
தேர்வு முடிந்து பள்ளி தொடங்கியது. திருத்திய விடைத்தாள்களைக் கொடுத்தார் கணித ஆசிரியர் கனகராஜ். மாணவர்கள் ஆவலுடனும் பரபரப்புடனும் புரட்டிப் பார்த்தனர். ‘‘சார், சரியான விடை எழுதி இருக்கேன். இந்தக் கணக்குக்கு மார்க்கே போடலை...’’ என்றபடி ஒருவன் ஓடிவந்தான். ‘‘திருத்தி முடிச்சிட்டா, மறுபடி கைவைக்க மாட்டேன்... போ!’’ ‘‘அடுத்தவன் எழுந்தான். ‘‘சார்! எட்டாவது கேள்விக்கு மொத்தம் பத்து மார்க்... நீங்க ஆறுதான் போட்டிருக்கீங்க!’’‘‘போட்டா போட்டதுதான்... அதற்கு மேல் போடமுடியாது. உட்கார்!’’ இன்னொருவன் தயங்கியபடி வந்தான். ‘‘சார்! டோட்டல் மிஸ்டேக்... கூட்டினா அரை மார்க் அதிகம் வருது.’’ ‘‘நான் போட்டா போட்டதுதான். மறுபடி போடமுடியாது!’’ மற்றவர்களும் ஏமாற்றத்துடன் வாய்மூடிக் கொண்டனர். ஞாயிறு விடுமுறையில் கணித ஆசிரியர் கனகராஜ் திருப்பதி சென்றார். தரிசனம் முடித்து சுற்றி வரும்போது, பணத்தை உண்டியலில் போட்டதும், ‘‘ஐயோ... போச்சு!’’ என்று அலறினார். அருகில் இருந்தவர்கள் விசாரிக்க, ‘‘உண்டியலில் நூறு ரூபாய் போடுவதற்குப் பதில் ஆயிரம் ரூபாய் நோட்டைப் போட்டுட்டேன்’’ என்றார். ‘‘அடடா! போட்டா போட்டதுதான்... ஒண்ணும் செய்யமுடியாது. கோவிந்தா... கோவிந்தா...’’ என்றபடி அவர்கள் சென்றனர். கனகராஜுக்கு ‘சுரீர்’ என்றது.