நியூஸ் வே





தனது மக்கள் தொடர்பாளரை அதிரடியாக மாற்றிவிட்டார் ஆண்ட்ரியா. பர்சனல் நம்பரும் இப்போ மாறிவிட்டது. அவரது நம்பருக்கு போன் அடித்தால் புதிய பி.ஆர்.ஓ பேசுகிறார். பேட்டி என்று கேட்கும் பத்திரிகையாளர்களுக்கு ‘கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி’ என்று அனுப்பப்படுகிறது மெயில் ஐடி.

சங்க பஞ்சாயத்து, மகனின் கால்ஷீட் பரபரப்பு என எஸ்.ஏ.சந்திரசேகர் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு வீடு திரும்பினால், ஐ பாடில் பழைய பாடல்களோடு தனிமையில் மிதக்க ஆரம்பித்து விடுவாராம்.

தனது 2817 கி.மீ தூர பாதயாத்திரையை முடித்திருக்கிறார் ‘தெலுங்கு தேசம்’ தலைவர் சந்திரபாபு நாயுடு. ‘‘நம் தலைவர்கள் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேசம் எழுச்சி பெறுகிறது’’ என நம்பிக்கையாகப் பேசும் இவர், டெல்லியில் மூன்றாவது அணி ஆட்சி அமைய இரண்டுமுறை சூத்திரதாரியாக இருந்தவர். ‘‘இம்முறையும் மூன்றாவது அணி உருவாகும்’’ என்கிறார் நம்பிக்கையாக!

பிரபுதேவா வழியில் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் முதல் தடவையாக டைரக்ஷனுக்கு வருகிறார். தயாரிப்பில் இறங்குகிறவர் டைரக்டர் செல்வராகவன். டிஸ்கஷன் தீவிரம்.

அஜித் புதுப்படத்தின் டீசர் 1.5 மில்லியன் அளவை தாண்டிப் போய்க்கொண்டு இருக்கிறது. கேள்விப்பட்ட பிற ஹீரோக்கள் புருவத்தை உயர்த்துகிறார்கள்.



கொட்டிவாக்கத்தில் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தாலும், பாரதிராஜாவும் விஜய்யும் தீபாவளி, பொங்கல் சமயங்களில்தான் வெளியே வந்து நலம் விசாரித்துக்கொள்கிறார்கள்.

‘ஆசைக்கு நீ அறிவுக்கு நான்’ - இது ‘திருவிளையாடல்’ டயலாக் அல்ல. ‘எத்தன்’ சுரேஷ் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் படத்தின் டைட்டில். ‘ஆசைக்கு நீ’ என ஹீரோ சுட்டிக்காட்டும் ஹீரோயின் பிந்துமாதவி.

பாகிஸ்தானின் அழகான வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானியை டி.வியிலும் பத்திரிகைகளிலும் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ஏமாற்றச் செய்தி. இனி அவர் அமைச்சர் ஆக முடியாது. இந்தத் தேர்தலில் போட்டியிடாமல், தனது தொகுதியை தன் தந்தைக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.

வளசரவாக்கத்தில் புது வீட்டில் மனைவி, குழந்தையோடு குடியேறிவிட்டார் டைரக்டர் பாண்டிராஜ். ‘கேடி பில்லாவும் கில்லாடி ரங்கா’வும் தந்த வீடு அது.

ஸ்ரீதேவியின் குடும்ப விழாக்களில் கலந்துகொள்ளும் அளவிற்கு அவருக்கு நெருக்கமாகிவிட்டார் ப்ரியா ஆனந்த். ‘‘நீங்க எனக்கு அம்மா மாதிரி’’ என அவரைப் பார்க்கும்போதெல்லாம் பாசத்தில் உருகுகிறார்.

கிட்டத்தட்ட ‘ஐ’ படத்தை முடித்து விட்டார் விக்ரம். அடுத்து என்ன படத்தை முடிவு செய்வது என தீவிரமாக டிஸ்கஷன் நடக்கிறது. ‘அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகலாம்’ என்கிறார்கள். அனேகமாக பாலா!

இந்தியில் வித்யா பாலன் நடித்து பெரும் வெற்றிபெற்ற ‘கஹானி’யை நயன்தாராவை வைத்து எடுக்கிறார்கள். ஐதராபாத்தில் வேக வேகமாக இயக்குகிறார் டைரக்டர் சேகர் கம்லா. நயன்தாராவோடு நடிக்கிற வாய்ப்பு பசுபதிக்குத்தான்.

கொலைப் பட்டினி கிடந்து உடம்பைக் குறைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. பிரியாணியை வெளுத்துக் கட்டியவர், இப்போது ஜூஸ் மட்டுமே எடுத்துக்கொள்கிறார். ‘ஜி.வி.பிரகாஷ்... நீங்க மியூசிக் மட்டும் போட்டுக்கொண்டு இருக்கக்கூடாதா? எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் பாருங்க!’

இந்தியில் வெளிவந்து பரபரப்பு உண்டாக்கிய உண்மைக் கதையின் வடிவான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் உரிமையை லிங்குசாமி வாங்கிவிட்டார். யாரை ஹீரோவாகப் போடலாம் என முடிவெடுக்க முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்.



‘என்னடா, இன்னும் நடக்கலையே’ என்று நினைத்தோமே... நடந்துவிட்டது! ஆமாங்க... பிரசன்னாவும் சினேகாவும் இணைந்து சொந்தப் படம் தயாரிக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் எல்லாம் கொஞ்ச நாளில் தெரியும். இடையே போஜ்புரி படத்திலும் நடிக்கிறார் சினேகா.

‘‘கதாநாயகனாக மட்டும் நடிப்பேன்’’ என அடம் பிடிப்பதில்லை பார்த்திபன். அவருக்குப் பிடித்திருந்தால், சொன்ன மாதிரியே எடுப்பேன் என உத்தரவாதம் அளித்தால், திருப்பத்தைத் தரக்கூடிய சிறு ரோலில் கூட நடிக்கத் தயாராக இருக்கிறார். மகன் ராக்கியே இப்போது டைரக்டராக ஆர்வமாக இருப்பதுதான் செய்தி.

‘காதலில் சொதப்புவது எப்படி’ ஹிட் கொடுத்துவிட்டு, பாலாஜி இன்னமும் அடுத்த படம் அறிவிக்காமல் இருக்கிறார். முதல் படத்திற்குப் பிறகு குறும்பட இயக்குநர்கள் தொடர்ந்து திணறுவதாக கோலிவுட்டில் செய்தி உலவுகிறது.

இளையராஜா இசையமைத்த ‘புத்தம்புது காலை’யின் வசீகர இசை அறிந்ததுதான். அதை மறுபடியும் இளையராஜாவே ‘மேகா’ என்ற புதிய படத்திற்காகப் பயன்படுத்துகிறார். ஜானகிக்கு பதிலாக ‘சூப்பர் சிங்கர்’ அனிதா பாடுவது மட்டும்தான் மாற்றம்.

தான் நடிக்கும் முதல் இந்திப்படம் ‘ரான்ஜானா’ அட்டகாசமாக வந்திருப்பதில் தனுஷ் உற்சாகமாக இருக்கிறார். படம் தமிழிலும் வருகிறது. ‘அம்பிகாபதி’ என படத்துக்கு தனுஷ் பெயர் வைத்திருக்கிறார். ‘துள்ளுவதோ இளமை’ கெட்டப் என்றாலும், துளியும் அந்தக் கவர்ச்சியோடு தொடர்பில்லை என்கிறார்கள்.

எப்போ போன் பண்ணினாலும், ‘‘சார் இப்போ ரெக்கார்டிங்கில் இருக்காரு’’, ‘‘ஐயா இப்போ கம்போஸிங் போயிருக்கார்’’ என்ற பதிலே கிடைக்கிறது. இவ்வளவு பிஸியா இருப்பது ஏ.ஆர்.ரஹ்மானோ, யுவனோ இல்லை. (சங்கர்) கணேஷும், எம்.எஸ்.வியும் தான் அந்த இருவர்.
ரீ என்ட்ரியிலும் பின்னுங்க!

சைலன்ஸ்
விரல் நடிகருக்கும், குண்டு நடிகைக்கும் இப்ப உறவுகள் சரியாக இல்லை என்கிறார்கள். பிரியாணி நடிகர் சமாதானப்படுத்தியும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லையாம். இனி விரல், குண்டு, பிரியாணி சங்கம் கூடித்தான் முடிவு எடுக்கும் என்கிறார்கள். நடிகருக்கும் காதலிக்கும் ராசி இல்லை போலிருக்கிறது. தொடர்ந்து அப்பாவின் தடையுத்தரவு நீடிக்கிறதாம். பாவம் காதல் புலி!

‘அங்காடி’ நடிகை சென்னையில்தான் இருக்கிறார். ஆனால் ஐதராபாத்தில் இருப்பதாக கதை பரப்புகிறார்கள். ஐதராபாத்தில் இருக்கும் ஆப்த நண்பரின் ஏற்பாட்டில், சென்னையின் ‘ரிச்’ ஏரியாவில் இருக்கும் ரிச் பங்களாவில் கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்டு இருக்கிறாராம். சித்தி அழுது, ஊரைக் கூட்டி, அவரை இழுத்துப் போய்விடக்கூடாது என்பதுதான் காரணம்!