கண்களில் துடிக்கும் பேரழகு





சத்தங்கள் படபடப்பூட்டுபவை, பயமூட்டுபவை, உள்ளுக்குள் இறங்கி உயிரை அசைத்துவிட்டுப் போகும் தன்மை கொண்டவை, சிலிர்ப்பூட்டுபவை, ஜில்லிப்பாக்குபவை... இவற்றைத் தாண்டி காமம் தருவதாகவும் இருப்பவை. அப்படியொரு சிரிப்புச் சத்தம் வரும் வீடாகத்தான் அந்த வீட்டைச் சொல்வார்கள். அந்த வீடு ஊரின் நடுவில்தான் இருந்தது. சாலை வழியே சென்றால், கருவை முட்கள் படர்ந்திருக்கிற தோட்டத்துக்கு இடதுபுறத்தில் சின்னதாக ஒற்றையடிப் பாதை. அதில் நடந்தால் காம்பவுண்ட் சுவர் போடப்பட்ட மச்சு வீடு. அந்த வீட்டிலிருந்து பெரும்பாலும் அந்த சிரிப்பு சத்தம் வரும். கிளர்ச்சியூட்டுகிற, உடலின் வழி காமத்தை விதைக்கிற சிரிப்பு சத்தமாக அது இருக்கும்.

அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு என்ன பெயர் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், சிலுக்கு வீடென்றால் யாராலும் அடையாளம் சொல்ல முடியும். அவளது பெயர் என்னவாக இருக்கும் என்பது பற்றி யாரும் மெனக்கெடவில்லை. சிலுக்கு என்ற அடையாளப் பெயர் அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. அவளும் அந்தப் பெயரை விரும்புகிறவளாக இருந்தாள். அவள் வேறு ஏதோ ஊரிலிருந்து இங்கு குடியேறியவள். எந்த ஊர்க்காரி என்பது பற்றியும் ஆளாளுக்கு கதை சொன்னார்கள். அவளுக்கு கணவனும் ஒரு மகனும் இருந்தார்கள். கணவன் எங்கோ வெளி மாநிலம் ஒன்றில் வேலை பார்ப்பவனாகவும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து செல்பவனாகவும் இருந்தான். அது அவளது உண்மையான கணவனா என்பது பற்றியும் திண்ணைகளில் விவாதம் நடந்து வந்தது. ஆனால் அவளது மகன், கணவனின் சாயலையே கொண்டிருந்தான். அவளது தொழில், ஊரில் தெரிந்ததுதான். அதற்காக ஒதுக்கி வைக்க முடியுமா என்ன?

‘‘என்ன இப்டி சொல்லிட்டெ. இப்டி இருக்கவா வீட்டு பக்கத்துல சடங்கான பிள்ளைலயும் பொண்டாட்டியையும் வச்சுக்கிட்டு காலங்கழிக்க முடியுமாவே? இதுக்கு ஒரு முடிவெடுக்கணும், ஆமா’’ என்று அவள் குடியிருந்த தெருக்காரர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால், பக்கத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப்பில் அவள் ஒரு நாள் வந்திறங்கியபோது மூச்சடைத்துப் போனார்கள் எல்லாரும். வீட்டுக்குள் நின்று ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தார்கள். அந்த இன்ஸ்பெக்டர், தெருவில் நின்று கைகாட்டி விட்டு ஜீப்பில் ஏறிப் போனார். அப்போது சிலுக்கு சிரித்த சிரிப்பு பற்றி தெருக்காரப் பெண்கள் மெதுவாகப் பேசி சிரித்துக் கொண்டார்கள். இதே போல சில அரசு அதிகாரிகளின் அம்பாசிடர் கார்களும் தெருவுக்குள் அவ்வப்போது வந்து செல்ல ஆரம்பித்தபிறகு, அவள் பற்றி ரகசியமாகவே பேசினார்கள்.

உயரமாக, இளம் மஞ்சள் நிறமாக, மூக்கும் முழியுமாக, பேரழகைக் கொண்டவளாக இருக்கிற அவளுக்கு வெளியூர்க்காரர்கள் மட்டுமே வாடிக்கையாளர்களாக இருந்தனர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர்க்காரர்களும் வாடிக்கையாளர் ஆனார்கள். லாரி டிரைவரான சுப்பையாதான் ஊருக்குத் தெரிந்து அவள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவனாக இருந்தான். அவளுடன் அதிக நட்பு கொண்டவனாகவும் இருந்தான். இரவு நேரங்களில் சில இளவட்டங்கள் அவள் வீட்டுக்குச் சென்று வருவதை கருவை முட்களின் வழியாகப் பார்க்க முடியும். பெரிய மனிதர்கள் என்கிற பேராசை கொண்டவர்களில் இருந்து ஊரில் மதிக்கப்படுகிறவர்கள் வரை, அவள் வீட்டுக்கு ரகசியமாகச் சென்று வந்தனர்.

இவ்வளவு பேரழகு கொண்ட சிலுக்கு, ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாள் என்கிற கேள்வி, மாடு மேய்க்கும் இடத்தில் அடிபடும். அவளிடம் கேட்டால் ஏதாவதொரு துக்கக் கதை சொல்லக்கூடும். ‘அவளின் கதை என்னவாக இருக்கும்’ என்கிற கற்பனைகள் பறக்கும். ஏற்கனவே சினிமா படங்கள் காட்டியிருக்கிற பாலியல் தொழிலாளிகள், கட்டாயத்தின் பேரிலேயே இத்தொழிலுக்கு வந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். இவளும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்கிற நினைப்பும் வரும்.

இது ஒருபக்கம் இருந்தாலும் அவளுக்கு திடீரென்று நல்ல பெயர் ஏற்பட்டு வந்தது. ஊரில் தபால் ஆபீஸை அடுத்து அவள் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்தது. ஆத்திர அவசரத்துக்கு அவள் வீட்டில் போன் பண்ணிக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. வெளிமாநிலங்களில் வசிக்கிற உள்ளூர்க்காரர்களுக்கு அவசரத் தேவைக்கு அவள் வீட்டு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. யாருக்கு கஷ்டம் என்றாலும் அவர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுப்பதையும் கடமையாகச் செய்தாள். இப்படி கொடுப்பதன் மூலம் ஊரின் மதிப்பைப் பெற முடியும் என்று நினைத்தாளோ என்னவோ? இந்த கடன் விஷயங்களுக்காக அவளது உறவுக்காரன் ஒருவன் இருந்தான். அவனை ‘வக்கெட்டை’ என்றுதான் அழைப்பார்கள். அப்படிச் சொல்லும்போது அவனுக்கு கோபம் வருவது போல காட்டிக் கொள்வான். அவளிடம் பழக வேண்டும் என்பதற்காகவே வக்கெட்டையிடம் சிலர் நட்பு வைத்திருந்தார்கள் என்பது வேறு விஷயம்.

‘‘போன வாரம் கோயில் கொடை. ஊர்க் கூட்டத்துல தலைகட்டுக்கு எரநூறுன்னு வரி வச்சுட்டானுவோ. வரிக்குன்னு வச்சிருந்த ரூவாய தங்கச்சி மவ சடங்குக்கு செலவழிச்சாச்சு. திடீர்னு எங்கெ போவ? வீட்ல வெறவு வெட்டுததுக்கு ஒரு நாளு கூப்டுச்சு அந்த பிள்ளெ. கள்ளங்கபடம் இல்லாம பேசுச்சு. அந்த பழக்கத்துல அவ வீட்டுக்குப் போயிட்டென். ‘கொஞ்சம் கடனா ரூவா கெடெக்குமா தாயி’ன்னு கேட்டென். அசலூர்க்கார பிள்ளைட்ட போயி கடன் கேக்கோமேன்னு கேவலமாதான் இருந்துச்சு. வேற என்ன செய்ய சொல்லுதெ? மறுபேச்சு பேசலயே. வீட்டுக்குள்ள போயி, ரூவாயோட வந்துட்டா மவராசி. தை மாசம் தாரன்னுட்டு வாங்கிட்டு வந்தென்? இல்லைன்னா, வரி கொடுக்காம ஊர்ல கேவலம்லா பட்டிருப்பென்? அவ என்ன தொழிலும் பண்ணிட்டுப் போட்டுண்டா. அந்த மனசு ஒனக்கு வருமாடே?’’ என்று விறகுக்குப் போகும் முத்தையா, ஊரில் அவள் பெருமை பேச ஆரம்பித்துவிட்டார். இதைத் தொடர்ந்து பலர் அவளிடம் கடன் கேட்டு நிற்கத் தொடங்கி இருந்தனர்.

இந்த கொடுக்கும் குணம் காரணமாக, அவளிடம் பேசவே தயங்கும் பெண்கள் அவளின் தோழிகளாகி இருந்தனர். அவள் மகனுக்கு தெருவில் சேக்காளிகள் கிடைத்தார்கள். இருந்தாலும் அனாவசியமாக அவள் ஊருக்குள் அலைவதில்லை. இரண்டு வேளை மட்டுமே அவள் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவாள். ஒன்று அதிகாலையில் வாய்க்காலில் குளிப்பதற்கு. மற்றொரு முறை, பக்கத்து டவுனில் படிக்கிற மகன் பஸ்சில் இருந்து இறங்கியதும் அழைத்துப் போவதற்கு. இந்நேரங்களில் அவளைப் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் கூடும். காலையில் இவள் குளிக்கும் இடத்துக்கு மேற்குப்
பக்கமாக இருக்கிற தெப்பக்குள திண்டில் ஒரு கோஷ்டி அமர்ந்திருக்கும். மாலையில் சுடலை மாடசாமி கோயில் சுவர். இவர்களுக்கான பிரச்னை, ‘‘இவ்வளவு பேரழகு கொண்டவள், தங்களை ஏற்றுக்கொள்வாளா?’’ என்பதுதான்.

மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் கூனையன், அவள் வீட்டுக்குப் போய்விட்டு வந்ததை பிள்ளையார் கோவிலுக்குப் பின் பக்கம் அமர்ந்து பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான். ‘‘ஆயிரஞ் சொல்லுலெ. அவா பேசுனாலெ போதும். என்னா கொரலுங்கெ. கேட்டுட்டே இருக்லாம் போல்ருக்கும்’’ என்று அவன் விவரிக்கும்போது, கேட்பவர்களுக்கு காமம் தலைக்கேறும். இவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காகவே பொய்யாகவும் கற்பனையாகவும் அவன் சொல்வான். இம்மாதிரியான கதைகள் அவள் பற்றிய ஏக்கத்தை ஊருக்குள் அதிகமாக்கி இருந்தது.

புதிதாகக் கல்யாணம் ஆன தங்கசாமியை திருட்டு வழக்கு ஒன்றில் போலீஸ் பிடித்துச் சென்றபோதுதான் சிலுக்கின் அதிகாரத்தை ஊர் அறிந்தது. தங்கசாமி பழைய குற்றவாளி. சில வருடங்களாக சித்தாள் வேலைக்குப் போய் திருந்தி வாழ்கிறவன். ஆழ்வார்குறிச்சி திருட்டு வழக்கில் இவனை பிடித்துப் போனது போலீஸ். அவனது புது மனைவி துடித்துப்போனாள். கல்யாணம் ஆன நாலாவது நாளே இப்படி ஆனது தெருக்காரர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ‘‘பாளையங்கோட்டைக்குலா கொண்டு போயிருவானுவோ’’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

சிலுக்கிடம் இந்த விஷயத்தை யாரோ சொன்னார்கள். அவள் தங்கசாமி வீட்டுக்குப் போனாள். ‘‘ஒண்ணும் பிரச்னை இல்லெ. ஒன் வீட்டுக்காரன் வந்துருவான். நா பாத்துக்கிடுதென்’’ என்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தாள். அவள் சொன்னது போலவே, ராத்திரி கடைசி பஸ்சில் வந்து இறங்கியிருந்தான் தங்கசாமி. காலையில் எழுந்ததும் பொண்டாட்டியுடன் அவள் வீட்டுக்குப் போனான். காலில் விழப்போனவனிடம், ‘‘ச்சே... என்ன வேலை பார்க்க?’’ என்று நகர்ந்தாள். அவன் திடீரென தனது சட்டையைக் கழற்றி முதுகைக் காண்பித்தான். பிரம்பால் அடித்த அடி, தடம் போல் பதிந்திருந்தது. ‘‘போலீஸ்காரங்க அடிச்சே கொன்னுருப்பானுவோ. நீ மட்டும் சொல்லலைன்னா...’’ என்று அழுதான். அவனது மனைவியும் சேலை முந்தானையை வாயில் வைத்துக்கொண்டு கவலையாக நின்றாள். ‘‘அழாத. ஒண்ணும் பிரச்னையில்லை. நீ வீட்டுக்குப் போ’’ என்ற சிலுக்கு, இருவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள். காமம் பெருகும் இடத்தில் பாசம் பெருகிக்கொண்டிருந்தது. அவன் போகும்போது, ‘‘வாரென்க்கா’’ என்றான். அந்த ‘அக்கா’வை ரசித்தவளாக அவள் இருந்தாள்.  

வயதாக ஆக அவளின் இளமை கூடிக்கொண்டே இருந்தது. ‘அணையப் போற விளக்கு பளிச்சுனு எரியற மாதிரி’ ஒரு சித்திரையில் திடீரென இறந்து போனாள் சிலுக்கு. அவளது மரணம் யாராலும் நம்ப முடியாததாக இருந்தது. ‘‘நேத்து சாயந்தரம் ஏங்கிட்டெ பேசிட்டுதான் படுக்கப் போனா. அதுக்குள்ளெ இப்டி போயிட்டாளெ?’’ என்று ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்பாச்சி. வீட்டின் முன் எல்லாரும் கூடியிருந்தார்கள். யாரும் அழவில்லை. ‘கடன் கொடுக்கவும், போலீஸ் பிரச்னை என்றால் சொல்லி விடுவிக்கவும் இனி யாருமற்ற ஊரில் எப்படி வாழ்வது’ என்கிற யோசனை எல்லோர் முகங்களிலும் தெரிந்தது. வேலைக்குப் போன தங்கசாமி விஷயம் கேள்விப்பட்டு பாதியில் திரும்பினான். வேக வேகமாக வந்தவன் அவள் உடலைப் பார்த்தான். பெரும் உணர்ச்சியில் சத்தமாக அழத் தொடங்கினான். எல்லாரும் அவனையே பார்த்தார்கள். அந்த அழுகை சத்தம் அவனை பயமூட்டிக்கொண்டே இருந்தது.
(வாசம் வீசும்...)