திருப்புமுனை : த.செ.ஞானவேல்





‘‘ஒரு முதியோர் இல்லம் தோன்றினால் 100 கூட்டுக் குடும்பங்கள் சிதைகின்றன. முதியோர் இல்லம் தோன்றாமல் தடுப்போம்னு 35 வருஷத்துக்கு முன்னால பிரசாரம் பண்ணி இருக்கேன். இப்போ வீடுகளைவிட முதியோர் இல்லங்கள்தான் பாதுகாப்பு. முதுமையில் தனிமையாக இருக்காமல், பலருடன் சேர்ந்து வாழும்போது ஆரோக்கியமாக இருக்கின்றனர். ‘நகரங்களில் மட்டும்தான் இப்ப முதியோர் இல்லங்கள் இருக்கு. கிராமங்களிலும் முதியோர்களைப் பராமரிக்கிற இல்லங்கள் வேண்டும்’னு இப்ப பிரசாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். காலம் எத்தனை எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்கிறது?’’ என்று சிரிக்கிற மருத்துவர் வி.எஸ்.நடராஜன், ஆசியாவின் முதல் முதியோர் நல மருத்துவ நிபுணர். இந்தியாவிலேயே முதன்முதலில் ‘முதியோர் நல மருத்துவம்’ என்கிற சிறப்புத் துறையை உருவாக்கியவர். எதையும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகிற ‘யூஸ் அண்டு த்ரோ’ காலத்தில், பாரமாக பார்க்கப்படும் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்ததும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்காக பணிபுரிந்து வருவதும்தான் வி.எஸ்.நடராஜனின் பெருமை. முதியோர் மீதான அவரின் அக்கறைக்கு அங்கீகாரமாகி இருக்கிறது பத்மஸ்ரீ விருது.


‘‘ஈரோடு மாவட்டத்தில், 50 குடும்பங்கள்கூட இல்லாத வள்ளலார்புரம் என்கிற சின்ன கிராமம் சொந்த ஊர்.  அப்பா, பெரியப்பா என கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவன். பெரியவங்களைப் பார்த்தா எழுந்து நிற்க வேண்டும் என்பதை எங்களுக்கு யாருமே சொல்லித் தரலை. பெரியவர்களைக் கண்டால் அப்பா எழுந்து நின்று பேசுவதைப் பார்க்கிற சின்ன பிள்ளைகளுக்கு முதியவர்கள் மீது மரியாதை வந்துவிடும். பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவதிலிருந்து சிறுவர்களுக்கு பால பாடம் ஆரம்பிக்கும். ஒருவர் மாற்றி இன்னொருவர் கவனித்துக் கொள்ளும்போது முதியவர்கள் பாரமாக இல்லாமல் இருந்தார்கள். இதைப் பார்த்து வளர்ந்ததால், இயல்பாகவே எனக்குப் பெரியவர்கள் மீது தனிப்பட்ட மரியாதையும் அக்கறையும் இருக்கும். 


பள்ளிப்படிப்பை அந்தியூரில் முடித்துவிட்டு, காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.யூ.சி படிக்கச் சேர்ந்தேன். அதுதான் எனக்கு முதல் வெளியூர் வாசம். அங்குதான் என்னுடைய முதல் தோல்வி. ‘நல்லா படிப்பான் நடராஜன்’ என்று பேர் எடுத்து அந்தியூரில் முதல் மாணவனாக இருந்தவன், பி.யூ.சி படிப்பில் ஃபெயில் ஆனேன். அவமானமும் அதிர்ச்சியும் என்னை நிலைகுலைய வைத்தன. திருச்சி போய் டுட்டோரியலில் சேர்ந்தேன். பி.யூ.சி. படிப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போனாலும், எல்லா பாடத்தையும் மறுபடியும் எழுத வேண்டும். வெறித்தனமாக மூன்று மாதம் படித்தேன். ஒரு வருஷம் முழுவதும் முயற்சித்தும் முடியாமல் ஃபெயிலான படிப்பை, மூன்றே மாதத்தில் படித்து எழுதி எல்லா பாடத்திலும் சிறப்பு நிலையில் தேர்ச்சி பெற்றேன். என் பலம் அப்பதான் எனக்குப் புரிஞ்சது. வாழ்க்கையில் இப்படி முதன்முதல் இலக்கு வைத்து முயற்சி செஞ்சது, தோல்வியிலிருந்து மீள்வதற்குத்தான்.



நல்ல மதிப்பெண் இருந்தாலும், என்ன படிப்பது என்கிற தெளிவில்லை. வேளாண்மை அறிவியல், விலங்கியல் மருத்துவம், மருத்துவம் என மூன்று படிப்புகளுக்கும் விண்ணப்பித்தேன். முதலில் வேளாண்மை அறிவியல் படிக்க கோயம்புத்தூரில் இடம் கிடைத்ததும் சேர்ந்துவிட்டேன். பிறகு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. எங்கள் பகுதியிலிருந்து மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த முதல் ஆளாக இருக்கவே, மருத்துவம் படிக்கலாம் என்று தஞ்சாவூர் கிளம்பினேன். அப்போது தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்களோ வசதிகளோ இல்லை என்பது பணம் கட்டி சேர்ந்த பிறகுதான் தெரிந்தது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மதுரை மருத்துவக் கல்லூரியில் போய் படித்தோம். மாற்றாந்தாய் பிள்ளைகளைப் போன்ற உணர்வு எப்போதும் இருக்கும். எல்லாவற்றிலும் முன்னுரிமை மதுரை மாணவர்களுக்கே இருக்கும். சிறந்த பேராசிரியர்கள் அவர்களுக்கு வகுப்பெடுக்க, பயிற்சி பெறும் பேராசிரியர்கள் எங்களுக்கு வகுப்பெடுப்பார்கள். தன் முயற்சி இருந்தால் மட்டுமே படித்துத் தேர்ச்சி பெற முடியும். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றதும், தஞ்சாவூரில் பயிற்சி மருத்துவராக பணியாற்ற உத்தரவு வந்தது. அங்கு ஆபத்பாந்தவனாக இருந்தார் மருத்துவர் அமரேசன். சின்ன மருத்துவமனையிலும் அர்ப்பணிப்போடு எப்படி வேலை செய்வது என்ற பாடத்தை அவர் போதித்தார். கண்காணிப்பு சூழல் இல்லாத போதிலும், தன்னார்வத்தோடு வேலை பார்த்தார் அவர். ஈடுபாட்டோடு அவர் வேலை செய்வதைப் பார்த்து, எனக்கும் அந்தப் பழக்கம் வந்தது. சிறந்த மருத்துவராக வேண்டுமானால், மருத்துவமனையில் அதிக நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்பது பயிற்சியாக மாறியது. கவனச் சிதறல் இல்லாமல் வேலை செய்கிற என்னை அவருக்குப் பிடித்துப்போனது. எம்.டி. மருத்துவப் படிப்பில் சேர, மேலும் ஒரு வருடம் ‘சீனியர் ஹவுஸ் சர்ஜனாக’ பணியாற்ற வேண்டும். சென்னை மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவத்துறையில் பேராசிரியராக இருந்த அண்ணாமலைக்கு சிபாரிசுக் கடிதம் தந்து, என்னை சென்னைக்கு பஸ் ஏற்றி விட்டார் அமரேசன். அந்தப் பயணம் என்னுடைய அடுத்த திருப்புமுனை.

வார்டு எண் 5. சென்னை மருத்துவக் கல்லூரியின் இந்த வார்டில்தான் என் ஆயுளில் பெரும்பகுதி கழிந்தது. சேர்ந்த நாள் முதல், ஓய்வுபெறும் வரையில் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்த வெகு சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன். அண்ணாமலையிடம் வேலை பார்ப்பது எளிதான காரியம் இல்லை. எங்களுக்குக் கற்றுத் தர அவர் நிறைய படிப்பார். இரவு 11 மணிக்குத்தான் மருத்துவமனையிலிருந்து கிளம்பியிருப்பார். காலை 4 மணிக்கு அவசரம் என்றால், சலிப்பில்லாமல் எழுந்து வருவார். இத்தனைக்கும் அவர்தான் துறையின் தலைவர். மாணவர்கள் நாங்கள் சோர்ந்து போவோம்; அவர் உற்சாகமாக வேலை செய்வார். கொடுத்த வேலையை முடிக்காமல் போனால் கோபத்தில் திட்டித் தீர்த்துவிடுவார். கருத்தரங்கில் கலந்து கொண்டு, பிரமாதமாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்திருப்போம். எல்லோரும் பாராட்டுவார்கள். ‘என் மானத்தை வாங்கிட்டே’ என்று திட்டி, நாங்கள் சொல்லாமல் விட்ட பகுதிகளை எடுத்து விளக்குவார் அண்ணாமலை. ‘நான் திட்டினாதான், மத்தவங்க பாராட்டுற மாதிரி இருப்பீங்க’ன்னு சொல்வார். அன்பும், கண்டிப்பும் கலந்த துறையின் தலைவரிடம் கடுமையாக உழைக்கத் தயாராக இல்லாதவர்கள் மூன்று மாதத்தில் ஓடிவிடுவார்கள். ஆனால், என்னை அவருடைய மாணவராகவே எம்.டி. படிக்க அனுமதி தந்தார். சிறப்பு நிலையில் எம்.டி. பொது மருத்துவப் படிப்பையும் முடித்தேன்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முதல் அரசு வேலை. 15 மணி நேரம் வேலை பார்த்துப் பழகிய எனக்கு அங்கு 4 மணி நேரம்கூட வேலை இருக்காது. வாழ்க்கையில் செட்டிலாகிவிட்ட உணர்வு வந்தது. திருமணம் செய்ய வீட்டில் முடிவெடுத்தார்கள். மருத்துவருக்கு மனைவியாகிறவருக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பதும், பொறுமையும் இரண்டு அடிப்படைத் தகுதிகளாகும். இறைவன் அருளால், என்னுடைய வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் அம்சங்கள் நிறைந்த அம்சவேணி மனைவியாக அமைந்தார். ஈரோட்டிலேயே அப்போது எம்.டி படித்தவர் ஒருவர்தான் இருந்தார். சொந்த ஊருக்குப் போய்விடலாம் என்ற முடிவோடு, மாறுதல் வாங்கித் தர உதவுமாறு அண்ணாமலையைப் பார்த்துக் கேட்டேன். சிபாரிசுக் கடிதம் எழுதித் தந்தார். நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பியவனை, ‘நல்லா பண்றே. என்கிட்டேயே சேர்ந்து வேலை பாரேன்’ என்றார். அண்ணாமலை ஒருவரைப் பார்த்து, ‘நல்லா பண்றே’ என்று சொல்லிவிட்டால் அதுவே இன்னொரு டாக்டர் பட்டம் வாங்கியதற்கு சமம். சென்னை மருத்துவக் கல்லூரியில் வேலை கிடைப்பது எளிதல்ல. அவர் கேட்டபோது அங்கு காலி இடம் ஏதுமில்லை. அவருடைய பகீரத முயற்சிக்குப் பிறகு எனக்கு வார்டு எண் 5ல் இணைப் பேராசிரியராக வேலை. என்னுடைய அடுத்தடுத்த வாசல்களையும் அவரே திறந்து வைத்தார்.

‘சும்மா இங்கேயே சுத்திட்டிருந்தா எப்படி? வெளிநாடு போய் படித்து நிபுணர் ஆக வேண்டாமா?’ என்று கேட்டார். ‘ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட், கிட்னி ஸ்பெஷலிஸ்ட்னு காசு சம்பாதிக்கிற படிப்பா பார்க்காம, மத்தவங்க செய்யாததா, எடுக்காத விஷயமா தேடிப் படி’ என்று தன் எண்ணங்களால் என்னைத் தூண்டினார். ‘ஜீரியாட்ரிக்ஸ்னு முதியோர் மருத்துவம் பற்றிப் படி. நல்லா வருவே’ என அவர் சொல்லும் வரை, எனக்கு ‘ஜீரியாட்ரிக்ஸ்’ என்ற வார்த்தைகூட தெரியாது. மருத்துவமனைக்கு முதியவர்கள் வந்தால் நான் அக்கறையோடு கவனிப்பதைப் பார்த்திருக்கிறார். குறைந்த எண்ணிக்கை படுக்கைகள் இருந்ததால், முதியவர்களை ‘பாய் போட்டு’ கீழே படுக்க வைத்துவிடுவார்கள். அதை அனுமதிக்க மாட்டேன். ‘சரியாகிவிட்டது. டிஸ்சார்ஜ் செய்துவிடலாம்’ என்று அண்ணாமலை சொன் னாலும், எனக்கு நம்பிக்கை வரும்வரை வீட்டிற்கு அனுப்பமாட்டேன். இதையெல்லாம் கவனித்துத்தான், ‘மூப்பியல் நிபுணர்’ படிப்பை எனக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். விசாரித்தபோது, ஆசியாவிலேயே அதுவரை முதியோர் மருத்துவம் யாரும் படிக்கவில்லை என்று தெரிந்தது. ஐரோப்பாவில், அதிலும் இங்கிலாந்தில்தான் இந்தத் துறை பிரபலமாக இருந்தது. மூன்று மருத்துவ பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்தேன். ஆனால் மிகக்குறைவான இடங்களே இருந்ததால், நம்பிக்கை குறைவாகவே இருந்தது. ‘முதியோர் மருத்துவம் படித்து என் நாட்டிற்குத் திரும்பி வந்து பணியாற்ற வேண்டும்’ என்ற என் விருப்பத்தினை கடிதமாக எழுதி விண்ணப்பத்தில் இணைத்திருந்தேன். சவுதாம்ப்டென் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் புகழ்பெற்ற மூப்பியல் நிபுணர் மைக்கேல் ஹால் என்பவர் தலைவராக இருந்தார். என்னுடைய கடிதத்தைப் படித்து விட்டு, எனக்கு சீட் கொடுத்தார். இரண்டு வருட பயிற்சி கிடைப்பதே கஷ்டம் என்று இருந்த நிலையில், சிறப்பு அனுமதி பெற்று நான்கு வருடப் பயிற்சிக்கு அனுமதி அளித்திருந்தார். ‘லெட்டர் மாறி வந்திருக்கு போல... சீனியருக்குத்தான் நாலு வருட வாய்ப்பு கிடைக்கும்’ என்றார் அண்ணாமலை. விசாரித்தபோது எனக்குத்தான் அந்த அனுமதி என்று பதில் வந்தது. யாருமே நம்ப மறுத்த, கடவுளின் கருணை அது. இரண்டு வருட விடுமுறைக்கே சம்பளம் இல்லை. அனுமதி வாங்கவும் கடினமாக இருந்தது. நான்கு வருடப் பயிற்சிக்கு விடுமுறை இல்லை என்று அனுமதி மறுத்தார்கள்.
(திருப்பங்கள் தொடரும்...)
படங்கள்: புதூர் சரவணன்