கடைசி ஆசை

குருமூர்த்தி படுத்த படுக்கையாகி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ‘இன்னும் பத்து, பதினைந்து நாட்களுக்கு மேல் தாங்காது’ என்று டாக்டர்கள் கெடு வைத்துவிட்டார்கள். கிழவர் வீட்டிற்கு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. டாக்டர்கள் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. அரை மயக்க நிலையிலேயே ஏதேதோ பிதற்றிக்கொண்டிருந்தார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கிழவரைப் பார்க்க வந்த எதிர்வீட்டு பொன்னம்மா பாட்டி, ‘‘இது மாதிரி மரணப் படுக்கையிலே ரொம்ப நாள் இதோ அதோன்னு இழுத்திண்டிருந்தா, அவர் மனசிலே ஏதாவது நிறைவேறாத ஆசை இருக்குன்னு அர்த்தம். அது நிறைவேறும் வரையில் உயிர் பிரியாது’’ என்று சொல்லிவிட்டுப் போனாள். அன்று குருமூர்த்தியின் நண்பர் குப்புசாமி வந்திருந்தார். அவரிடம் எல்லா விவரங்களையும் சொன்னார்கள். பேச்சின் நடுவே குப்புசாமி பொடி டப்பாவிலிருந்து பொடி எடுத்து சர்ரென்று உறிஞ்சினார். காற்றில் சில துகள்கள் பறந்து குருமூர்த்தியின் முகத்தில் விழுந்தன. அடுத்த நிமிடமே அவர் உயிர் பிரிந்தது. ‘‘உடம்பு சரியாயில்லாததாலே அவர் இனிமே பொடி போடக்கூடாதுன்னு டாக்டர் தடை போட்டார் இல்லையா? அதனால, சாகறக்கு முன்னாடி ஒரு தடவையாவது பொடி வாசனையைப் பிடிக்கணும்னு தீவிர ஆசை அவருக்குள்ள இருந்திருக்கணும். தற்செயலாய் அது என்னால் நிறைவேறி விட்டது’’ என்று விளக்கினார் குப்புசாமி.
|