லண்டனில் இளையராஜா...





தமிழ் இசை ரசிகர்களின் மனங்களில் பொன் வசந்தம் பூக்க வைக்க லண்டனுக்குச் சென்றிருக்கிறார் இசைஞானி இளையராஜா. புத்தம்புது இசை வேண்டி கடல் கடந்து அவரை அழைத்துச் சென்றிருக்கும் பெருமை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனைத்தான் சேரும். இசைஞானியும், கௌதம் மேனனும் கைகோர்க்கிறார்கள் என்ற செய்தியே தமிழ் இசை ரசிகர்களின் காதுகளை வருடிப் போனது நிஜம். இனி இளையராஜாவின் இசை இதயத்தை நிரப்பும். ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட்டுடன் தன் போட்டோன் கதாஸும் தயாரிக்க, தான் இயக்கும் 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் டைட்டிலிலேயே இளையராஜாவின் பெருமையைச் சொல்லியிருக்கும் கௌதம் மேனன், இசைஞானியுடன் பணியாற்றுவதைத் தன் கனவாகச் சொல்லியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் படம் தயாராவதால், அதற்கான மூன்று முன்னணி ஹீரோக்கள் ஜீவா, நானி, ஆதித்ய கபூருடன் படப்பிடிப்பு வேலைகளை முதலில் முடித்துவிட்டு, கடைசியாக இசையின் பக்கம் வந்திருக்கிறார்.


இந்தப் படத்தில் முதல்முறையாக இசைஞானியிடமிருந்து பாடல்களைப் பெறவிருப்பதால், இதுவரை அவரது இசையில் கேட்காத புது ஒலிகளின் கோர்ப்புக்காக லண்டன் செல்லலாம் என்கிற மேனனின் திட்டத்துக்கு இசைஞானியும் மகிழ்ச்சியுடன் செவி சாய்த்திருக்கிறார்.



தனது வழக்கப்படியே பாடல்களின் கம்போஸிங்கை சென்னையில் வைத்து துரித கதியில் முடித்த இளையராஜா, பாடல்களின் குரல்களுக்கான பதிவை மும்பையில் முடித்துவிட்டு, இசைக் கோர்வைக்காக லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.


இதுவரை வேட்டி ஜிப்பாவிலேயே பார்த்திருக்கும் நமக்கு லண்டன் ஏஞ்சல் ஸ்டுடியோவில் கோட் சூட் போட்டு நிற்கும் இளையராஜா வித்தியாசமாகத் தோற்றமளிக்க, அப்படியே வித்தியாச இசைக்கு லண்டன் இசைக் கலைஞர்களுடன் அவரது விருப்ப இசைக்குழுவான ஹங்கேரி இசைக்குழுவினரையும் வரவழைத்திருக்கிறார் அவர். அத்துடன் அமெரிக்காவிலிருந்து ஸ்பெஷலாக உலகப் புகழ்பெற்ற டிரம்மரான ‘ஃபெர்னெக் நாமத்’தையும் வரவழைத்திருக்கிறார். ‘‘கிரேட் இளையராஜாவுக்காக நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன்...’’ என்று ‘ட்வீட்’ செய்து தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஃபெர்னெக். 20 நாட்களில் எட்டு பாடல்களுடன் திரும்பத் திட்டமிடப்பட்டிருக்கும் மேனன் அவற்றைப் படமாக்கக் கிளம்புகிறார். கௌதம் வாசுதேவ் மேனனின் கனவு நனவானதில் பலன் என்னவோ தமிழ் இசை ரசிகர்களுக்குத் தான்..!
 வேணுஜி