அஜித்தின் அதிரடி திட்டம்!





‘கர’ வருடம் முடிந்து தொடங்கும் வருடத்தை ‘தல’ வருடமாக அஜித் ரசிகர்கள் கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், அடுத்தடுத்து அஜித்தின் நான்கு படங்கள் இடைவெளியில்லாமல் வரும் வருடங்களை ஆக்கிரமிக்க இருப்பதுதான். ‘பில்லா 2’வில் அஜித் நடித்த பகுதிகளின் ஷூட்டிங் மொத்தமாக முடிவடைந்துவிட்டது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில், அஜித்தின் பிறந்த நாள் வரும் மே மாதத்தில் படத்தை வெளியிடத் திட்டம் வைத்திருக்கிறார்கள். இருந்தும், படத்தின் நேர்த்திக்காகக் கூடுதல் காலம் செலவாகி ரிலீசுக்கு மேலும் ஒரு மாதம் பொறுத்திருக்க நேர்ந்தாலும் தல ரசிகர்கள் சோர்ந்து விடப்போவதில்லை. ‘பில்லா’வில் வெகு சாமானியனின் வாழ்க்கையில் பொருந்தி அஜித் நடித்திருக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தை அவர்கள் கொண்டாடப் போவது நிச்சயம். ‘கொட்டக் கொட்ட புழுவும் குளவியாகும்’ என்கிற உயிரியல் தத்துவத்தின்



அடிப்படையில், வாழ்க்கை துவைத்தெடுக்கும்போது அஜித் அதிலிருந்து மீண்டு ‘பில்லா’ என்கிற டான் ஆவதுதான் கதை. படத்தின் டப்பிங் வேலைகள் மட்டும் அவருக்காக எஞ்சியிருக்க, அதை முடித்த கையோடு ஏப்ரலிலேயே இயக்குநர் விஷ்ணுவர்த்தன் படத்தின் போட்டோ ஷூட் முடித்து அந்தப் படத்துக்குத் தயாராகிறார். ‘பில்லா’வில் வாட்டமான கெட்டப்புக்காக இளைத்து, பின்னர் பில்லா ஆனவுடன் அந்தக் கேரக்டருக்காகக் கொஞ்சம் சதை போட்டுத் தெரிந்தவர், மீண்டும் விஷ்ணுவர்த்தன் படத்துக்காக உடல் இளைக்கும் வேலையில் இருக்கிறார். தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஆகஸ்டில் முடித்து, செப்டம்பரில் விஜயவாஹினிக்காக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் அவர். அதற்கடுத்த படமாக மீண்டும் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்கும் திட்டம் வைத்திருக்கும் அவர், அதற்காக வெங்கட்பிரபுவிடம் கதை கேட்டிருக்கிறார். ஆக, அஜித் அடுத்தடுத்துக் கொடுக்க இருக்கும் இந்த அதிரடியான படங்களால் அவர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்கப்போவது நிச்சயம்.
 வேணுஜி