முழுதாக 2 மணிநேரங்கள்





ஒரு அழகான இரவு வேளையில் என் அன்பு மனைவி என்னிடம் இப்படிக் கேட்டாள்.
மனைவி: உங்களுக்கு என்மேல் பாசம் இருக்கா?
‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்று சொல்லக்கூடிய தைரியசாலி, புத்திசாலி மற்றும் நெஞ்சுரமிக்க ஆண்மகன் இந்த உலகில் இதுவரை பிறக்கவில்லை... இனிமேலும் பிறக்கப்போவதில்லை என்பதை ஆணித்தரமாக தெரிந்து வைத்திருக்கும் என் மனைவியிடம் நான் தைரியமாகவும், மென்மையாகவும் சிரித்துக் கொண்டும் கூறினேன்...

நான்ம்
அவளுக்கு இந்த தைரியம் மிக்க பதில் போதவில்லை என்பது, அவள் நெற்றியில் விழுந்த சுருக்கத்தைப் பார்த்தபோதே புரிந்தது.
மனைவி: என்னை உங்களுக்கு
எவ்வளவு பிடிக்கும்?
சிரிக்காமல் கேட்டாள்.
இந்தக் கேள்வியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பயந்து போன நான், அந்த பீதியை இயன்ற அளவுக்கு என் முகத்தில் காட்டாமல் மறைக்க பிரயத்தனப்பட்டபடி, கிழக்குப் பக்கமாக ஒரு கையையும், மேற்குப்பக்கமாக ஒரு கையையும் நீட்டியபடி விரித்துக் காட்டினேன்.
நான்: இவ்வளவு பிடிக்கும்.
என்னதான் நான் சிரித்துக் கொண்டே கூறினாலும், அதில் ஒளிந்திருந்த கள்ளத்தனமான பயத்தை அவள் கண்டுபிடித்து விட்டாள் என்றே கூற வேண்டும். இதுதான் சரியான தருணம் என்று நினைத்தாளோ என்னவோ... அந்த பிரம்மாஸ்திரத்தை பிரயோகப்படுத்தினாள்.

மனைவி: அது உண்மைன்னா நீங்க ஏன் எனக்கு 5 பவுன்ல ஒரு நெக்லஸ் வாங்கித் தரக்கூடாது?
அவள், என் மேல் இருந்த பார்வையை அகற்றவே இல்லை. முழுதாக 2 நிமிடங்களுக்கு! சில சமயங்களில் மட்டும் இவ்வாறு நிகழ்ந்து விடுவது உண்டு. அதாவது, என்ன விதமாக ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருப்பேன். சென்ற வாரம் பிய்ந்து போன எனது செருப்பை தூக்கிப் போட்ட குப்பைக் கூளங்களிலிருந்து தேடிப் பிடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது உபயோகித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

என் மனைவி தலை வலிக்கிறது என்று சொல்லிவிட்டுப் போய் படுத்திருக்கலாம்; அல்லது தொலைக்காட்சியில் சீரியல் பார்க்க ஆரம்பித்திருக்கலாம்; அல்லது எனது மொபைல் போனை எடுத்து யார் யாரிடம் எல்லாம் பேசியிருக்கிறேன், எவ்வளவு நேரம் பேசியிருக்கிறேன் என உளவு வேலையில் ஈடுபட்டிருக்கலாம்; அல்லது எனது சட்டையில் வேறு ஏதேனும் பெர்பியூம் வாசனை அடிக்கிறதா என முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம்; அல்லது, என்னை தோசை சுட வைத்து ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு இப்படி ஒரு கேள்வி கேட்கிறாள் என்றால், விஷயம் இல்லாமல் இல்லை.

ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு சவால் விடும் விதத்தில் எனது அரியர்ஸ் பணம் வந்தடைந்த செய்தி எந்த உளவாளியின் மூலம் என் மனைவியின் காதுகளுக்கு எட்டியது என்பதுதான் இன்னும் எனக்குப் புரிபடவில்லை. அவள் 5 பவுன் என்று குறிப்பிட்டுக் கூறுகிறாள் என்றால், அதில் ஏதேனும் விஷயம் இருக்குமே என்று கணக்கிட்டுப் பார்த்ததில், சரியாக எனக்கு வந்த 1 லட்சத்து 40 ஆயிரத்து சொச்சம் தொகையில் அன்றைய தேதிக்கு சரியாக 5 பவுன்தான் வாங்க முடியும். எரியும் நெருப்பில் எண்ணெயை விடும்போது புரோகிதர் அடிக்கடி கூறும் அந்த வார்த்தை என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘ஸ்வாகா!’ 



அநேகமாக ஒன்றரை வருடத்துக்கு முன் வாங்கப்பட்ட எனது கறுப்பு ஷூவின் குதிக்கால் அடிப்பகுதி, 3 மாதங்களுக்கு முன் ஓரிடத்தில் கழன்று விழுந்துவிட்டது. ஒரு கால் நெட்டையாகவும், ஒரு கால் குட்டையாகவும் 16 வயதினிலே கமல் போல் கேந்தி கேந்தி நடக்கப் பிடிக்காமல் அதை உபயோகிப்பதையே விட்டுவிட்டேன். அன்றைய தினம் முதல் என் கனவுகளில் புதிய ஷூ ஒன்று அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கிறது. ‘நான் என்ன கனவில் வந்த காஜல் அகர்வாலையா கேட்டேன்? கேவலம், அந்தப் புதிய ஷூவை வாங்கக் கூட என் மனைவி எனக்கு அனுமதி அளிக்காமல் அரியர்ஸ் பணம் முழுவதையும் குறி வைத்திருப்பது சட்ட விரோதமானது. கண்டிக்கத்தக்கது’ என்று ஆவேசமாக காட்டுத்தனமாக எனக்கு மட்டும் கேட்கும்படி நான் கத்திக்கொண்டேன்.

ஷூ கூட பெரிதில்லை; எனது இரு சக்கர வாகனத்தின் நிலைமை இன்னும் மோசம். அதில் ஹாரன் அடிக்காததும் பரவாயில்லை; ஹெட்லைட் எரியாதது கூட ஓகே. கியர் சரியாக விழாவிட்டாலும்தான் என்ன? ஆனால், அந்த பிரேக் என்ற பகுதிதான் என்னை நிலைகுலைய வைக்கிறது. பிரேக் செயலிழந்து பல மாதங்கள் ஆவதால், அந்த வண்டியில் என் வேகம் 20 கி.மீயைத் தாண்டுவதில்லை.
இதைப் பார்த்து என்னை நிதானமான ஆள் என்று அக்கம்பக்கத்தினர் முடிவு செய்து விட்டனர். ‘அதோ பார்... எவ்வளவு பொறுப்பாக மெதுவாகச் செல்கிறார்’ என்று என் காதுபடவே பேசுகிறார்கள். யாராவது தெருவில் சைக்கிளில் போனால்கூட, என்னை உதாரணம் காட்டி பொறுமை காக்கச் சொல்கிறார்கள். எனக்குத்தான் தெரியும், வேகமாகப் போனால் என்ன ஆகும் என்று. அன்று ஒருநாள் எனது 6 வயது பெண் குழந்தையுடன் வீடியோ கேம் (பைக் ரேஸ்) விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வண்டியில் கூட நான் பிரேக்கையே பயன்படுத்தாமல் மெதுவாகத்தான் சென்று கொண்டிருந்தேன். என் சப்கான்ஷியஸ் மூளையில் இரு சக்கர வாகனம் என்றாலே அது பிரேக் பிடிக்காது என்றுதான் அர்த்தமாகியிருந்தது. ஏதோ, போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம்தான் என் மனைவியின் மாங்கல்யத்தையும் நெக்லஸையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

எங்கள் தெருமுனையில் உள்ள இருசக்கர வாகனங்களை பழுது பார்ப்பவர் (தமிழில், ‘டூவீலர் மெக்கானிக்’) என்னை தினசரி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த முறை அவருக்கு நான் வாய்ப்பளிக்கலாம் என்றிருந்தேன். அதற்கும் வழி இல்லாமல் செய்து விட்டாள் என் அன்பு மனைவி.

அன்று என் பெண் குழந்தை என்னைப் பார்த்து, “அப்பா... எப்படிப்பா ஒரு முள்ள வச்சு நேரம் பாக்குறீங்க? கஷ்டமா இல்ல?’’ என்கிறாள்.

ஆம். கடந்த 257 நாட்களாக என் கைக்கடிகாரத்தில் ஒரு முள்தான் இருக்கிறது. அந்த இரண்டாவது பெரிய முள் எப்படி, எப்பொழுது விழுந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அதான் சின்ன முள் இருக்கே என்று அதை வைத்தே சமாளித்துக் கொண்டிருந்தேன். புதிதாக ஒரு கைக்கடிகாரமாவது வாங்கிவிடலாம் என்று நான் மனப்பால் குடித்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பொழுது தான் புரிகிறது. ‘இவ்வளவெல்லாம் நீ ஆசைப்படலாமா?’ என்று யாரோ மண்டையில் நறுக்கென்று கொட்டியது போல் இருக்கிறது.

அன்று ஒருநாள் செய்தித்தாளில் வெளியாகியிருந்த அந்த செய்தியை என் மனைவியின் காதுபட சத்தமாகப் படித்தேன். அவள் எனக்காக ஒரு மோசமான காபி தயாரித்துக் கொண்டிருந்தாள்.
“பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 75 ரூபாயைத் தொட்டு விட்டது தெரியுமா?’’

அதற்கு பதிலாக, எதிர்த்த வீட்டு ராணியின் கணவன் மோகன் சமர்த்தாக பஸ்ஸிலும், நடந்தும் தினசரி அலுவலகம் செல்வதைப் பற்றி அரைமணி நேரம் சிலாகித்துக் கூறினாள் என் அன்பு மனைவி. பெட்ரோலுக்கு செலவழிக்கும் பணம் மிச்சமாம்; மேலும் சுகர், பிளட்பிரஷர் போன்ற வியாதிகள் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் உடலுக்கு வராதாம். தினசரி உடலுக்கு நடைப்பயிற்சியும் கிடைக்குமாம். என் உடல்நிலையில்தான் என் மனைவிக்கு எத்தனை அக்கறை!

நான் விரக்தியோடு கூறினேன், ‘‘பேசாம அந்த பைக்கை விற்றுவிட்டு உனக்கு ஒரு புது தங்க வளையல் வாங்குனா நல்லாருக்கும்னு எனக்குத் தோணுது...’’
என் அன்பு மனைவி சிரித்துக் கொண்டே, ‘‘ஐயோ... வேணாங்க! அந்த ஓட்டை உடைசல யார் வாங்கப் போறாங்க’’ என்றாள்.
எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அந்த பைக் ஒரு ஓட்டை உடைசல் என்று அவளுக்குத் தெரிந்திருக்கிறதே.

மேலும், எனது 12 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய டச் ஸ்கிரீன் செல்போனைப் பற்றிக் கூற வேண்டும். அது ஏதோ ஒரு வார இதழ் நடத்திய போட்டியில் பரிசாக கிடைத்தது. 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து நான் செல்போன் வாங்கியிருந்திருந்தால், அன்றைய தினம்தான் நான் உலகை வெறுத்து இல்லறம் துறந்த நாளாக இருந்திருக்கும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அப்படிப்பட்ட அந்த செல்போனில் ஒரு செயல் இதுவரை நடக்கவே இல்லை. அதாவது, அந்த செல்லுக்கு இதுவரை பல அழைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் அதிலிருந்து ஒரு அழைப்பு கூட சென்றதில்லை. காரணம், இதுவரை அதற்கு ரீசார்ஜ் செய்ய நான் அனுமதிக்கப்பட்டதில்லை.

நேற்று அந்த அற்புதம் நிகழ்ந்துவிட்டது. அந்த அரியர் பணத்திலிருந்து மிக தைரியமாக 75 ரூபாயை எடுத்து ரீசார்ஜ் செய்து விட்டேன். முதன்முதலாக என் நண்பனை அழைத்துப் பேசினேன். அந்த அற்புதத்தை நம்ப முடியாத அவன் வாயடைத்துப் போய் அமைதியாக இருந்துவிட்டான். நான் மட்டும் 2 நிமிடங்கள் பேசிவிட்டு வைத்து விட்டேன். இனி, எவனும் என் பெயருக்கு முன் ‘மிஸ்டுகால்’ என்கிற அடைமொழியைப் போட்டு அழைக்க முடியாது. அந்தப் பட்டப்பெயருக்கு நான் முற்றுப் புள்ளி வைத்துவிட்டேன்.

நான் சம்பாதிக்க ஆரம்பித்த அந்தக் காலத்திலிருந்தே, நான் வேலையை... சம்பாதிக்கும் வேலையை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறேன். செலவு செய்யும் ‘கடினமான’ பணியை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். என் அம்மா, அப்பா, மனைவி, என இது ஒவ்வொரு கையாக மாறி வந்துள்ளது. என் சம்பாத்தியம் கைக்கு வரும் முன்னால் அவர்கள் கணக்குப் போட ஆரம்பித்துவிடுவார்கள். என் குழந்தைக்கு இருக்கும் தைரியத்தைக் கூட நான் இழந்து விட்டேன். அவளுக்கு ஒரு பென்சில் வேண்டுமென்றால் யோசிக்காமல் சென்று தன் அம்மாவிடம், ‘‘எனக்கு ஒரு பென்சில் வேண்டும்’’ என்று மிகத் தைரியமாகக் கேட்பாள்.

அன்று ஒருநாள், எனது அன்பு மனைவி தனது 65வது சேலையை எந்த டிசைனில் வாங்குவது என்ற யோசனையில் செய்தி வாசிப்பாளினியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவளது கவனத்தைக் கலைத்த நான், எனது மானம் மறைக்கப்பட வேண்டியதன் கட்டாயத்தை உணர்த்தி, பிய்ந்து போன ஜிப்புக்கு மாற்று வழி என்ன என்று கேட்ட போது, அவள் முறைத்துப் பார்த்தாள்... முழுதாக இரண்டு நிமிடங்கள்...