ஐரோப்பிய நாடுகளில் உலகப்பட விழாக்கள் மாதிரி நாட்டுப்புறக் கலை விழாக்கள் ஆங்காங்கே அடிக்கடி நிகழ்கின்றன. விழாவோடு மட்டும் நின்றுவிடாமல், நாட்டார் பாடல்கள் பற்றியும் அந்த இனக் குழுக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழி பற்றியும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் பிரான்சில் நடந்த விழாவில் ஆப்ரிக்க நாட்டுப்புறப் பாடல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பாடல்கள் இரண்டு விதமாகப் பார்க்கப்பட்டன. ஆங்கிலேயரின் ஆதிக்கம் ஆட்கொள்வதற்கு முன்னால், கறுப்பின மக்கள் தங்கள் காதலையும் இயற்கையையும் கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையும் பாடல்களில் வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆங்கிலேயர் ஆதிக்கம் வந்த பிறகு அந்தப் பாடல்கள் நிறம் மாறத் தொடங்கியிருந்தன. மரங்களும் பறவைகளும் நதிகளும் இசைத்த பாடல்களில் ரத்தம், கத்தி, துப்பாக்கி என்று வார்த்தைகள் விரியத் தொடங்கின. ‘மின்னல் உதிப்பதைப் போல வெள்ளைக்காரர்கள் வந்தார்கள்’ என்றும், ‘அவர்களின் துப்பாக்கிகளிலிருந்து நெருப்புடன் சீறிய தோட்டாக்கள் சூரியனிலிருந்து விழும் கற்கள் போல இருந்தன’ என்றும் வெள்ளைக்காரர்கள் மீதான அச்சத்தை இவர்கள் அடையாளப்படுத்தியிருந்தார்கள்.
இவற்றை ஆப்ரிக்க நாட்டுப்புறப் பாடல்களில்தான் என்றில்லை; நமது நாட்டுப்புறப் பாடல்களிலும் காணலாம். ஆனால் இங்கே அதைப் பற்றிய மானிடவியல் ஆய்வுகள் நிறைய நடக்கவில்லை. ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ என்று அவற்றைத் தொகுத்த பேராசிரியர் நா.வானமாமலை இதில் குறிப்பிடத்தக்க பெரும் பணியாற்றியிருக்கிறார். மற்றபடி, நாம் அந்த வாய்மொழி இலக்கியத்தை புத்தகங்களில் பதிவு செய்ததோடு விட்டுவிட்டோம். ஒரு மண்ணின் வரலாற்றையும் அம்மக்களின் பண் பாட்டையும் சமூகப் பழக்கவழக்கங்களையும் அறிந்துகொள்வதற்கு உயிருள்ள சாட்சியங்கள் நாட்டார் பாடல்கள்தான். வெளிநாடுகளை விட தமிழர்களுக்குத்தான் பாடல்கள் நிரம்பிய வாழ்க்கை இருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது தாலாட்டுப் பாட்டு, வளரும்போது விளையாட்டுப் பாட்டு, ஒரு பெண் பூப்பறிக்கும்போது பாட்டு, பூப்படையும்போது பாட்டு, காதலிக்கும்போது பாட்டு, வளைகாப்பின்போது பாட்டு, உழும்போது பாட்டு, விதைக்கும்போது பாட்டு, ஏற்றம் இறைக்கும்போது பாட்டு, களை பறிக்கும்போது பாட்டு, அறுவடையின்போது பாட்டு, நெல் குத்தும்போது பாட்டு, ஆடுமாடு மேய்க்கும்போது பாட்டு, வண்டி ஓட்டும்போது பாட்டு, படகு ஓட்டும்போது பாட்டு, மழை வேண்டி பாட்டு, சாமி கும்பிட பாட்டு, பேயோட்ட பாட்டு, ஒயில் பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டப் பாட்டு, கடைசியில் ஒப்பாரிப் பாட்டு. இன்று இந்தப் பாடல்கள் விளைந்த களங்களும் சூழ்நிலைகளும் மாறிவிட்டன; பாடல்களும் காணாமல் போய்விட்டன. நமது காதலையும் பண்பாட்டையும் வீரத்தையும் வரலாற்றையும் வாய்மொழியாகப் பரப்பிய நாட்டுப்புறப் பாடல்கள்தான் நம் வாழ்வை சந்தோஷமாக வைத்திருந்தன. களைப்பில்லாமல் உழைக்க வைத்தன. மன அழுத்தத்தைக் குறைத்தன.

இன்று நமது இலக்கியங்களாகப் போற்றப்படுபவை பெரும்பாலும் இப்படி வாய்மொழியாக வழிவழியாகச் சொல்லப்பட்டு பதிவு செய்யப்பட்டவைதான். கம்பன், இளங்கோ, பாரதி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் அனைவரும் நாட்டுப்புறப் பாடல்களின் அழகில் மயங்கியிருக்கிறார்கள். அதன் தாக்கத்தைத் தங்கள் படைப்புகளில் பதிந்திருக்கிறார்கள். இந்த நாட்டுப்புறப் பாடல்களின் நீட்சிதான் நமது சினிமா பாடல்களும். ஆகவே அவற்றையும் இலக்கியமாகத்தான் கொள்ள வேண்டும்.
‘காடு வௌஞ்சென்ன மச்சான்நமக்குகையுங் காலுந்தானே மிச்சம்’என்று பட்டுக்கோட்டையும்‘மணப்பாறை மாடுகட்டிமாயவரம் ஏரு பூட்டிவயக்காட்டை உழுதுபோடுசின்னக்கண்ணு’என்று மருதகாசியும்‘பொதிகை மலை உச்சியிலேபுறப்படும் தென்றல்ஆடைபூட்டிவைத்த மேனியிலும்தவழ்ந்திடும் தென்றல்’என்று கண்ணதாசனும்‘தொட்டால் பூமலரும்தொடாமல் நான் மலர்ந்தேன்சுட்டால் பொன் சிவக்கும்சுடாமல் கண் சிவந்தேன்’என்று வாலியும்‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன் அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்’
என்று புலமைப்பித்தனும்... இன்னும் பிறரும் திரையிசைப் பாடல்களில் நமது ஆண், பெண் வாசத்தை, குழந்தை வாசத்தை, பூ வாசத்தை, புல் வாசத்தை, வயல் வாசத்தை காற்றில் மிதக்கவிட்டு அந்தக் காலத்தையும் சூழலையும் மனிதர்களையும் நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த மண்ணோடும் மக்களோடும் குழைந்த அனுபவங்கள் இருந்தன.
இன்று காலம் அந்த வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. நமது உணவு, உடை, மொழி எல்லாமும் மாறியிருக்கின்றன. நமது நிலத்தை, நீரை, பண்பாட்டை, நாட்டுப்புறக் கலைகளை பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் நிறம் மாற்றி தரம் மாற்றி வைத்திருக்கிறது. மீடியாவின் தாக்கமும் தவிர்க்க முடியாததாகி விட்டது. மேலை நாடுகளின் உடை, உணவு, இசை அனைத்தும் குக்கிராமம் வரை உடனுக்குடன் இறக்குமதியாகின்றன. தொழில்நுட்பங்கள் அதன் உயரங்களுக்கு நம்மை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கின்றன. இன்றைய சினிமா பாடல்களை விமர்சிப்பவர்களுக்கு இதைத்தான் நான் முன்வைக்க விரும்புகிறேன்...
நமது மொழியை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை எடுத்துச் செல்பவைதான் பாடல்கள். இன்றைய நமது மாறிவிட்ட வாழ்நிலையையும் தமிங்கிலிஷ் மொழியையும் மனச் சிதைவையும்தான் இன்றைய சினிமா பாடல்கள் பிரதிபலிக்கின்றன. கிராமத்துக் கதைகள் இருக்கின்றன. ஆனால், பாடல்கள் நவீனமாக இருக்கின்றன. அவசரமான காலமும் வாழ்வும் தேடலைத் தொலைத்துவிட்டது. கலந்து பேச வேண்டிய கருத்துப் பரிமாற்றத்தைத் தவிர்த்துவிட்டது. எல்லாவற்றையும் ஒரு பொருளாகவும் பணமாகவும் பார்க்கிற வியாபார மனப்பான்மையை வளர்த்துவிட்டது. மெல்லிய மனித உணர்வுகள் உதாசீனப்படுத்தப்படுகின்றன. இலக்கியம் காலத்தின் கண்ணாடி; சினிமா பாடல்களும் இலக்கியத்தின் ஒரு பகுதிதானே. 1933ம் ஆண்டு நமது சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலம். ‘வள்ளித்திருமணம்’ என்று ஒரு படம் வெளிவந்தது. சி.எம்.துரை, டி.பி.ராஜலட்சுமி நடித்தது. தினைப்புனத்தில் பறவைகளை வள்ளி விரட்டுவது போல் ஒரு காட்சி. கவண்கல் வீசிப் பறவைகளை விரட்டிக் கொண்டே, ‘வெட்கங்கெட்ட வெள்ளைக் கொக்குகளா விரட்டி யடித்தாலும் வாரீகளா?’
என்று பாடுகிறாள். நமக்கு வெள்ளையன் மேலிருந்த கோபத்தை அந்தப் பாடல் எடுத்துச் சென்றது; அது அந்தக் காலம். இன்றைய கதாநாயகன் வெளிநாட்டில் வெள்ளைப் பெண்களின் கோரஸுக்கு நடுவில் டூயட் பாடுகிறான். நமக்கு வெள்ளைக்காரிகள் மேலிருக்கும் மோகத்தை இந்தப் பாடல் எடுத்துச் செல்கிறது; இது இந்தக் காலம். வெளிநாட்டுப் படங்களில் பாடல்கள் இருப்பதில்லை. அதைப் போல தமிழிலும் படமெடுக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அது முடியவே முடியாது. நமது சினிமா நமது பூர்வீகத்தை மறக்க முடியாது. அது தன் ஆழ்மனத்தின் ஞாபகங்களைத் துறக்க முடியாது. செத்த மனிதனைக் கூட ஆடிப் பாடித் தூக்கிக் கொண்டுபோய் அடக்கம் செய்கிற பழக்கம் நமக்கு மட்டும்தான் இருக்கிறது. இன்று செல்போன், கம்ப்யூட்டர், ஐபாட், தொலைக்காட்சி, வானொலி என்று எங்கெங்கும் பாடல்களோடு வாழ்கிற ஒரு சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. விமர்சனத்திற்குள்ளாகும் இந்த சினிமா பாடல்கள்தான் இன்றைய இலக்கியமா என்று கேட்கலாம். நான் என்ன சொல்ல முடியும்? இதுவும் மாறலாம். நமது மிஞ்சிய வயல்களும் மணல்வெளியாக மாறலாம். பசுக்கள் காணாமல் போய் ஒட்டகங்கள் வந்து நிற்கலாம். ‘கோமாதா எங்கள் குலமாதா’ என்று ஒட்டகத்தைப் பார்த்தும் பாடத்தோன்றலாம். நான் என்ன சொல்ல முடியும்?