ரிஷபம் : பணம் கொழிக்கும்



 


  கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து உங்களை கசக்கிப் பிழிந்த குரு பகவான், 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2ம் வீட்டில் அமர்வதால் வறண்டு போயிருந்த பணப்பை ஓரளவு நிரம்பும். பிரச்னைகளாலும், ஏமாற்றங்களாலும், அவமானங்களாலும் சுருங்கியிருந்த உங்கள் முகம் மலரும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். குடும்பச் சூழ்நிலை குதூகலமாகும்.

 

வாகனத்தை மாற்றி புதிது வாங்குவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்கும் அளவிற்கு பணம் வரும். மனைவிக்கு இருந்த மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவு எல்லாம் சரியாகி வாரிசு பிறக்கும். எதிரியைப் போல பார்த்த எதிர்வீட்டுக்காரர் அவசரத்திற்கு ஓடி வந்து உதவுவார். பணம் வாங்கிக் கொடுத்ததாலும், சாட்சிக் கையெழுத்திட்டதாலும், நீதிமன்றம் வரை சென்று நிலைகுலைந்தீர்களே! இனி வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். பெரியநோய் இருப்பதை போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள், கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களிடமிருந்து விலகுவீர்கள்.

 

குரு பகவான் ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலை விரிவுபடுத்த கடன் கிடைக்கும். உத்யோகத்தில் ஏற்பட்ட மறைமுக அவமானங்களும், எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிட்டும். 


    28.5.2013 முதல் 25.6.2013 வரை செவ்வாயின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். 26.6.2013 முதல் 28.8.2013 வரை, மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகுவின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் புதியவர்களால் அதிரடி முன்னேற்றம் உண்டு.

 29.8.2013 முதல் 12.11.2013 வரை குரு தன் நட்சத்திரத்தில் செல்வதால் தவிர்க்க முடியாத செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலைகளும், சிறுசிறு விபத்துகளும் வந்து நீங்கும். பணவரவு குறையாது. 13.11.2013 முதல் 26.1.2014 வரை குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை பொங்கலிட்டு வணங்குங்கள். இயலாதவர்களுக்கு காலணி வாங்கிக் கொடுங்கள்.