ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது!





எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இன்னும் கருத்தடை ஆபரேஷன் செய்துகொள்ளவில்லை. ‘‘இந்தக் காலத்தில் ஆபரேஷன் என்றெல்லாம் கஷ்டப்பட வேண்டாம். பிளாஸ்திரி போல ஒரு ஒரு சின்ன பேட்ஜ்... அதைத் தோளில் ஒட்டிக் கொண்டாலே கருத்தரிக்காது. விசாரித்துப் பார்’’ என்கிறாள் என் தோழி. இது உண்மையா?
- மாலதி சரவணன், திருமங்கலம்.

பதில் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் செந்தாமரைச் செல்வி கருத்தடை முறைகளில் நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றை விட ஒன்று எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான நோக்கம். அந்த வகையில் இன்னொரு அட்வான்ஸ் கருத்தடை முறைதான் தாங்கள் அறிந்த அந்த பேட்ஜ். ‘ஹார்மோன் பேட்ஜ்’ என அழைக்கப்படுகின்ற இவற்றை சமீபமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மருத்துவ உலகம்.

இந்த பேட்ஜ்களை குறிப்பிட்ட நாட்களில் பெண்ணின் தோள் பட்டையிலோ அல்லது உள்ளங்கை, காலிலோ அழுத்திப் பொருத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜஸ்டிரான் ஆகியவை பெண்மைக்கான ஹார்மோன்கள். இவற்றை அளவுக்கு அதிகமாக பெண்ணின் உடலில் செலுத்தும்போது, அது மாதவிடாய் சுழற்சியைத் தூண்டி, கர்ப்பத்தைத் தடுக்கிறது. இந்த ஹார்மோன் களைத்தான் பெரும்பாலான கருத்தடை மாத்திரைகள் தருகின்றன. அதே ஹார்மோன்களை சருமத்தின் வழியே மெல்ல மெல்லச் செலுத்துவதுதான் இந்த பேட்ஜ்களின் வேலை. இது தற்போதுதான் இங்கே அறிமுகம் ஆகியுள்ளது. இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது, எந்த அளவுக்கு உறுதியாக கர்ப்பத்தைத் தடுக்கும் என்பதெல்லாம் தெரியாததால் இன்னும் டாக்டர்கள் பெருமளவில் பரிந்துரைக்கத் தொடங்கவில்லை. 90 கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்ட பெண்களுக்கு இந்த பேட்ஜ்கள் வேலை செய்யாது என்று ஒரு பொதுக்கருத்து உண்டு. எனவே நேரில் ஒரு மருத்துவரை சந்தித்து, உங்கள் உடல்வாகுக்கு அது சரிப்படுமா என்று பரிசோதித்துவிட்டு பயன்படுத்துவது நல்லது!


நமது போட்டோவையே தபால் தலையில் இடம் பெறச் செய்யும்படி ஒரு திட்டம் இருக்கிறது என்கிறார்கள். அப்படி என் படம் பொறித்த தபால் தலையைப் பெற என்ன செய்ய வேண்டும்?
- ராமமூர்த்தி, ஈரோடு.




பதில் சொல்கிறது பிளாட்டலிக் பீரோ, தலைமைத் தபால் நிலையம், சென்னை‘மை ஸ்டாம்ப்’ என்கிற பெயரில் தமிழகத்தில் அறிமுகமாகியிருக்கும் இந்தத் திட்டம் ஏற்கனவே டெல்லி, ஐதராபாத் போன்ற இடங்களில் நடைமுறையில் இருப்பதுதான். அஞ்சல்துறையின் பயன்பாட்டை மக்களிடம் அதிகப்படுத்தவே இந்தப் புதுமை முயற்சி.

இந்தத் திட்டத்தின்படி, இந்தியக் குடிமகனாக இருக்கும் யாரும், தங்கள் புகைப்படத்துடன் அஞ்சல் தலை பெற முடியும். சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்கள் புகைப்படத்துடன் வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஏதேனும் ஒரு அரசு அங்கீகரித்த அடையாள அட்டையுடன் மாவட்ட தலைமைத் தபால் நிலையங்கள் அல்லது சம்பந்தப்பட்ட நகரங்களின் தபால் நிலையங்களை அணுகுங்கள். அங்கு இதற்கென ஒரு விண்ணப்பப் படிவம் தருவார்கள். அதை நிரப்பி, கட்டணமாக ரூ.300 செலுத்தினால் போதும்.

அடுத்த இரு வாரங்களில் ரூ.5 மதிப்புள்ள அஞ்சல் தலை தங்களது புகைப்படத்தோடு பதிப்பிக்கப்பட்டு, 12 ஸ்டாம்புகள் அடங்கிய ஒரு அட்டை தங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். அந்த ஸ்டாம்புகளை எந்தக் கடிதப் போக்குவரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னொரு முக்கிய விஷயம் - யார் ஸ்டாம்ப் வெளியிட வேண்டுமென விரும்புகிறார்களோ, அவர்கள் நேரடியாக அணுக வேண்டியது அவசியம். ‘பிடித்தமானவர்களுக்கு’, ‘இறந்து போன தாத்தாவுக்கு’ என்கிற ரீதியில் இன்னொருவருக்குப் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படுவதில்லை. இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு 044-28543199 என்கிற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.