‘தமிழகத்தில் 1 கோடியே 85 லட்சம் குடும்பங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 43 லட்சம் குடும்பங்கள் அதிகரித்துள்ளன. கூட்டுக்குடும்ப முறை பெருமளவு சிதைந்து விட்டது. 75 சதவீதம் பேர் தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள். 10 சதவீதம் வீடுகளில் மட்டும் 2 குடும்பங்கள் வசிக்கின்றன, 1 சதவீத வீடுகளில் மட்டும் கூட்டுக்குடும்பம் இருக்கிறது. தமிழகத்தில் 80 சதவீத குடும்பத்தினர் குழாய்நீரை குடிநீராகப் பயன்படுத்துகிறார்கள். 35 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டு வளாகத்துக்கு உள்ளேயே குடிநீர் கிடைக்கிறது. 7 சதவீதம் பேர் குடிநீருக்காக தொலைதூரம் அலைகிறார்கள்...’ 2010ல் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் வெளிவந்திருக்கும் தகவல்கள்தான் இவை. இப்படியான சில ஹைலைட்ஸ்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை இயக்குனர் எஸ்.கோபால
கிருஷ்ணன்.
* 35க்கும் மேற்பட்ட கேள்விகளை உள்ளடக்கி, 45 நாட்கள் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடந்தது. இந்தியா முழுவதும் 25 லட்சம் பேர் இதில் ஈடுபட்டார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேர். கிராமங்கள், குடிசைப்பகுதிகளில் கணக்கெடுப்புக்கு பெரும் வரவேற்பு இருந்தது. நகர்ப்புறங்களில், குறிப்பாக ஃப்ளாட்களில் வரவேற்பு குறைவு.
* இந்தக் கணக்கெடுப்புப் பணிக்கான மொத்த செலவு 2000 கோடி.
* 46 சதவீதக் குடும்பத்தினர் இன்றைக்கும் திறந்தவெளியையே கழிப்பிடமாகப் பயன்படுத்துகிறார்கள். 6 சதவீதக் குடும்பங்கள் பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துகின்றன. 48 சதவீத வீடுகளில் வீட்டுக்குள்ளேயே கழிப்பிட வசதி இருக்கிறது. 64 சதவீதக் குடும்பங்களில் வீட்டு வளாகத்திலேயே குளிக்கும் வசதி இருக்கிறது. கழிப்பிட வசதியில் மிகவும் பின்தங்கியிருப்பது அரியலூர் மாவட்டம்.
* 50 சதவீத வீடுகளில் கழிவுநீர் வெளியேற்றும் இணைப்புக் கால்வாய்கள் உள்ளன. 25 சதவீத வீடுகளுக்கு திறந்தவெளி கழிவுநீர் இணைப்பே இருக்கிறது.
* தமிழகத்தில் 44 சதவீதக் குடும்பத்தினர் இன்னும்கூட விறகு அடுப்பையே உபயோகிக்கிறார்கள். 7 சதவீதக் குடும்பத்தினர் மண்ணெண்ணெய் அடுப்பு வைத்துள்ளார்கள். 48 சதவீதம் பேர் சமையல் எரிவாயு பயன்படுத்துகிறார்கள்.
* 6 சதவீத தமிழர்கள் இன்னும் மண்ணெண்ணெய் விளக்கில்தான் காலம் கழிக்கிறார்கள். 93 சதவீத வீடுகளில் மின்சார வசதி இருக்கிறது.
* 87 சதவீத வீடுகளில் டிவி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் டிவி உபயோகம் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. 23 சதவீதம் பேர் மட்டுமே ரேடியோ கேட்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 17 சதவீத ரேடியோ பயன்பாடு குறைந்து விட்டது. 11 லட்சம் குடும்பங்களில் கம்ப்யூட்டர் இருக்கிறது. 4 லட்சம் குடும்பத்தினர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளார்கள்.
* 75 சதவீதக் குடும்பங்கள் தொலைபேசி அல்லது மொபைல் பயன்படுத்துகின்றன. தமிழக மக்களில் 84 சதவீதம் பேர் மொபைல் வைத்துள்ளார்கள். மொபைல் பயன்பாட்டில் சென்னைக்கே முதலிடம். 92 சதவீதம் பேர் மொபைல் பயன்படுத்துகிறார்கள். பின்தங்கியிருப்பது தேனி மாவட்டம். அங்கு 40 சதவீதத்தினரிடம் மொபைல் இல்லை.
* தமிழகத்தில் 45 சதவீத குடும்பத்தினர் சைக்கிள் வைத்துள்ளார்கள். 32 சதவீதக் குடும்பங்களில் டூவீலர் உள்ளது. 4 சதவீதம் பேர் நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளார்கள்.
* 53 சதவீதக் குடும்பத்தினர் வங்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். கிராமங்களில் 55 சதவீதம் பேர் வங்கிகளைப் பயன்படுத்துவதில்லை. நகரங்களில் 40 சதவீதம் பேருக்கு வங்கிகளில் கணக்கு இல்லை.
* டிவி, ரேடியோ, வீடு, மொபைல், வாகனம் உள்பட எந்த வசதியுமே இல்லாமல் 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் தமிழகத்தில் வசிக்கிறார்கள்.
* தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான பணிகளை முழுமையாக மக்கள் கணக்கெடுப்புத் துறையே மேற்கொள்ள உள்ளது. 9 மாவட்டங்களில் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 20 லட்சம் பேரின் விபரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் கார்டு வழங்கும் பணி விரைவில் தொடங்கும்.
வெ.நீலகண்டன்
படம்: புதூர் சரவணன்