
‘‘நான் சொல்றதை கவனமா கேட்டுக்க தேவா! நம்ம ஏரியா குறுக்குத் தெருவில ஒதுக்குப்புறமா ஒரு புது பங்களா இருக்கு. அக்கம்பக்கம் வீடுகள் இல்ல... வயசானவங்க ரெண்டு பேர் மட்டும்தானாம். பசங்க வெளிநாட்ல இருக்காங்களாம். பணம், நகைன்னு செமத்தியான வசதின்னு கேள்விப்பட்டேன். நமக்கு ஏத்த இடம்! ஆனா பாதுகாப்புக்கு வீட்ல நாய் வளக்கறாங்க... நீதான் சமாளிக்கணும். நாய் நம்ம தொழிலுக்கு எதிரிதான்; அதேபோல பயமும் தயக்கமும்! தைரியமா போ... வேலையை முடிச்சிட்டு வா! புரிஞ்சுதா?’’
துரையின் பேச்சுக்கு தலையாட்டி விட்டுக் கிளம்பினான் தேவா. கேட் வாசலில் தயங்கிநின்ற தேவாவைப் பார்த்ததும் நாய் குரைக்க ஆரம்பித்தது. வியர்வையைத் துடைத்தபடி அக்கம்பக்கம் பார்த்தவன், சுவரைத் தாண்டிக் குதித்தான். சத்தம் கேட்டு கதவைத் திறந்த பெரியவர் சுதாரிப்பதற்குள் வீட்டுக்குள் நுழைந்தான். திகைத்து நின்ற பெரியவரிடம், ‘‘பயப்படாதீங்க!’’ என்றபடி தன் பையைத் திறந்தான். ‘‘இந்த ஏரியாவில திருட்டு அதிகம் நடக்குதுன்னு கேள்விப்பட்டிருப்பீங்க! இதப் பாருங்க... உங்க பாதுகாப்புக்காக இந்த அலாரம் கருவியை நாங்க விக்கறோம். இதை வாங்கிப் பொருத்திட்டீங்கன்னா, திருட்டு பயமில்லாம நிம்மதியா இருக்கலாம்’’ என்று பதற்றம் அடங்காத குரலில் பேச ஆரம்பித்தான் தேவா.