பீரங்கியில் கசியும் ஊழல் புகை!





*  ராணுவத்திடம் உள்ள பீரங்கிகளில் வெடிப்பொருட்கள் தீர்ந்துவிட்டன.

*  இந்தியா மீதான விமானத் தாக்குதல் தடுப்பு சிஸ்டம் 97 சதவீதம் பயனற்ற நிலையில் இருக்கிறது.

*  சிறப்பு அதிரடிப் படையினரிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை.

*  தரைப்படையும் ஆயுதங்கள் பற்றாக்குறையால் பலவீனமாக உள்ளது.

*  இரவில் போரிடுகிற தகுதியிழந்த நிலையில் தரைப்படை உள்ளது.

*  எஞ்சினியர்கள், சிக்னல்கள் நிலையும் அபாயகட்டத்தில் இருக்கிறது.

 ‘இது பெரிய ராணுவ ரகசியம்’ என இந்தியாவில் யாரும் இனி சொல்லமுடியாதபடி எல்லா ரகசியங்களையும் அம்பலமாக்கி இருக்கிறார் ராணுவத் தளபதி  வி.கே.சிங்.

பிரதமர் சிங்குக்கு தளபதி சிங் எழுதிய ரகசியக் கடிதம் ஒன்றை மும்பையிலிருந்து வெளியாகும் டி.என்.ஏ. நாளிதழ் வெளியிட்டது. தேசம் எங்கும் புயலைக் கிளப்பி இருக்கிறது அந்தக் கடிதம். கிட்டத்தட்ட, ‘எங்க டீமே வீக்கா இருக்கு... யார் வேணா வந்து அட்டாக் பண்ணுங்க’ என மறைமுகமாக சொல்வதைப் போன்ற விஷயம் இது! ‘தாங்கள் பலவீனமாக இருக்கிறோம்’ என்ற நினைப்பு எழுந்தால், ஏதோ ஒரு நெருக்கடியை இந்திய ராணுவத்தில் இருக்கும் 11 லட்சத்து 30 ஆயிரம் வீரர்களும் எந்த மன நிலையில் எதிர்கொள்வார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்படி ஒரு ரகசியக் கடிதத்தை அம்பலப்படுத்திய நாளிதழின் ‘தேசப்பற்றை’ யாரும் குறை சொல்லவில்லை. தளபதி வி.கே.சிங்கை காய்ச்சி எடுக்கிறார்கள்.

அவர் நல்லவரா? அவர் செய்த காரியம் நல்லதா?


‘இல்லை... எல்லாவற்றுக்கும் உள்நோக்கங்கள் இருக்கின்றன’ என்கிறார்கள். கடந்த சில மாதங்களாகவே தவறான காரணங்களுக்காக அவர் பெயர் செய்திகளில் அடிபடுகிறது.
முதலில், தனது வயது தவறாக பதிவு செய்யப்பட்டது என காரணம் சொல்லி, அதைத் திருத்தி ஒரு வருடம் பதவி நீட்டிப்பு கோரினார். அரசு நிராகரித்ததும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் கட்டளையை மதித்து எதிரிகளோடு போரிட வேண்டிய ராணுவத் தளபதி, மத்திய அரசுடனே போரிட்ட விநோதம் தேசத்தில் முதல்முறையாக நடந்தது. உச்ச நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.

அடுத்ததாக எழுந்தது ஒட்டுக் கேட்பு சர்ச்சை. காஷ்மீர் எல்லைப்புறத்தில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காக அதிநவீன ஒட்டுக் கேட்பு கருவிகளை வாங்கியிருக்கிறது ராணுவம். சென்சிடிவ்வான இந்தக் கருவிகளை வைத்து, ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் நிகழும் செல்போன் மற்றும் தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்க முடியும். இந்தக் கருவிகளில் சிலவற்றை டெல்லி எடுத்துவந்து, முக்கியமான போன் உரையாடல்களை ராணுவம் ஒட்டுக் கேட்டதாக ஒரு தகவல் வெளியானது. குறிப்பாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் அறையிலும் ஒட்டுக் கேட்பு கருவிகள் சிக்கியதாக தகவல் எழுந்தது. தன்னைப் பழிவாங்க ராணுவத்தில் யாரோ சூழ்ச்சி செய்வதாக இம்முறை சொன்னார் வி.கே.சிங்.மூன்றாவது விஷயம், லஞ்சப் புகார். தரம் குறைவான 600 வாகனங்களை ராணுவத்திற்காக வாங்குவதற்கு தனக்கு 14 கோடி ரூபாய் லஞ்சம் தர முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் பேரம் பேசியதாக வி.கே.சிங் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். சம்பவம் நடந்தது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதே பாதுகாப்பு அமைச்சரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டதாக சிங் சொல்லி, அந்தோணியையும் சிக்கலில் மாட்டிவிட்டார். ஆனால், ‘நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என சிங் கேட்டுக்கொண்டதை அந்தோணி அம்பலப்படுத்தினார். தன்னிடம் லஞ்சம் கொடுக்க பேரம் பேசிய ஒருவர்மீது நடவடிக்கை வேண்டாம் என்று தளபதி கேட்டது ஏன்?

நான்காவதாக இப்போது ராணுவ பலவீனக் கடிதம்! ‘ராணுவத்தில் இப்போது இருக்கும் குறைபாடுகளை சரிசெய்யவே 41 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று மதிப்பிட்டு, கடந்த ஆண்டிலிருந்தே புது கொள்முதல்கள் நடந்துவரும் வேளையில் இப்படி ஒரு கடிதத்தை அவர் பிரதமருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? ராணுவத்தை தளபதி களங்கப்படுத்துகிறார் என்ற குமுறல் இருந்தாலும், ஊழல்களுக்குக் கடிவாளம் போட வேண்டிய நேரமும் வந்துவிட்டது.
 அகஸ்டஸ்