
பதறிப் போய்விட்டாள் விஜயா. கணவனைப் பறிகொடுத்து முழுதாக ஐந்து நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள் இவள் இப்படி வேலைக்கு வந்துவிட்டாளே... அருகில் போய் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டு, ‘‘உனக்கு லீவ்தான் நிறைய இருக்கே ஈஸ்வரி. ரெண்டு வாரமாவது வீட்ல இருந்தாதான் என்ன? நீ பாட்டுக்கு இப்படிக் கிளம்பி வந்துட்டே?’’ என்றாள்.
‘‘இல்லை விஜயா... நான் தெளிவா யோசிச்சு எடுத்த முடிவுதான் இது. அவரு போய் அஞ்சு நாள்தான் ஆகுதுன்னு உன்னை மாதிரியே எல்லோரும் கேட்டாங்க. எல்லோருக்கும் என் பதில் இதுதான்... ‘பாதியிலயே போய்ச் சேர்ந்துட்ட ஒருத்தருக்காக இருக்கற என் வாழ்க்கையை நான் இழக்க விரும்பலை. பொதுவா உறவின் அருமை பிரிவில் தெரியும்னு சொல்வாங்க. அவரோட பிரிவில் எனக்கு எந்த பாதிப்பும் உண்டாகலை. இப்ப நினைக்கும்போது எங்க உறவு எப்படி இருந்திருக்குன்னு புரியுது. ஊருக்காக வீணா நடிக்கறதுக்கு என் மனசு இடங்கொடுக்கலை...’’ என்று சொல்லிவிட்டு இயல்பாக நாற்காலியில் சாய்ந்து கொண்டாள் ஈஸ்வரி.
‘வாழ்க்கை எத்தனை கடுமையான வாத்தியாராக இருக்கிறது!’ என்று யோசித்துப் பார்த்தாள் விஜயா. ஒவ்வொருவருக்கும் அது ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. ஈஸ்வரிக்கு இரக்கமே இல்லாத ஒரு கணவனைக் கொடுத்து, வார்த்தைகளை விஷ அம்புகளாக செலுத்தி வதைக்கும் குரூர புத்தியையும் அவனுக்குக் கொடுத்து, மனைவிக்கு மரியாதையை கொடுக்கத் தெரியாதவனாக அவனைப் படைத்து, அவனையும் பாதியிலேயே பறித்து, அதை எதிர்கொண்டு வெளியே வரக் கூடிய துணிச்சலையும் ஈஸ்வரிக்குக் கொடுத்து... அப்பப்பா! கொஞ்சமும் இரக்கமில்லாததுதான் வாழ்க்கையா..? ஆனால் ஈஸ்வரியின் கணவன் போன்ற மனிதர்கள் வாழும் அதே இடத்தில்தான் கலைச்செல்வனைப் போன்ற அடுத்தவர் நலம் பேணும் ஆட்களும் வாழ்கிறார்கள். ஆக, வாழ்க்கை எல்லா நேரங்களிலும் கடுமை காட்டுவதில்லை. சில நேரங்களில் இனிமையாகவும்தான் இருக்கிறது. தனக்கான வகுப்பைக்கூட விட்டுவிட்டு அன்று முழுக்க ஈஸ்வரியுடனேயே இருந்தாள் விஜயா. மாலையில் வீட்டுக்குத் திரும்பிய பிறகும்கூட ஈஸ்வரியின் நினைவே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. மொட்டை மாடியில் காயப் போட்டிருந்த துணியை எடுக்கப் போனவள், இந்த யோசனையோடு அங்கேயே நின்றுவிட்டாள்.
விஜயா யோசனையில் ஆழ்ந்திருந்தபோது பதற்றமாக மாடியேறி வந்தான் ஆனந்த். அந்த நேரத்தில் விஜயாவை அவன் அங்கு எதிர்பார்க்கவில்லை. ‘‘என்னடா... இந்த நேரத்துல அதிசயமா மாடிப் பக்கம் வந்திருக்க..?’’ என்றாள் விஜயா. ‘‘சும்மா படிக்கலாம்னுதான்...’’ என்றான் ஆனந்த். ‘‘பரவாயில்லையே... புத்தகமே எடுக்காம படிக்கிற அளவுக்கு புத்திசாலி ஆகிட்டியே...’’ என்று விஜயா சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டு வாசலில் ஏதோ சலசலப்பு கேட்டது. விஜயா மாடியிலிருந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். அம்மா அவர்களிடம் ஏதோ சமாதானமாகப் பேசிக் கொண்டிருந்தாள். ‘‘என்னம்மா... அவங்கள்லாம் யாரு... என்ன வேணுமாம்..?’’ என்றாள் மாடியில் இருந்தபடியே.மேலே நிமிர்ந்து பார்த்த அம்மா, ‘‘நம்ம ஆனந்தைக் கேட்கறாங்க... அவன் இன்னும் வீட்டுக்கு வரலைன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்...’’ என்றாள்.

கூட்டமாக வந்தவர்கள் மேலே பார்த்துவிட்டு, ‘‘டீச்சர்... இது உங்க வீடா? ஆனந்த் யாரு டீச்சர்... உங்க வீட்டுப் பையனா? ஊருக்கெல்லாம் ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்கற டீச்சர் நீங்க... ஆனா உங்க வீட்டுப் பையன் பொம்பளை பொறுக்கியா இருக்கான். ஏற்கனவே காலேஜ்ல லவ் லெட்டர் கொடுத்து சஸ்பெண்ட் ஆனான்... இப்போ எங்க தெருவுல ஒரு பொண்ணுக்கு லெட்டர் குடுத்திருக்கான். அவன் வீட்டுக்கு வந்தா கொஞ்சம் கண்டிச்சு வையுங்க. இனிமே நாங்க அவனை எங்க தெருப்பக்கம் திரியறதைப் பார்த்தோம்... டீச்சர் வீட்டுப் புள்ளைன்னு மரியாதைக்குகூடப் பார்க்க மாட்டோம்’’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
‘‘என்னடா ஆனந்த்... இப்படி பேர் வாங்கிட்டு இருக்கே? உனக்கு எதுக்குடா இந்த வயசுலயே காதல், கத்தரிக்காய் எல்லாம்... நம்ம வீட்லயே ஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் ஓடிக்கிட்டு இருக்கு. நீ வேற ஏண்டா மானத்தை வாங்கறே? அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாரு...’’ என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்தான் ஆனந்த். ‘‘போதும்க்கா... உன் அட்வைஸ் புராணத்துக்கு இதோட ஃபுல்ஸ்டாப் வச்சிடு. இதைக் கேக்கறதுக்கு, நான் அவனுங்ககிட்டே நாலு அடியே வாங்கியிருக்கலாம்... சும்மா போரடிக்காதே’’ என்றபடி கீழே இறங்கிப் போனவன், கவிதா பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வருவதைப் பார்த்தான். ‘அட... நளினி இந்நேரம் வந்திருப்பாளே..!’ என்று தனக்குத் தானே சொன்னபடி ஓடினான் வெளியே! ராதா வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தாள். ‘‘ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா எங்கடி கிளம்பிட்ட..?’’ என்று அம்மா அடுக்களையில் இருந்து குரல் கொடுத்தாள்.

‘‘வழக்கமா போற இடத்துக்குத்தான். மாசாமாசம் உனக்கு இது ஒரு கேள்வி... ஒவ்வொரு முறையும் ‘பியூட்டி பார்லருக்கு போறேன்’னு நான் சொல்லணும்... ‘காசுக்குப் புடிச்ச கேடு. இப்படி தலைமுடியை வெட்டிக்கிட்டு புருவத்தை கத்தரிச்சுக்கிட்டு வருவாளா குடும்பப் பொண்ணு’ன்னு நீ திட்டணும்... அதுதானே? நல்லா திட்டிக்கோ! நான் கிளம்பறேன். என் காதுல எதுவும் விழாது’’ என்றபடி கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். ‘‘போடி... போ! எல்லா ஆட்டமும் கொஞ்ச நாளைக்குத்தானே... அதுக்கு அப்புறம் புருஷன் கொண்டு வர்ற ஆயிரத்தையும் ரெண்டாயிரத்தையும் எப்படி மிச்சம் பிடிக்கலாம்னு கணக்குப் போட ஆரம்பிச்சுடுவே. அப்போ நான் கேட்பேன், ‘ஏண்டி... பியூட்டி பார்லருக்கு போகலையா’ன்னு!’’ என்று அடுக்களையில் இருந்தபடியே அம்மா பேசினாள். புறப்பட்டவள் சட்டென்று பையை தூக்கிப்போட்டபடி உட்கார்ந்து விட்டாள். ‘‘வெளியே போறப்ப பூனை குறுக்கே வர்ற மாதிரி தேவையில்லாமல் அந்த ஆளை இந்த நேரத்துல ஏம்மா ஞாபகப்படுத்துற? இப்பவாச்சும் ஃபேஷியல், ஐப்ரோ ட்விஸ்டிங்னு நிறுத்திக்கறேன். அவன் காசுல இருக்கு வேடிக்கை...’’ என்று வெறுப்போடு சொல்ல, கழுவி வைத்திருந்த பாத்திரங்களை காயவைக்க கிணற்றடிக்கு எடுத்துவந்த அம்மாவின் முகத்தில் கோபம். ‘‘அடியே... முடிவு பண்றதுக்கு முன்னே நீ அப்படி இப்படி பேசினப்ப பொறுத்துக்கிட்டு இருந்தேன். இப்போ அவரு இந்த வீட்டு மாப்பிள்ளை. வாய்க்கு வந்தபடி பேசுனா பிஞ்சிரும், சொல்லிட்டேன்... ஒழுங்கு மரியாதையா பேசிப் பழகு’’ என்றவள், வெளியே புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த விஜயாவைப் பார்த்தாள்.

‘‘என்னம்மா... காலங்காத்தால கிளம்பிட்ட? பசங்களை ஏதும் ஸ்பெஷல் கிளாஸ் வரச் சொல்லியிருக்கியா..?’’ என்றாள். ‘‘இல்லம்மா... இன்னிக்குத்தான் ஈஸ்வரி வீட்டுக்காரருக்கு படத் திறப்பு... அதான் போயிட்டு வரலாம்னு!’’ என்று சொல்லிவிட்டு குடையை எடுத்தாள். ‘‘போய்ச் சேர்ந்த புண்ணியவானுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்... பொட்டு, பூ, பொடவைன்னு எதையும் விட்டுக் குடுக்க மாட்டேன்னு நின்னுட்டாளாம்... இப்போ படம் திறக்கப் போறாங்களாக்கும்...’’ என்று நொடித்துக் கொண்டு போனாள் அம்மா. விஜயா தெருவில் இறங்கி நடந்தாள். எத்தனை இரக்க குணம் கொண்டவள் அம்மா. ஈஸ்வரி என்றால் ஈர மனசோடுதான் பேசுவாள். அவள் கணவன் ஆஸ்பத்திரியில் இருந்தபோதுகூட பார்க்க வருகிறேன் என்று சொல்லியிருந்தாள். ஆனால், அவளுக்கே ஈஸ்வரியின் மனநிலை தெரியவில்லை. புருஷன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவன் போய்விட்டால் பெண் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்றுதான் நினைப்பு இருக்கிறது. அப்படி விட்டுக் கொடுக்கவில்லை என்றால் அவளை சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படிச் செய்யாதவர்களை பெண்களே கூட கடுமையான வார்த்தைகளால்தான் விமர்சனம் செய்கிறார்கள். ‘ஈஸ்வரி இப்படி இன்னும் எவ்வளவு வார்த்தைகளைத் தாண்டி வரவேண்டுமோ’ என்று நினைத்துக் கொண்டாள். ஈஸ்வரியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது கலைச்செல்வனும் வந்திருந்தார். ஈஸ்வரியின் மகனுக்கு சாக்லெட் பட்டை வாங்கிக் கொடுத்திருந்தார். ஈஸ்வரியின் தம்பி ரவியும் கலைச்செல்வனும் பேசிக் கொண்டிருந்தார்கள். சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து சாப்பாடு எல்லாம் ஆன பிறகு விஜயா புறப்பட்டாள்.
ரவி ஓடி வந்து விஜயாவின் கைகளையும் பிடித்துக் கொண்டான். ‘‘நீங்க இதுவரைக்கும் செய்த உதவியே பெரிய விஷயம்... இனியும் இதேபோல எங்கக்காவை நீங்கள்லாம் பார்த்துப்பீங்கன்னு நம்பித்தான் போறேன்... ஊருக்கு எங்களோட வந்திடுன்னு கூப்பிட்டுப் பார்த்தோம். ‘இல்லை... வேலை எனக்கு முக்கியம்’னு இங்கேதான் இருப்பேன்னு உறுதியா நிக்குது. என்னால் எதுவும் பேசமுடியலை... நான் கொஞ்சநாள் கழிச்சு வர்றேன்...’’ என்று கண்ணீர் மல்கினான். அவன் இடத்தில் ஆனந்தை வைத்துப் பார்த்தாள் விஜயா. பொறுப்பில்லாமல் ஊர்சுற்றி பொம்பளை பொறுக்கி என்று பேர் எடுக்கும் அவன் எங்கே... அக்காவுக்காக கண்ணீர் மல்க நிற்கும் இவன் எங்கே... என்று தோன்றியது. தோளைத் தட்டி அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். கலைச்செல்வனும் கூடவே புறப்பட்டார். விஜயாவும் கலைச்செல்வனும் இணையாக நடந்தார்கள்.
(தொடரும்)