சுட்ட கதை சுடாத நீதி
 ஏ.சி. விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனத்தில் ஒரே நேரத்தில் சேர்ந்து ஒன்றாக வேலை பார்த்தவர்கள் குமாரும் ரவியும். அலுவலக நேரத்தில் சரியாக வேலை பார்த்து, வேலை முடிந்ததும் கிளம்பிவிடுவார் ரவி. குமார் அப்படி இல்லை. சில நாள் ஓவர் டைம் பார்ப்பார்; சில நாள் மற்ற டிபார்ட்மென்ட்டுகளுக்குச் சென்று, அவர்கள் வேலை செய்யும் விதத்தைக் கவனிப்பார்.
திடீரென ஒரு நாள் அவர் வேலையை ராஜினாமா செய்தார். பெரிய நிறுவனம்; பாதுகாப்பான வேலை; கைநிறைய சம்பளம்... எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு அவர் போவதில் எல்லோருக்கும் ஆச்சரியம்.
‘‘தூரத்து நகரம் ஒன்றில் சொந்த நிறுவனம் ஆரம்பிக்கப் போறேன்’’ என்று ரவியிடம் மட்டும் சொன்னார் குமார். அதன்பின் இருவரும் அவ்வப்போது போனில் பேசிக் கொள்வார்கள். நாளடைவில் பேசும் சந்தர்ப்பங்கள் குறைந்து, தொடர்பே அறுந்துவிட்டது.
பல வருடங்கள் கழித்து அந்தவழியாக வேறொரு இடத்துக்கு ரவி போக நேர்ந்தது. அப்போது குமாரின் ஞாபகம் வந்தது. அங்கும் இங்கும் விசாரித்தபடி குமாரைத் தேடிச் சென்று பார்த்துவிட்டார். பழைய நண்பரைப் பார்த்து நெகிழ்ந்த குமார், இருந்த வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அவரை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சாப்பிடச் சென்றார். இருவரும் பழைய கதைகளைப் பேசினார்கள்.
‘‘எப்படி இருக்கு வாழ்க்கை?’’ கேட்டார் ரவி. ‘‘ஆரம்பத்துல கஷ்டப்பட்டேன். வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாத நிலைமை வந்திருக்கு. அப்ப முழுநாளும் வேலை பார்த்தேன். இப்போ பரவாயில்லை. நூறு பேருக்கு என்னால வேலை கொடுக்க முடிஞ்சிருக்கு. அரை நாள்தான் வேலை பார்க்கிறேன்!’’ என்றார் குமார். ‘‘அப்போ மீதி அரை நாள்? ஏதாவது விளையாடுவியா...’’ ‘‘கிண்டலா? உங்க அரை நாள் 4 மணி நேரமா இருக்கலாம். என் கணக்குப்படி அரை நாள் வேலைங்கிறது 12 மணி நேரம்’’ என்றார் குமார். தியாகங்கள் இல்லாமல் முன்னேற்றம் வருவதில்லை!
|