நட்பில் சொதப்பாத சித்தார்த்...





தமிழ் சினிமாவில் காதல் கதைகளுக்கு இலக்கணம் வகுத்தவராகக் கருதப்படும் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரின் நினைவாக அவர் பெயரையே ஒரு படத்தின் டைட்டில் ஆக்கியிருக்கிறார்கள். தெலுங்கில் தில்ராஜு தயாரித்து பெரும் வெற்றியடைந்த ‘ஓ மை ஃபிரண்ட்’தான் இப்போது தமிழில் சதீஷ் பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ‘ஸ்ரீதர்’ என்றாகியிருக்கிறது. படத்தின் கதையும் காதல், நட்பு சம்பந்தப்பட்டதுதான். ‘காதலில் சொதப்புவது எப்படி’ பட வெற்றியின் மூலம் தமிழுக்குள் இன்னொரு ரவுண்டு வந்து கொண்டிருக்கும் ‘பாய்ஸ்’ சித்தார்த்துக்கு இன்னொரு வெற்றிக்கான சாத்தியத்தைத் தரவிருக்கிறது ‘ஸ்ரீதர்’.

அவருடனேயே படத்தில் வலம் வரும் ஸ்ருதி ஹாசன், சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியம். கதைப்படி சித்தார்த்தின் சிறு வயதுத் தோழியாக வருகிறாராம் ஸ்ருதி. கல்லூரிக் காலத்திலும் அந்த நட்பு அப்படியே தொடர, அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பங்களேகூட அவர்களைக் காதலர்களாகவே பார்க்க, தங்களின் நட்பை அவர்கள் எப்படி பவித்திரமாகப் பாதுகாக்கிறார்கள் என்பதுதான் கதையின் உயிர் நாடி ஆகியிருக்கிறது. படத்தை இயக்கியிருக்கும் வி.ஸ்ரீராம் இந்தப்படத்தில் அறிமுகமானவர் என்பது எப்படி ஒரு ஆச்சரியமோ, ஒரு அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க சித்தார்த் ஒப்புக்கொண்டதும் ஆச்சரியம்தான். அதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியது தயாரிப்பாளர் தில்ராஜு. ஸ்ரீராம் இந்த ஸ்கிரிப்ட்டை சொல்லி முடித்ததும், தில்ராஜுவே சித்தார்த்தின் பெயரை முன்மொழிந்து, அவருக்குக் கதை சொல்ல வைத்திருக்கிறார். கேட்டமாத்திரத்திலேயே நடிக்க ஒத்துக்கொண்ட சித்தார்த்திடம் இன்னொரு ஆச்சரியத்தையும் முன்வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம். ‘‘இந்தக் கதை கற்பனை அல்ல, என் வாழ்க்கையில் எனக்கும் என் தோழிக்கும் நடந்த உண்மைச் சம்பவம்...’’ என்று அவர் சொன்னதைக் கேட்டு வாயடைத்த சித்தார்த், உடனே படத்துக்கான தேதிகளைக் கொடுத்திருக்கிறார்.



சித்தார்த்தின் தோழியாக ஸ்ருதி நடிக்கும் படத்தில் இன்னொரு இளம் ஜோடியும் இருக்கிறது. நவ்தீப், ஹன்சிகாதான் அது. ஆனாலும் அவர்களும் படத்தில் ஜோடிகள் இல்லை. சித்தார்த்தின் காதலியாக ஹன்சிகாவும், ஸ்ருதியின் காதலனாக நவ்தீப்பும் நடிக்கிறார்கள். ஜோடிகள் இப்படி இடம் வலமாக இருக்க, ஹன்சிகாவுடன் இருக்கும் நேரங்களிலெல்லாம் ஸ்ருதியைப் பற்றியே சித்தார்த் பேசிக்கொண்டிருப்பதும், சித்தார்த்தைப் பற்றியே நவ்தீப்பிடம் ஸ்ருதி பேசிக்கொண்டிருப்பதும் காதலில் சந்தேகத்தையும் பிரிவையும் ஏற்படுத்த... சித்தார்த் என்ன முடிவெடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ். வழக்கமாக இப்படி மொழிமாறும் படங்களில் பெரும்பாலும் முதல் மொழியில் பாடிய அதே பாடகர்களை வைத்துப் பாடல்களை பதிவு செய்வார்கள். ஆனால் அதிலும் ஒரு புதுமுயற்சியாக ராகுல் ராஜின் இசையில் அமைந்த பாடல்களைத் தமிழுக்கு நன்கு அறிமுகமான ஆலப் ராஜு, ராகுல் நம்பியார், விஜய் யேசுதாஸ், சைந்தவி, ரீட்டாவை வைத்துப் பதிவு செய்திருக்கும் தயாரிப்பாளர் சதீஷ், ஒரு முக்கியமான பாடலைப் பாடித் தரச் சொல்லி சிம்புவிடம் கேட்க, தெலுங்கில் நன்கு அறியப்பட்ட படம் என்பதால் மறுக்காமல் பாடித் தந்திருக்கிறார் சிம்பு என்கிற எஸ்.டி.ஆர். இன்னொரு ஹைலைட்... ஊரே காதலர்களாக நம்ப, உண்மையில் நட்பைப் போற்றும் இந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் உலகமே சித்தார்த்துக்கும், ஸ்ருதிக்கும் காதல் என்று நம்பியது. காதலில் வழக்கமாக சொதப்பும் சித்தார்த், நட்பில் சொதப்பியிருக்க மாட்டார் என்று நம்பலாம்.
- வேணுஜி