கவிதைகாரார்கள் வீதி





நம்பிக்கை

தேர்ந்தெடுப்பதிலும்
தேர்ந்தெடுக்கப்படுவதிலும்
சற்றேனும் எனக்கு
துர்நம்பிக்கை கிடையாது
ஏனெனில் நான்
ஜனநாயகவாதியும் அல்ல
சர்வாதிகாரியும் அல்ல..!
- வீ.சிவசங்கர்,
கள்ளக்குறிச்சி.


கண்காட்சி...

எல்லோரும்
சிற்பங்களைப்
பார்வையிட்டார்கள்...
சிற்பம்
உன்னைப் பார்வையிட்டது!
- த.ரெ.தமிழ்மணி,
திருவாரூர்

தேர்!

சக்கரங்கள் ஏதுமின்றி
எல்லா நாளும்
சுற்றிக் கொண்டிருக்கிறது
கால ஓட்டத்தில்
வாழ்க்கையும் தேராக...
தேரில் தெய்வங்கள்
சுற்றி வந்தால் நகர்வலம்;
சொந்தங்கள் தேம்பியழ
போனால் இறுதி ஊர்வலம்!
- ஜெ.புதுயுகம், பண்ணந்தூர்.

காதல் பூ!

பாதையில் இறந்துகிடக்கும்
பட்டாம்பூச்சியை
பார்க்க நேர்கையில்
கேள்வி கேட்கும் மனசு...
‘எந்தப்பூ இன்று
உடன்கட்டை ஏறியிருக்கும்?’
- அ.ஸ்ரீதர்பாரதி,
மதுரை.



உடையாதது...

கல்லெடுத்து
எத்தனை முறை
எறிந்தாலும்,
நொறுங்கி
சிதறிப் போகாமல்
இருக்கிறது
நீர்க் கண்ணாடி!
- துங்கை செல்வா,
பெரம்பலூர்.


யாருமற்று...

ஆளில்லா மரத்தடியில்
பழம் உலுக்கிப் போடும்
காற்று!
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.