கவிதைக்காரர்கள் வீதி




உதிர்தல்  
உதிர்வு
பூவிற்கு
இறப்பா? விடுதலையா?

- கவி கண்மணி, கட்டுமாவடி.

இறுதி
ஏதோ ஒரு உயிரின்
இறுதி இருக்கிறது,
சிலந்தி வலைப்பின்னலில்!
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

பிரியம்
கடைசியாய்
ஒருமுறை பேச முயன்று
தவறிய கைபேசி அழைப்பில்
தொக்கி நிற்கிறது,
தற்கொலையான
அக்காவின் பிரியம்!
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

ஊர்வலம்
இறந்த பூச்சியை
ஊர்வலமாக
அழைத்துச் சென்றன
எறும்புகள்.
- ப.மதியழகன், மன்னார்குடி.

சதி
மரங்களைக் கொன்றோம்,
கூடவே இறந்தது
மழை!
- அ.கோ.விஜயபாலன், திருவாரூர்.

குரல்
அப்பாவின் அஸ்தி கரைத்த
ஆற்று நீரில் மூழ்கிக்
குளித்தபோது
‘‘ரொம்ப நேரம் தண்ணிக்குள்ளே
மூச்சடக்கி இருக்காதே’’
என்ற குரல்
கேட்பது போலவே இருந்தது.
- வஸந்த் பூபதி, வெள்ளாங்கோவில்.