2வது இடத்தில் இந்தியா!



கடந்த இருபது வருடங்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு சொல்கிறது. பொருளாதார முன்னேற்றத்துக்காக அதிகரித்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, நான்கு மடங்காக உயர்ந்த வாகனங்கள், ராக்கெட்டுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் போன்றவற்றால் காற்று மாசுபாடு அதிகரிப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது. 2013ம் வருடத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி உலகளாவிய காற்று மாசுபாட்டில் 44 சதவீதம் இந்தியாவிலிருந்து உற்பத்தியாவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

தவிர, சுத்தமான காற்று இல்லாத பகுதிகளில் 63 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்றனர். இந்தக் காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 7.5 வருடங்கள் குறையும் என்று அதிர்ச்சியளிக்கிறது இன்னொரு ஆய்வு. புகைபிடித்தல் சராசரி ஆயுட்காலத்தில் 2.5 ஆண்டுகளைத்தான் குறைக்கிறது என்பது இன்னொரு அதிர்ச்சி. 1998ல் இருந்த காற்று மாசுபாட்டின் அளவுடன் ஒப்பிடும்போது இப்போது 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் உலகிலேயே அதிகமான காற்று மாசுபாடு உள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

த.சக்திவேல்