ஏன் இறுக்கியது மரணமுடிச்சு




ஒழுக்கத்திற்கு ஒளிப்பிழம்பாய்
இருந்தவர்களெல்லாம்...
காதலெனும்
ஒளியின் பிழம்பால்,
புழுக்கத்தில் இறந்தனர்!

அவள் சென்ற இடமெல்லாம்
சென்று கூட,
பாதத்தைப் பற்றிப் பார்த்தேன்
பயனில்லை.
இரக்கமற்றவள்
என் முகத்தில்
மிதித்து மிதித்தே
தூக்கி எறிந்து விட்டாள்!



இப்படி மணிவண்ணனின் இணையப்பக்கத்தில் (vidhaigalmani.blogspot.in) துக்கமும் ஏக்கமுமாக ஏராளமான கவிதைகள் இறைந்து கிடக்கின்றன. குழந்தைத் தொழிலாளியாக ஒரு செங்கற்சூளையில் கொத்தடிமையாக வெந்து தவித்தபோது தர்மபுரி கலெக்டராக இருந்த அபூர்வாவால் மீட்கப்பட்டவர். ஏழ்மையைக் கடந்து அண்ணா பல்கலைக்கழகம் வரை எட்டிப் பிடித்தவர். வசதியற்று வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பலரை கல்லூரிகளில் சேர்த்து விட்டு அவர்களின் கனவை நினைவாக்கியவர். இந்த சாதனை இளைஞன், இன்று நம்மிடையே இல்லை. விடுதியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தர்மபுரி, தேவராசப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். சாலையோரத்து சிறுகுடிசைதான் இவரின் குடும்பத்துக்குக் கூடு. அப்பா செல்வம் குடும்பத்தைப் புறக்கணித்து ஓடிவிட, பிள்ளைகளை வளர்த்தெடுத்தது அம்மா காஞ்சனாதான். செங்கல் அறுத்தும், பாத்திரம் துலக்கியும் தோல் கிழிந்த கரங்களால் முகம் பொத்திக் கதறுகிற அந்த தாய்க்கு ஆறுதல் சொல்ல யாருக்கும் தைரியமில்லை. ‘‘சாப்பாட்டுக்கு வழியில்லாட்டியும் படிப்புல கொறையில்லை. நல்லாப் படிச்சான். ஒத்தை பைசா செலவு வைக்கல. கிடைக்கிற ஸ்காலர்ஷிப்புல தம்பியையும், ஃப்ரெண்ட்ஸ்களையும் கூட படிக்க வச்சான். 10வதுல 461 மார்க். மாவட்டத்தில பர்ஸ்ட் வந்தான். அப்போ அமுதா அம்மா கலெக்டரா இருந்தாங்க. அவங்க செலவுலயே தனியார் பள்ளிக்கூடத்தில சேத்துவிட்டாங்க. அங்கயும் 1159 மார்க் எடுத்து பர்ஸ்ட் வந்தான். கலெக்டரம்மா, ‘செலவை நான் பாத்துக்கறேன், படி’ன்னு சொன்னாங்க. ‘வேலைக்குப் போனதும் உன்னை ராஜாத்தி மாதிரி வச்சுக்கறேன்’னு சொன்னானே.. எந்த நல்லது கெட்டதும் பண்ணிப் பாக்காம தவிக்கவிட்டுப் போயிட்டானே...’’ என்று கதறுகிறார் காஞ்சனா.



‘‘மாசம் ஒருமுறை என்னை சென்னைக்கு வரச்சொல்லி பீச், சினிமான்னு சுத்திக் காமிக்கும். ‘வேலைக்குப் போனதும் உனக்கும், எனக்கும் இதேபோல ரெண்டு வீடு கட்டணும்டா’ன்னு சொல்லி தோட்டம், கார் பார்க்கிங் எல்லாம் வச்சு வரைஞ்சு காமிக்கும். எங்க ஊர்ல பிளஸ் 2 முடிச்சுட்டு காலேஜ் சேரமுடியாம இருந்த மூணு பேரை அண்ணனே கூட்டிட்டுப்போயி யுனிவர்சிடியில சேத்து விட்டுச்சு. அன்னைக்கு ராத்திரிகூட போன் பண்ணுச்சு. ‘நம்ம சீக்கிரமே நல்லா வந்திருவோம்’னு ரொம்ப நேரம் சொன்னுச்சு. என்ன நடந்துச்சுன்னே தெரியலே.. மறுநாள் பிணமாத்தான் பாத்தோம்...’’ என்று தேம்புகிறார் தம்பி மதி.

கல்லூரியில் எல்லோரும் வாய்நிறைய புகழ்கிறார்கள். சிறுதுளி அமைப்பு மூலம் பல மாணவர்களுக்கு உதவியிருக்கிறார் மணி. சேலம் ஓமலூரில் இருக்கும் அன்னை தெரசா ஆதரவற்றோர் விடுதியில் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து, ஸ்காலர்ஷிப்பில் அவர்களின் பராமரிப்புக்கு மாதமொரு தொகையையும் கொடுத்து வந்துள்ளார். ‘‘மணி இல்லைன்னா நான் அண்ணா யுனிவர்சிட்டிக்குள்ள நுழைஞ்சிருக்கவே முடியாது...’’ என்று கண்கலங்குகிறார் இரண்டாமாண்டு எஞ்சினியரிங் படிக்கும் மாதுபெருமாள். ‘‘எனக்கு அப்பா இல்லை. பிளஸ் 2வில 1018 மார்க். மேல படிக்க முடியலே. இதைக் கேள்விப்பட்டு என் வீட்டுக்கு வந்தான் மணி. அவன் செலவுலயே கவுன்சிலிங் அழைச்சுட்டு வந்து அண்ணா யுனிவர்சிட்டியில சேத்துவிட்டான். என்னை மாதிரி பல பேரு அவன் பேரைச் சொல்லுவாங்க. அவன் ஏன் இந்த முடிவெடுத்தான்னு தெரியலை...’’ என்று கலங்குகிறார் மாது. கலெக்டர் அபூர்வா தனக்குச் செய்த உதவிக்கு கைமாறாக, ‘அபூர்வா செந்தமிழன்’ என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டுள்ளார். அதே பெயரில் ‘தாய்ப்பால் வாசம்’ என்ற கவிதை நூலை எழுதியிருக்கிறார். துணைவேந்தர் மன்னர் ஜவஹர், கார்க்கி, பா.விஜய் ஆகியோர் அதற்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். அந்நூலை அண்ணா பல்கலைத் தமிழ்மன்றம் சார்பில் வெளியிட இருந்த சூழலில்தான் மணி இப்படியொரு முடிவெடுத்திருக்கிறார். மன்னர் ஜவஹர் கலங்கிப்போய் பேசுகிறார். ‘‘மிகவும் கஷ்டப்பட்டு வந்த பையன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு உதவி செய்வான்.



அவனது கவிதைகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றான். கவிதைகள் மிகச்சிறப்பாக இருந்தது. 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து, வெளியிட ஏற்பாடு செய்தேன். ஏப்ரல் 4ம் தேதி வெளியீட்டு விழா. திடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை. அவனை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக கணித்து வைத்திருந்தேன். இப்படியொரு முடிவெடுத்து விட்டான்...’’ என்கிறார். மணிவண்ணன் பிளஸ் 2 படிக்கும்போது உள்ளூரில் ஒரு பெண்ணோடு காதல் இருந்ததாகச் சொல்கிறார் மதி. அந்தக் காதலை ஜாதி இடைமறிக்க, மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். பல்கலைக்கழக விடுதியிலும் அது எதிரொலிக்க, நண்பர்கள் அழைத்துச்சென்று கவுன்சலிங் கொடுத்துள்ளார்கள். மேலும், படிப்பிலிருந்து கவிதையின் திசையில் அவரது கவனம் திரும்பிவிட்டது. அதனால் 26 அரியர் வைத்திருக்கிறார். பள்ளியில் தமிழில் படித்த அவரால் ஆங்கிலவழி கல்லூரி பாடங்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை! வறுமையான சூழலில் பிறந்து, நல்ல மனிதர்களின் பார்வையில் பட்டு, அவர்களின் உதவியாலும் உழைப்பாலும் உயரத்தை எட்டிப்பிடித்த மணிவண்ணனை எது மரணத்தின் திசையில் நகர்த்தியதோ தெரியவில்லை. ஆனால் மணியை மலைபோல் நம்பிக்கொண்டிருந்த குடும்பம் நிலை குலைந்து கிடக்கிறது.

 வெ.நீலகண்டன் படங்கள்: ஜெயசங்கர்