மிதுனம் : நிதான ஏற்றம்



 

இதுவரை உங்கள் ராசிக்கு 12ல் அமர்ந்து பணப்பற்றாக்குறையை ஏற்படுத்தினாரே! 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக தொடர இருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டும். குருசந்திர யோகம் இந்த ஓராண்டிற்கு நிலவ இருப்பதால் தன்மானச் சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தினரின் குறைபாடுகளை பெரிதாக்காதீர்கள். 


  அவ்வப்போது தலைசுற்றலும், ரத்த அழுத்தமும் வந்துபோகும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். வழக்கு, சொத்துப் பிரச்னை தலைதூக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக இருந்தால் முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பணத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. குரு பகவான் 7ம் வீட்டையும் பார்ப்பதால் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குரு பகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை ஓயும். குரு உங்களின் 9ம் வீட்டைப் பார்ப்பதால் ஓரளவு பணவரவு உண்டு.

 யோகா, தியானம் செய்யுங்கள். மனநிம்மதி கிட்டும். முக்கிய விஷயங்களில் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அயல்நாட்டில் இருப்பவர்கள், திடீரென்று அறிமுகமானவர்களை நம்பி புதுத் தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். வேலையில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பளம் உயரும்.  28.5.2013 முதல் 25.6.2013 வரை செவ்வாயின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் வீண் செலவுகள், சிறுசிறு அவமானம், சொத்து சிக்கல்கள் வந்து செல்லும். 26.6.2013 முதல் 28.8.2013 வரை, மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகுவின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மன சஞ்சலங்கள், வீண் டென்ஷன் வரும். 

29.8.2013 முதல் 12.11.2013 வரை குரு தன் நட்சத்திரத்தில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். 13.11.2013 முதல் 26.1.2014 வரை குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.03.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் ஏமாற்றம், பணப்பற்றாக்குறை ஏற்படும்.


    பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். தாயை இழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்.