கன்னி, துலாம் ராசிக்கு மாமியார் மருமகள் பிரச்னையைத் தீர்க்கும் இறைவன்






கன்னி ராசியில் பிறந்த நீங்கள் பெரும்பாலும் உணர்ச்சிமயமாக இருப்பீர்கள். எல்லாவற்றிலும் ஒரு வேகத்தை எதிர்பார்ப்பீர்கள். ‘‘சீக்கிரமா முடிங்க... எப்போ முடிப்பீங்க...’’ என்று எடுத்த வேலையை முடிப்பதற்குள்ளாக துளைத்து எடுத்து விடுவீர்கள். நீங்களும் வேகத்தோடுதான் இருப்பீர்கள். மின்னல் வேகத்தில் யோசிப்பீர்கள்; நெருக்கடியான நேரங்களில்கூட தயங்காது முடிவெடுப்பீர்கள். ஆனால், ‘என்னால் முடியுமா... எனக்கு இந்தத் தகுதி உண்டா?’ என்றெல்லாம் உள்ளுக்குள் அவ்வப்போது குழம்பித் தவிப்பதை தவிர்க்க வேண்டும். இது உங்களை தாழ்வு மனப்பான்மைக்குள் கொண்டுபோய் சேர்த்து விடும்.

இந்த ராசிப் பெண்கள் மருமகளாக ஒரு வீட்டுக்குச் செல்லும்போது நிர்வாகத்தை எடுத்துக்கொள்கிறாரோ இல்லையோ, தன்னுடைய ஆலோசனைகளையும், புத்திசாலித் தனத்தையும்தான் முதலில் முன்வைப்பார். எல்லாவற்றையும் திட்டமிட்டே செய்ய விரும்புவார். கன்னி ராசியின் மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக மிதுன புதன் வருகிறது. உங்கள் ராசிநாதனான புதனே மாமியார் ஸ்தானத்திற்கும் வருவதால் உங்களைப் போலவே யோசிப்பவராகவும், பேசுபவராகவும் வருவார். இதனால் சரியான நேரத்தில் பிரச்னைகள் தவிர்க்கப்படும். அதேசமயம், ‘‘அவ மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும்’’ என்று பல நேரங்களில் இடிக்கவும் செய்வார். இப்படி நீங்களும் மாமியாரும் ஒரே அலைவரிசையில் இருக்கும்போது பல நன்மைகளும், சில தர்மசங்கடமான விஷயங்களும் நடைபெறக் கூடும். ‘‘இதோ பாரும்மா. அவன் கொஞ்சம் அவங்க அப்பா மாதிரி முசுடு. கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும். கவலைப்படாத’’ என்று ஆறுதலாகப் பேசுவார்.

பொதுவாக உங்கள் ஜாதகத்தில் புதன் நன்றாக இருந்துவிட்டால், தாயைப் போல பாசம் பொழிபவராக மாமியார் இருப்பார். ஆனால் புதன், செவ்வாய் அல்லது குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ, குடைச்சல் கொடுப்பார். இதே புதன் கேதுவோடு சேர்ந்திருந்தால், அடிக்கடி நோய்வாய்ப்பட்டு படுத்துவிடுவார். இதெல்லாம் மிகவும் கடுமையாக பார்வையைப் பொறுத்துத்தான் இருக்கும். பெரும்பாலான கன்னி ராசிப் பெண்களுக்கு மாமனாரை விட மாமியார் அனுசரணையாக அமைவார்கள். நீங்கள் மாமியாரை அனுசரித்துப்போனாலே போதும். உங்கள் வாழ்க்கை ஏற்றம் மிகுந்த திசையில் செல்லும். உங்கள் மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிநாதனான புதனுக்கு செவ்வாய் எதிர்மறை கதிர்வீச்சாகவும், பகைக் கோளாகவும் வருகிறது. இதனால் மாமனார் இல்லாத வீட்டில் நீங்கள் மருமகளாக செல்லக் கூடும். அப்படி இருந்தாலும், மாமனார் கொஞ்சம் பலம் குறைந்தவராகத்தான் இருப்பார். இதெல்லாம் உங்கள் ஜாதகத்தில் புதன் மற்றும் செவ்வாயின் பார்வை மற்றும் சேர்க்கையைப் பொறுத்துத்தான் நடைபெறும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் போன்றவற்றில் செவ்வாய் இடம்பெற்றிருந்தால் மாமனார் தந்தையைப்போல் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொள்வார்.



உங்கள் ஜாதகத்தில் செவ்வாயும் குருவும் சேர்ந்திருந்தாலோ, நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்தாலோ, உங்கள் கணவர் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்காதவராகவோ, துணைபோகிறவராகவோ மாமனார் இருப்பார். இதேபோல செவ்வாய் தான் ஆளுமை செய்யும் நட்சத்திரத்தில் இருந்தாலும், ராகுகேதுவோடு சம்பந்தப்பட்டாலும், ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கியபடி இருப்பார். இவையெல்லாம் கொஞ்சம் ஜாதகத்தை கையில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டிய விஷயங்களாகும். தெரிந்து வைத்துக் கொண்டு ஜோதிடரை அணுகி ஆலோசனை பெறுங்கள். மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக புதன் வருகிறது. அதேபோல மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருகிறார். இதுபோன்ற அமைப்பில் இருக்கும்போது நாம் நேரடியாக புதன் மற்றும் செவ்வாய்க்கு அதிதேவதைகளாக உள்ள தெய்வங்கள் ஒரே சந்நதியிலோ அல்லது ஒற்றுமையாகவோ இருக்கும் தலத்திற்குச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஓர் தலம்தான் மதுரைக்கு அருகேயுள்ள திருப்பரங்குன்றம். சித்திரை மாதத்தில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கல்யாணத்திற்கு தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாளுடன் முருகன் செல்கிறார். எனவே, இப்படி நடைபெறும் நிகழ்வுள்ள தலமான திருப்பரங்குன்றத்திற்கு சென்று வாருங்கள். உங்களின் பலவீனமான செவ்வாயை இத்தல முருகன் பலப்படுத்துவார். ஏனெனில் உங்கள் ராசியாதிபதியான புதனே மாமியார் ஸ்தானத்துக்கும் வருவதால் புதனுடைய விஷயத்தைக் கொஞ்சம் தளர்த்தலாம். மாமனார் விஷயத்தை மேலும் வலிமை கூட்டவும் இந்தக் கோயிலை பரிகாரத் தலமாக வணங்க வேண்டும்.

துலாம் ராசியில் பிறந்த நீங்கள் பொதுவாக சூட்சும புத்தியும், எதையும் சீக்கிரம் புரிந்து கொள்ளும் ஆற்றலும் மிக்கவர்கள். உங்கள் ராசிக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். ஏராளமான எதிர்பார்ப்புகளோடுதான் மண வாழ்க்கையைத் தொடங்குவீர்கள். எல்லாவற்றிலும் நியாய தர்மத்தை நிலை நிறுத்துவீர்கள். ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்கிற சொற்றொடரை வாழ்க்கையாக வாழ்ந்து காட்டுவீர்கள். உங்கள் ராசியின் சின்னமாகவே தராசு வருவதால் நடுநிலையாக இருக்கவே விரும்புவீர்கள். ‘‘அவரு பண்ணது தப்பா... ரைட்டா...’’ என்று அவ்வப்போது எவரேனும் உங்களிடம் கேட்டபடி இருப்பார்கள்.



ஒருவரை நம்பிவிட்டால், அவரையே தொடர்ந்து நம்பும் நிலைமையை வளர்த்துக் கொள்வீர்கள். இதனால் திருமணமாகி போகும் வீட்டில் சில சமயம் ஏதேனும் பிரச்னை எனில் மிகவும் துவண்டு போவீர்கள். ‘‘அவங்க போய் இப்படிப் பேசிட்டாங்க. இதுவரைக்கும் இப்படி என்கிட்ட பேசினதே இல்லை’’ என்று உடைந்து போவீர்கள். நீங்கள் மருமகளாகப் போன இடத்தில் செட்டில் ஆவதற்கே குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். உங்களை அவ்வளவு சீக்கிரம் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அச்சுக்கு ஏற்றாற்போல வார்க்கப்படுவீர்கள் என்பது அவர்களுக்குப் புரியாது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் குடும்பத்து சம்பிரதாயங்கள், விசேஷங்கள் என்று உள்ளே புகுவீர்கள். பிறகு ஆட்சி நடத்துவீர்கள். எப்போதும் இதமாகப் பேசும் நீங்கள் திடீரென்று பொங்குவீர்கள்.

உங்களின் மாமியார் ஸ்தானத்திற்கு அதிபதியாக உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான கடக சந்திரன் வருகிறது. எப்போதும் நல்ல நண்பராகவும் அன்பைப் பொழிபவராகவும் மாமியார் அமைவார். ஏதேனும் பிரச்னை என்றால் கூட நேரடியாகக் கேட்டுவிட்டு மறந்து விடுவார்; மற்றவர்களிடம் சொல்லி பெரிதாக்க மாட்டார். ‘‘நான் எது சொன்னாலும் அது உன் நல்லதுக்காகத்தான்’’ என்கிற ரீதியில்தான் இருக்கும். அதேபோல நீங்களும் சிறிய சிறிய விஷயங்களைக்கூட கணவரிடம் பேசி பூதாகரமாக வளர்க்க மாட்டீர்கள். பிறந்த வீட்டைவிட புகுந்த வீட்டு சொந்தங்களோடுதான் அதிகமாக உறவு கொண்டாடுவீர்கள்.

உங்களின் மாமியாருக்கு வயது தெரியாது. நவீனமாக சிந்திப்பார்கள். எல்லாவற்றையும் அவ்வப்போது வெளிப்படுத்தியும் விடுவார்கள். மாத்ருகாரகன் எனப்படும் தாய்க்குரியவரான சந்திரன் உங்களின் மாமியார் ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருவதால், ‘மாமியார் வேறல்ல; தாய் வேறல்ல’ என்பது போலத்தான் இருக்கும். மற்றபடி சின்னச் சின்ன குற்றம், குறைகளை நீங்களும் பெரிதுபடுத்த வேண்டாம். சந்திரன் அதிபதியாக வருவதால் மனம் அவ்வப்போது குழப்பத்தில் ஆழ்ந்தபடி இருக்கும். உங்கள் ஜாதகத்தில் ராகுகேதுவோடு சந்திரன் சேர்ந்திருந்தால் கொஞ்சம் ஏதாவது தொணதொணப்பார். சிறிய விஷயங்களை பூதாகரமாக பார்த்துப் பயப்படுவார்; அல்லது பயமுறுத்துவார். இதெல்லாம் கூட ஜாதகத்தில் மிகவும் மோசமாக கிரகநிலைகள் இருந்தால்தானே தவிர, மற்றபடிக்கு பயப்பட வேண்டாம்.

உங்களின் மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக கோதண்ட குரு எனப்படும் தனுசு குரு வருகிறார். ‘‘அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை’’ என்று நாலு பேர் அவரைப் பாராட்டியபடி இருப்பார்கள். உங்கள் மீது பிரியமானவராக இருப்பார். என்ன, அவ்வப்போது கோதண்ட குருவின் குணமான சண்டை போடுவதும் இருக்கத்தான் செய்யும். சட்டென்று குறை கூறி சங்கடப்படுத்துவார். எவ்வளவு செய்தாலும் எளிதில் திருப்தியாக மாட்டார். ‘‘உங்க வயசுல நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? நீங்களெல்லாம் அதுல ஒரு வீசம் கூட கஷ்டப்படலை. ஆனா, கஷ்டம் தெரிஞ்சாதான் நல்லது’’ என்று தானாகவோ, பிறரிடமோ உங்களைக் குறித்து குறையாகவும் புலம்புவார். உங்களுக்கு இந்த குணம் ஒரு அயர்ச்சியை ஏற்படுத்தும். உங்களில் சிலருக்கு மாமனார் விபத்தில் பாதிக்கப்பட்டவராக இருப்பார். மேலும், உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரனுக்கு குரு பகையாக வருவதால் சில நேரங்களில் சாதகமாகவும், சில சமயங்களில் பாதகமாகவும் நடந்து கொள்வார். சொந்த ஜாதகத்தில் குருவின் பலம் மற்றும் பலவீனங்களைப் பொறுத்துதான் மாமனாரின் விஷயங்கள் அமையும். ஆனால், அடிப்படையாக மாமியார் உங்களுக்கு எல்லோரையும் விட ஆதரவாக இருப்பார்.

துலாம் ராசியினருக்கு மாமனார் ஸ்தானத்திற்கு தனுசு குருவும், மாமியார் ஸ்தானத்திற்கு சந்திரனும் வருகிறார்கள். ஒருவிதத்தில் பார்த்தால் உங்கள் மாமனார்  மாமியார், பல பேருக்கு ஆதர்ச தம்பதியாக இருப்பார்கள். குருவும் சந்திரனும் ஒன்று சேரும்போது, இப்படி புகழையும் சிறப்பையும் தானாகவே தந்துவிடும். இப்படி குருவும் சந்திரனும் இணைந்த அம்சமானதாகவோ, ஈசனே குருவாக நின்று சந்திரனை ஆளும் தெய்வமான அம்பாளுக்கு உபதேசம் செய்த தலமாக இருந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் அது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட தலமாக திருச்சிக்கு அருகேயுள்ள திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. குரு ஸ்தானத்தில் சிவன் நின்று சிஷ்யையான அகிலாண்டேஸ்வரிக்கு பஞ்சாட்சரமான நமசிவாய மந்திரத்தை உபதேசம் செய்தார். இத்தலத்தில் அம்பாள் கன்னிகையாகவே இருக்கிறாள். இத்தலத்திற்கு சென்று வாருங்கள். மாமனார்  மாமியார் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்தால் உடனே தீரும். குடும்பத்தில்
சந்தோஷம் பெருகும். 
(தீர்வுகளைத் தேடுவோம்...)