ராசி கோயிலகள்



கும்ப ராசியில் மூன்று பாதங்களைப் பதித்த பூரட்டாதி நட்சத்திரம், கொஞ்சம் எட்டி தனது பக்கத்து வீடான மீன ராசியில் நான்காம் பாதத்தைப் பதிக்கிறது. மீன ராசியிலேயே குருவின் நட்சத்திரத்தைக் கொண்டது இந்த நட்சத்திரம்தான். பூரட்டாதியின் நான்காம் பாதம் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் திகழுமெனில் மிகையில்லை. மேலும் மீனத்திற்குள் வரும் மூன்று நட்சத்திரங்களில் அமைதியும், சாந்தமும் நிரம்பியது இதுவேயாகும். குருவின் நட்சத்திரம், குருவின் ராசியில் பிறந்திருப்பதால் பக்குவப்பட்டும், பந்தா பண்ணத் தெரியாதவராகவும் வளர்வீர்கள். அக்கம்பக்கத்து சீட்டைக் கூட அநாவசியமாக திரும்பிப் பார்க்க மாட்டீர்கள். திடீரென்று தங்க ஆபரணங்களை அணிவீர்கள். மறுநாளே கசங்கிய சட்டையோடும் வருவீர்கள். கிட்டத்தட்ட உங்களின் மனோநிலையை உணர்த்துவதற்காக இது சொல்லப்பட்டது. ஏனெனில், இரண்டு குருவின் ஆதிக்கத்தில் வரும்போது குருவின் தன்மைகள் இரண்டாகப் பிரியும். ஒன்று குடும்ப குருவாகவும், மற்றொன்று சந்நியாச குருவாகவும் செயல்படும். பெரும்பாலும் இந்த நட்சத்திரத்தில் வறுமையோடு இருப்பவர்களைப் பார்க்க முடியாது. அடக்கமானவர்களாக இருப்பீர்கள்; அதே சமயத்தில் அப்பாவி எனவும் பெயரெடுப்பீர்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் கூட யாரையும் அடக்கி ஆளும் ஆசை இருக்காது. தனக்குக் கீழே வேலை செய்பவர்களை விரட்டிக் கொண்டிருக்க மாட்டீர்கள். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய மாட்டீர்கள். சைலன்ட்டாக சாதனை புரியவே விரும்புவீர்கள்.


பூரட்டாதி 4ம் பாதத்தின் அதிபதியாக சந்திரன் வருவதால் அளவு கடந்த கற்பனை வளம் இருக்கும். ஆனால், வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டீர்கள். உங்களின் பால்ய வயதிலேயே சனி தசை வருவதால் நல்லவர்களை அதிகமாக சந்திக்க முடியாத சூழல் ஏற்படும். சூழ்ச்சியாளர்கள், தந்திரசாலிகளை சொந்தத்திலும், நட்புகளிலும் அடையாளம் காணுவீர்கள். ‘இப்படி மனசாட்சியே இல்லாம இருக்காங்களே’ என்று வெதும்பி ஒதுங்குவீர்கள். ‘இந்த மாதிரியான தப்பை வாழ்க்கையில எப்பவும் செய்யக் கூடாது’ என்பதில் உறுதியாக இருப்பீர்கள். 
வாழும் கலையை அறிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், அதிலும் தர்மத்தோடு நடப்பீர்கள். சாதனை செய்யும் ஆசை இருந்தாலும் புகழோடு வாழ்வதையும், செல்வாக்கோடு அலட்டிக் கொண்டு திரிவதையும் விரும்ப மாட்டீர்கள். பதவியும், பணமும் குடும்ப அமைதியை கெடுத்து விடக்கூடாது என கறாராக இருப்பீர்கள். ‘‘ஸார், உங்களுக்கு பிரமோஷனோட டிரான்ஸ்பரும் கொடுக்கறோம்’’ என்றால் வேண்டாமென மறுத்து விடுவீர்கள். பிள்ளைகளை எப்படிப் பிரிந்திருப்பது என்று யோசிப்பீர்கள்.

ஏனெனில், சிறிய வயதிலேயே தனிமை உங்களை சூழும். தாத்தா, பாட்டியிடம்தான் உங்களின் பெரும்பாலானோர் வளருவர். விடுதி வாழ்க்கை அனுபவமும் அடிமனதில் இருக்கும். இதனால் அன்புக்கு ஏங்கும் ஜீவனாக எப்போதும் இருப்பீர்கள். பத்தாயிரமானாலும் சரி, பத்து லட்ச ரூபாய் சம்பாதித்தாலும் சரி... இரண்டிற்குள்ளேயும் வாழ்க்கையை ஓட்டிவிடுவீர்கள். எத்தனை விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தாலும் சபையேறி பிரமாதமாக எடுத்துப் பேசி கைதட்டல் வாங்குவதை விரும்ப மாட்டீர்கள். அதற்குக் காரணம், உங்களைவிட மற்றவர்களை புத்திசாலி என்று நினைப்பீர்கள். சில நேரங்களில், சில சூழலில் உங்களை திறமையற்றவர் என்று விமர்சிப்பார்கள். சரியான அமுங்குணி என்று புறம் பேசுவார்கள். ஏனெனில், உங்களுக்கு ஆட்டம், பாட்டம், ஆரவாரமாக இருத்தல் எதுவுமே பிடிக்காது.

இது தெரியாமல் உங்களைக் குறைத்து மதிப்பிடுவார்கள். கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையின் பாதி வரை சாதாரணமாகத்தான் இருக்கும். பிற்பகுதி உங்களை பிரபலமாக்கும். 45 வயதுக்குப்பிறகு பொறுத்தது போதும் என்று பொங்கி எழுவீர்கள். அதுவே சாத்வீகமாகத்தான் இருக்கும். படித்ததை எப்போதுமே வாழ்க்கையில் பின்பற்றுவீர்கள். எல்லோரையும் அரவணைத்துப் போவீர்கள். ஆனால், யாரும் ஒட்டமாட்டார்கள். ஏனெனில், நீங்கள் ஆடம்பரமாக பேசத் தெரியாமல் பாசத்தை பதுக்கி வைப்பீர்கள். அன்பைக் கூட ஆரவாரமாக வெளிப்படுத்தும் உலகில், ஆரவாரமற்று அன்பு செய்யும் அதிசயப் பிறவி நீங்கள். உடன்பிறந்தோராக இருந்தாலும் நியாயத்திற்குப் புறம்பாக எது செய்தாலும், ராவணனை தட்டிக் கேட்ட விபீஷணனைப்போல எதிர்ப்புத் தெரிவிப்பீர்கள். ஆனாலும், ‘அவரு அண்ணனா போயிட்டாரே’ என்று பாசம் காட்டுவீர்கள்.

அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், திருவாதிரை, மகம், உத்திரம், சித்திரை, ஸ்வாதி, மூலம், உத்திராடம், அவிட்டம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் நல்ல மாற்றங்கள் நிகழும். பரணி, ஆயில்யம், பூரம், கேட்டை, பூராடம், பூரட்டாதி போன்றோர்கள் உங்கள் கருத்தை எதிர்ப்பார்கள். சங்கீதா, கல்யாணி, நீலகண்டன், கோபாலன் போன்ற பெயருள்ளவர்கள் சிந்திக்க வைப்பார்கள். அருள்நிதி, செல்வம், கனகராஜ், தட்சிணாமூர்த்தி போன்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  உங்களுக்கு ஏறக்குறைய 3 வயது வரை குரு தசை நடைபெறும். ராசிக்கு அதிபதியான குருவின் தசையாக இது வருவதால், சட்டென்று தந்தையின் நிலை உயரும். தந்தைக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குரு பத்தாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால் பொருளாதார சூழல் மேம்படும். அடுத்து 4 வயதிலிருந்து 22 வரை சனி தசை நடைபெறும். சட்டென்று பெற்றோரோடு நீங்களும் இடம் மாறுவீர்கள். உங்கள் உடல்நிலை பாதிக்கப்படும். முக்கியமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னை இருப்பின் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி படிப்பு பற்றிய விஷயங்களில் பயப்பட வேண்டாம். எல்லாவற்றிலுமே சிஸ்டமேட்டிக்காக நடந்து கொள்வீர்கள். தேடிவந்தாலும் வம்பு தும்புகளில் சிக்க மாட்டீர்கள். இந்த தசையில் மட்டும் துரதிர்ஷ்டம் துரத்துவதாக நினைப்பீர்கள். ‘இன்னும் ஒரு மார்க் கூட எடுத்திருந்தா ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருப்பான்’ என்று சுட்டிக்காட்டிப் பேசுவார்கள். இந்த தசையில் அதிக நேரம் தனிமை; நிறைய படிப்பு என்று வாழ்க்கை நகரும். வாழ்க்கை கொஞ்சம் துன்பமயமானது. எல்லோருக்குள்ளும் ஒரு சோகம் உள்ளது என்கிற மனோநிலையை அடைவீர்கள். சனி தசை எப்போதுமே கொஞ்சம் கஷ்டப்படுவோர்களுடனேயே நெருங்கிப் பழக வைக்கும். 

23லிருந்து 39 வயது வரை புதன் தசை நடைபெறும். உங்கள் ராசிக்கு பாதகாதிபதியாகவும், சுக ஸ்தானத்திற்கு உரியவராகவும் புதன் வருகிறார். இதனால் நல்லதையும், கெட்டதையும் கலந்து கொடுப்பார். புதன் தசையின் தொடக்க காலத்தில் காதல் வயப்படுவீர்கள். ஒரு வாரம் அன்பாகப் பேசுவீர்கள். ‘பெரியவங்க பார்த்தா என்ன சொல்வாங்களோ, இதனால குடும்பத்துக்கு கெட்ட பெயர் வருமோ’ என்று பயந்து ஒதுங்குவீர்கள். காதலை மனதுக்குள் போட்டுப் புதைப்பீர்கள். பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் நடக்கும். 28 வயதில்தான் திருமணமாகும். வாழ்க்கைத் துணைவர் உங்களைவிட ஒருபடி சாதுர்யமாகவே இருப்பார். ஆனால் அவருக்கு ஹார்மோன், நரம்புத் தளர்ச்சி என்று சில பிரச்னைகள் வந்து நீங்கும்.

வாழ்க்கைத் துணை உங்களை புரிந்து கொள்ளாமல் தவிப்பார். ‘திருமண நாள், பிறந்த நாளையெல்லாம் மறந்துட்டு ஆபீஸுக்கு போறீங்களே’ என்று வருத்தப்படுவார். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பை உங்களிடத்தில்தான் ஒப்படைப்பார்கள். நீங்கள் வேலை பார்க்கும் டிபார்ட்மென்ட்டை உயர்த்துவீர்கள். கீழே வேலை செய்வோரை விரட்டாது வேலை வாங்குவீர்கள். நான்கு முறை சொல்லிப் பார்த்து தானே அந்த வேலையை செய்து முடிப்பீர்கள். அதற்குப்பிறகு சம்பந்தப்பட்டோரை தற்காலிகப் பணிநீக்கம் செய்வீர்கள். புதன் தசையில் 30 வயதுக்குப் பிறகு வேலை விஷயங்களில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். ‘ஏன் ஸார், இவ்ளோ வேலை செய்யறீங்க... ஆனா எந்த சலுகையும் எதிர்பார்க்க மாட்டேன்றீங்க’ என்று பலபேர் உங்களைக் கேட்பார்கள். நீங்கள் சுய தொழிலில் ஈடுபடும்போது கொஞ்சம் கடுமை காட்டத் தெரிய வேண்டும். இல்லையெனில் ஏமாற்றப்படுவீர்கள். பெரும்பாலும் அடுத்தவருக்காகவே உங்களின் மூளை செலவழியும். 36, 38, 39 வயதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஏற்றம் இருக்கும். உங்கள் பேச்சில் அறிவு பிரகாசிக்கும். அனுபவம் தெறிக்கும். ஆனாலும், கேட்கிறார்களே என்று அடிக்கடி பேசிக் கொண்டிருக்க மாட்டீர்கள். 

அடுத்ததாக 40லிருந்து 46 வயது வரை கேது தசை வருகிறது. கேது தசையில்தான் நீங்கள் விசுவரூபமெடுப்பீர்கள். கேது கெடுப்பான் என்பார்கள். ஆனால், உங்களுக்கு கொடுப்பான். உங்களைப் பொறுத்தவரைக்கும் கேது உங்களுக்கு யோகக்காரன். ‘பேசும் மீன் நண்டு லக்னத்தில் பிறந்தார்க்கெல்லாம் பாசமாய் பாம்பின் திசைவரின் தூசு பொன் சோபனங்கள் மெத்த உண்டு’ என்று ஜாதக அலங்காரம் கூறுகிறது. 42, 43, 45 போன்ற வயதுகளில் செல்வ வளம் பெருகும். திடீரென்று பிரபலங்களோடு நட்பு வரும். ‘‘இத்தனை நாள் அவரு உழைச்சதுக்கு இப்போ ஆண்டவன் கண்ணைத் திறந்துட்டான்’’ என்பார்கள். ‘நாம ஏன் நம்மோட இயல்பை மாத்திக்கக் கூடாது’ என்று அடிக்கடி நினைப்பீர்கள். செல்வம் சேரும்போது மாறிவிடுவோமோ என்கிற பயத்தால் அப்படி நினைப்பீர்கள். தொழில், வியாபாரம், லௌகீக வாழ்க்கை என்று நீங்கள் ஓடினாலும் ஞானகாரகனான கேது இறைத் தேடலையும் சேர்த்துக் கொடுப்பான். பக்தி நூல்களை வெளியிடுவது, ஆன்மிக அன்பர்களோடு தல யாத்திரை செல்வது, அடியார்களுக்கு அன்னமிடுவது, பொருளுதவி புரிவது என்று முற்றிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுவீர்கள்.
47லிருந்து 66 வயது வரை உங்களுக்கு சுக்கிர தசை தொடங்குகிறது. ‘அவருக்கு என்னப்பா... சுக்கிர தசை’ என்று சொல்லக் கேட்டிருப்போம்.

 உங்களின் சொந்த ஜாதகத்தில் மிருகசீரிஷம், சித்திரை, ஸ்வாதி போன்ற நட்சத்திரங்களில் சுக்கிரன் அமரும்போதும், குருவின் பார்வை சுக்கிரன் மீது பட்டாலும், 8, 12ல் சுக்கிரன் மறையும்போதும் முதல் தரமான யோகத்தை அருள்வார். இல்லையெனில் சுமாராக நகரும். குருவின் நட்சத்திரத்திலும், ராசியிலும் நீங்கள் பிறந்திருப்பதாலும், சுக்கிரன் குருவுக்கு கொஞ்சம் பகைவராக இருப்பதாலும் இழுத்தடித்து இழுத்தடித்துதான் எல்லா காரியமும் முடியும். எனவே, சுக்கிர தசைதானே என்று பெரிய அளவில் எதையும் இழுத்து விட்டுக் கொள்ளக் கூடாது. உங்களுக்கு அனுபவமில்லாத எந்தத் தொழிலையும் தொடங்கக் கூடாது. வாழ்க்கைத் துணைவரைப் பற்றிச் சொல்லும் கிரகமாக சுக்கிரன் இருப்பதால், உங்களின் வாழ்க்கைத் துணைவருக்கு சுக்கிரன் நன்றாக அமைந்து விட்டால் போதும். பிரச்னைகள் குறையும். 67லிருந்து 72 வயது வரை சூரிய தசை நடக்கும். சூரியன் ஆத்மகாரகனாக இருப்பதால் பிறவியில்லாது இருக்க மகான்களை நாடிச் செல்வீர்கள். கூப்பிட்டு கௌரவப்படுத்தும் அளவுக்கு பெரிய பதவிகளில் அமருவீர்கள்.

சந்திரனின் சக்தியும், குருவின் இரட்டிப்பு அருளும் ஒன்று சேர்ந்த அமைப்பை இது காட்டுகிறது. குருவினுடைய அருளும், சந்திரனின் ஒளியும் மிக வலிமையுள்ளவர்களாக மாற்றும். நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தாலும், ‘எல்லோருக்கும்தான் இந்த விஷயங்கள் தெரிகிறதே நாம் எதற்கு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று நினைப்பீர்கள். பல சமயம் உங்களுக்கு முன்பு செல்வோர் வெற்றிக் கனிகளைப் பறித்து விடுவார்கள். எளிமையோடு சேர்ந்த திறமையை வீணாக்கிக் கொள்ளக் கூடாது. எதிலுமே தீவிரமாக இறங்கி வெற்றி பெற, நீங்கள் வடலூர் ராமலிங்க அடிகளாரின் சத்திய ஞானசபையை தரிசித்து வாருங்கள். ஏனெனில் அருட்பெருஞ்ஜோதியாக இறைவன் இருக்கும் தத்துவத்தை வள்ளலார் எடுத்துரைத்தார். மேலும், குரு என்கிற தத்துவமும், சந்திரனின் ஒளி எனும் தத்துவமும் இணைந்திருக்கும் ஒரு அமைப்பை இது காட்டுகிறது. குருவாக இருந்தவர் அருட்
பெரும் ஒளியோடு இணைந்த உயர்ந்த நிலையை இது உணர்த்துகிறது. எனவே, வள்ளலாரின் சத்திய ஞானசபைக்குச் சென்று திருவருட்பா படியுங்கள். அமைதியாக தியானம் செய்யுங்கள். உங்கள் உள்ளொளி பெருகும் பாருங்கள்.

மாற்றம் தரும் மந்திரம்

பூரட்டாதி நான்காம் பாதத்தில்
பிறந்தவர்கள், தங்கள் வாழ்வில் மேன்மை பெற சொல்ல வேண்டிய மந்திரம்...
அத்ராஷமஷீணாதயா நிதான
மாசார்யமாத்யம் வடமூலபாகே
மௌனேன மந்தஸ்மித பூஷிதேன
மஹர்ஷி லோகஸ்ய தமோ நுகந்தம்

அடுத்த வாரம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்காக...