மெம்பர்ஸ் காட்டுற அன்புதான் அவங்க மேல எனக்கு அதிக லவ்வை ஏற்படுத்திச்சுனு சொல்லலாம்...’’ புன்னகைக்கும் ஆதி, திருமணம் குறித்தும் உற்சாகத்துடன் பேசுகிறார்.  

‘‘எப்படி எங்க காதல் ரொம்ப சிம்பிளா ரியலிஸ்டிக்கா இருக்கோ அதேமாதிரி கல்யாணமும் சிம்பிளாதான் நடந்தது. என் அப்பா, அம்மா; நிக்கியின் அப்பா, அம்மா... கூடவே நெருங்கிய சொந்தக்காரர்கள், ஃபிரண்ட்ஸ்... குறிப்பா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செய்த டைரக்டர்ஸ், நடிகர்கள்... இவங்க மத்தில ரொம்பவே சிம்பிளா கல்யாணம் செய்துகிட்டோம்.
இந்தக் கல்யாணத்தால எங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் மாறிடக் கூடாதுனு நாங்க ரெண்டு பேருமே கவனமா இருக்கோம்.

என்னுடைய வேலையிலோ அல்லது நிக்கி வேலையிலோ, எங்க பழக்க வழக்கங்கள்லயோ எதிலேயும் இந்த கல்யாணம் எந்த மாற்றத்தையும் உருவாக்காது. நாங்க நாங்களாதான் இருப்போம். அதைத்தான் நாங்க ரெண்டு பேரும் விரும்பறோம்...’’ என்ற ஆதியைத் தொடர்ந்தார் நிக்கி.‘‘கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி... கல்யாணத்துக்கு அப்பறமும் சரி... பெண்கள் முன்பு எப்படி இருந்தார்களோ அப்படித்தான் பிறகும் இருக்கணும். அதுதான் உறவை பலப்படுத்தும்.நாங்க எங்க காதல எந்த வகையிலும் திட்டமிடலை... எங்க வாழ்க்கையும் அப்படித்தான். அதனாலயே நாங்க மகிழ்ச்சியா இருக்கோம்...’’ கண்சிமிட்டிய நிக்கியை அணைத்துக் கொள்கிறார் ஆதி.நல்லா இருங்க.                 

ஷாலினி நியூட்டன்