கடவுள்



மாதவன் மிகவும் கோபப்பட்டார்.அவர் வீட்டின் வெளிச்சுவற்றில் சிறுநீர் கழித்த அடையாளம்! கடற்கரை ஓரத்தில் இருக்கும் அழகான வீடு அது. தெருவில் விளக்குகள் எரியாது என்பதால், கடற்கரைக்கு வரும் கூட்டம், இயற்கை உபாதைக்கு வீட்டு வெளிச்சுவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறது. இத்தனைக்கும் சற்று தூரத்தில் கழிப்பிடம் வேறு இருக்கிறது!‘மக்களுக்கு அறிவு இல்லையா?’ & மனதில் திட்டினார். குப்பென்ற நாற்றம் மூக்கைத் தாக்கியது.என்ன செய்யலாம்?

 மாதவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.அடுத்த நாள், பெருமாள், முருகன், வினாயகர் என்று கடவுள் உருவங்கள் வரையப்பட்ட டைல்ஸ்களை வாங்கி வந்து, சிமென்ட் தடவி, வெளிச்சுவற்றில் பொருத்தினார்.நான்கு வயது மகள் சுஷ்மா மாதவனிடம் ஓடி வந்தாள்.‘‘டாடி! கடவுள் ரொம்ப சக்திவாய்ந்தவர்; அவரை சுத்தபத்தமா இருந்து கும்பிடணும்னு நீங்கதானே எனக்குக் கத்துக் கொடுத்தீங்க... இப்ப நீங்களே சாமி படங்களை அசுத்தமான இடத்துல பொருத்தி இருக்கீங்களே?’’ & என்றாள் சுஷ்மா. மாதவனுக்கு சுரீரென்றது! அடுத்த நாள்...வெளிச்சுவற்றில் சாமி பட டைல்ஸ் மிஸ்ஸிங். அந்த இடத்தில், ‘இங்கு சிறுநீர் கழிக்காதீர்’ என்ற வாசகம் மட்டும் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தது!