அறிவுரை





தள்ளாடி நடந்து தடுமாறி கீழே விழுந்த அந்தக் குடிகாரனைப் பார்த்த கார்த்திகேயன் பரிதாபப்பட்டார். ஏதாவது வண்டியில் அடிபட்டுவிடப் போகிறான் என்ற அக்கறையில் அவனை மெதுவாகத் தூக்கினார். ‘‘தம்பி... இந்தச் சின்ன வயசுல இப்படிக் குடிச்சு ஏன் உடம்பைக் கெடுத்துக்கறே? பணமும் விரயம்தானே? வா, உன்ன வீட்ல விட்டுட்டுப் போறேன். எங்க இருக்கு உன் வீடு?’’ என்றார். அவன் தடுமாறியபடி விலாசத்தைச் சொன்னான். அங்கு வந்த ஒரு ஆட்டோவை அழைத்து, மெதுவாக அவனை ஆட்டோவில் ஏற்றி அவன் வீட்டு வாசலில் இறக்கி விட்டார். ‘‘தம்பி... குடியால பணமும் வீணாகும்; உடம்பும் பாழாயிடும். இனிமேல் குடிக்காதே’’ என அறிவுரை வழங்கினார் கார்த்திகேயன். ‘‘ஏ பெருசு... ரொம்ப தேங்க்ஸ்! குடிச்சு காசை வீணாக்காதேன்னு நீ புத்தி சொல்றே... நான் குடிக்கறதுக்கு வெறும் 70 ரூபாதான் செலவு பண்ணினேன். நீ குடிக்கல... ஆனாலும் என்னை இங்க கூட்டிட்டு வர 100 ரூபா செலவு பண்ணிட்டே. இப்போ சொல்லு... யார் பணத்தை வீணாக்கறாங்க?’’ - உளறியபடி அவன் வீட்டுக்குள் போனான். ‘உதவி செய்ய வந்ததற்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்’ என்று தலையில் அடித்துக் கொண்டார் கார்த்திகேயன்.