காலடியில் காத்திருக்கும் மரணம்...





இந்தியா தொடங்கி கனடா, யுகே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், இத்தாலி, ஹாலந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் ஒரே நேரத்தில் ஒரு தமிழ்ப்படம் ரிலீசாகிறது என்றால் கொஞ்சம் நிமிர்ந்து உட்காரத் தோன்றுகிறதா..? அப்படியென்றால் அந்தப் படத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். மிஸ்டிக் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘மிதிவெடி’தான் அந்தப் பெருமையைப் பெற்ற படம். இந்தப் படத்தை நண்பர்களுடன் இணைந்து தயாரித்து, இயக்கியிருக்கும் ஆனந்த் மையூர் ஸ்ரீனிவாஸ் ஆஸ்திரேலியா வாழ் தமிழர். கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்ற போரின்போது இலங்கை மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணிவெடிகளைப் பற்றிப் பேசுகிறது படம். ஆஸ்திரேலியாவில் ஃபிலிம் மேக்கிங் படித்து, இப்போது முழுநேர சினிமாக்காரராக மாறியிருக்கும் ஆனந்த் பேசினார்.

‘‘உலகத்துல இன்னைக்கு போரை சந்திச்ச பூமிகள்ல எல்லாம் மனிதர்களுக்கு இருக்கிற ஒரு சவால் நிலக்கண்ணிவெடிகள்தான். கடந்த வருடங்கள்ல ஆஸ்கர்ல கூட இப்படி கண்ணிவெடிகளை மையமா வச்ச ‘நோ மேன்ஸ் லேண்ட்’, ‘ஹர்ட் லாக்கர்’ மாதிரியான படங்கள் கவனத்தைக் கவர்ந்து ஆஸ்கர் வாங்கின. நமக்கு நல்லாத் தெரிஞ்ச இலங்கை மண்லயும் இப்படி மனிதர்கள் காலடியில காத்திருக்கிற மரணங்கள் பற்றிப் படமெடுக்கணும்னு எனக்கு தோணிச்சு. இலங்கைப்படம்னாலே அரசியல் பின்னணி வந்துடும். ஆனா முதல்முறையா அரசியலை மையப்படுத்தாம அந்த மண்ணுக்கே உரிய மொழிகளான இலங்கைத்தமிழ், சிங்களம்னு ரெண்டு மொழிகளை முன்வச்சு வர்ற படம் இது. காடுகள், விளைநிலங்கள், ஊர்கள்னு அங்கே பதிச்சு வைக்கப்பட்டிருக்க மிதிவெடிகள் பத்து லட்சம் இருக்கும். இதுதான் இனி இலங்கையின் மிகப்பெரிய பிரச்னையா இருக்கும். அதை அகற்ற தனிப்பயிற்சி பெற்றவங்
களாலதான் சாத்தியம். முப்பது மீட்டர் சுற்றளவில வெடிகளை அகற்றவே எட்டு மணி நேரம் பிடிக்கும். இந்தக் கணக்குல முழுதும் அகற்ற பத்தாண்டுகளுக்கும் மேல ஆகலாம். அது பற்றிய விழிப்புணர்வைத்தான் இந்தப்படம் தரும்.

இதை உள்ளே வச்சு தர்க்க ரீதியா ஒரு கதையை ஒன்றரை மணிநேரம் சொல்லியிருக்கேன். இதுல சிங்கள சிப்பாயா நடிச்சிருக்க டேனியல் பாலாஜியோட ஒத்துழைப்பு படத்துக்கு பெரிய பலம். சிங்கள மொழியைக் கத்துக்கிட்டு அவராகவே பேசியதோட, எங்க ஷூட்டிங்குக்கும் உறுதுணையா இருந்தார். நீலிமா ராணி தமிழ்ப்பெண்ணா நடிக்க, யாழ்ப்பாணத்திலேர்ந்து புலம்பெயர்ந்த 73 வயசு விவசாயி ஈழம் கைலாசம்ங்கிறவர் நடிச்சிருக்கார். இசையை அருணகிரி கவனிக்க கருப்பையா அற்புதமான ஒளிப்பதிவைத் தந்திருக்கார். என்னோட சேர்ந்து திரைக்கதையை எழுதிய ஹாலிவுட் எழுத்தாளர் அர்மேன்டோவோட முயற்சியால ஹாலிவுட்டுக்கும் போகுது நம் தமிழ்ப்படம்..!’’
 ஜி