கிணத்தைக் காணோம்னு ஒரு கம்ப்ளைண்டு!





‘‘ஐயா, இங்க இருந்த கிணத்தைக் காணலை... கண்டுபிடிச்சுக் கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும்!’’ என்று போலீசில் புகார் கொடுத்து அலப்பறை பண்ணுவாரே வடிவேலு... அதே காமெடிதான்! நிஜத்தில் நடந்திருக்கிறது... கரூர் அருகே!

‘‘ஐம்பது வருஷத்துக்கும் மேல பயன்பாட்டுல இருந்த கிணறுங்கய்யா... 46 அடி ஆழத்துல 35 அடிக்கு தண்ணீர் இருந்த கிணறு... இப்போ தொலைஞ்சு போச்சுங்கய்யா!’’ என்று வடிவேலு தொனியிலேயே கிச்சுக்கிச்சு மூட்டுகிறது இந்த ஒரிஜினல் புகார்! கிணறு எப்படித் தொலையும்? புகார் அளித்திருக்கும் வெங்கமேடு ஊர்ப் பொதுநலக்குழுவின் அமைப்பாளர் குமணன் விளக்குகிறார்...



‘‘ஆரம்பத்துல ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு சொந்தமான சுடுகாட்டை ஒட்டி இருந்துச்சு அந்தக் கிணறு. கிணறு இருக்கற இடம் இப்பவும் அரசு புறம்போக்கு இடம்தான். போகப் போக... சுடுகாடு, அதை சுத்தி இருந்த இடங்கள்னு எல்லாமே குடியிருப்புகளாயிடுச்சு. நல்ல சுவையோட இருந்ததால அந்தக் கிணத்து தண்ணியைத்தான் குடிச்சாங்க மக்கள். ரெண்டு பக்கமும் வரிசையா நின்னு தண்ணி இறைக்க வசதியெல்லாம் அமைச்சு நல்லபடியா பயன்படுத்திக்கிட்டு இருந்தப்பதான் அந்த சம்பவம் நடந்துச்சு. யாரோ சிலர் ஒருத்தரைக் கொலை பண்ணி பொணத்தை கிணத்துல போட்டுட்டுப் போயிட்டாங்க. அடுத்து சொல்லி வச்சாப்ல தொடர்ந்து ரெண்டு தற்கொலைகள்... இவ்வளவு போதாதா? ‘சுடுகாட்டுக் கிணறுங்கிறதாலதான் இப்படி நடக்குது’ன்னு மக்கள் பயந்து அந்தக் கிணத்தைப் பயன்படுத்தறதையே நிறுத்திட்டாங்க.

இது நடந்து ஆகிடுச்சு 5 வருஷம். இப்ப திரும்பவும் அந்தக் கிணத்தைப் பயன்படுத்த இங்க இருக்கற சுமார் 300 குடித்தனக்காரங்களும் யோசிச்சோம். ‘கிணத்தை ஒட்டி குடியிருப்புக்கு பொதுவா இருக்கற இடத்துல ஐயப்பன் கோயில் கட்டி கும்பிட்டா, இனி பிரச்னைகள் வராது’ன்னு எங்க பகுதி மக்கள் நம்பிக்கையோட சொன்னாங்க. சரின்னு அதுக்கான வேலைகளைத் தொடங்கிட்டோம். கிணத்துக்கு இன்னொரு பக்கம் காலி இடம் வச்சிருந்த ஒருத்தர், அந்த இடத்தைப் பிளாட் போட்டு விக்க விரும்பியிருக்கார். கிணறு இருக்கற வரைக்கும் இடத்தை விக்க முடியாதுன்னு அவரோட ஆளுங்க வேலி போட்டு மறைச்சுட்டு, ராத்திரியோட ராத்திரியா மண் அடிச்சு கிணத்தை மூடியிருக்காங்க. அங்க திடீர்னு கட்டிடம் கட்ட ஆரம்பிச்சப்பதான் எங்களுக்கு கிணறு ஞாபகத்துக்கு வந்தது. போய்ப் பார்த்தா, கிணத்தையே காணலை.

நாங்க போய் கேட்டதுக்கு, ‘இந்த இடம் எங்களோடது; இங்க கிணறே இல்லை’ன்னு சொன்னாங்க. இனியும் பேசாம இருக்கறது நல்லதில்லைன்னு நாங்க கோர்ட்டுக்குப் போனோம். அதுக்கப்புறம்தான் அதிகாரிகள் வந்து விசாரிச்சு, கிணறுஇருந்ததை உறுதிப்படுத்துனதோட, மேற்கொண்டு இந்த இடத்துல எந்த வேலையும் நடக்கக் கூடாதுன்னு கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வச்சிருக்காங்க’’ என்று மொத்தக் கதையையும் சொல்லி முடித்தார் குமணன். கரூர் ஆர்.டி.ஓ. சாந்தியிடம் பேசினோம்... ‘‘எதிர்த்தரப்பு, அந்த இடத்துக்கு பட்டா வாங்கிட்டதாகவும், ‘குடியிருப்புக்கு பக்கத்துல பயன்படாத கிணறு இருக்கறது ஆபத்து’ன்னு மூடினதாவும் சொன்னாங்க. அரசு ஆவணங்களின்படி, கிணறு புறம்போக்கு நிலத்துலதான் இருக்குங்கிறதை கண்டுபிடிச்சிட்டோம். அதை மூடணும்னா எங்ககிட்டதான் தெரிவிக்கணும். யாரும் நினைச்சபடி பண்ணிட முடியாதுன்னு சம்பந்தப்பட்டவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கோம். தவிர, கிணத்துக்குப் பக்கத்துல மக்கள் அதிகமா கூடற கோயில் கட்டறதையும் சேர்த்தே நிறுத்தி வச்சிருக்கோம். கிணறு திரும்ப வேணுமா இல்லையாங்கிறதை, சம்பந்தப்பட்ட மக்கள்கிட்ட பேசி முடிவு பண்ணணும்’’ என்றார் அவர். எப்படியோ, இப்போதைக்கு கிணறு இருந்த இடத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கிணறு கிடைக்க கொஞ்ச நாள் ஆகும் போல!

 அய்யனார் ராஜன் படங்கள்: சோமசுந்தரம்